THIRUPPAAVAI 15 J K SIVAN

அழகிய ஆழ்வாரே ,  ஆண்டாளே!  – #நங்கநல்லூர்_J_K_SIVANதிருப்பாவை
மார்கழி 15ம் நாள்.
15. ”நானே தான் ஆயிடுக”

கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். இது அந்த காலத்தில் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவம். ஆனால் இப்போது அந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம் போய் விட்டது. பக்தி, கோவில், பண்பு, பரோபகாரம்  என்ற  குணங்கள்  ஒருகாலத்தில் அனைவரையும் இணைத்திருந்த நிலை மறைந்து சுயநலம் அங்கே  குடி  கொண்டு  விட்டது. நகரத்தின் நரக வாழ்க்கை கிராமங்களையும் பிடித்துக் கொண்டு இடம் பெயர்ந்து விட்டது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயம் அப்படி இல்லை.
ஆயர்பாடி எனும் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு நாளும் ஊரில் இதே பேச்சு.
”அந்த படு சுட்டி, குட்டி, ஆண்டாள் எவ்வளவு பக்தி பூர்வமாக, உற்சாகமாக, கண்ணனைத் துதித்து வழிபடுகிறாள்.    ஊரி  லுள்ள மற்ற பெண்களை எல்லாம் விடியற் காலையில் எழுப்பி நீராடி பாவை நோன்பைப் பாங்காகச் செய்ய வைக்கிறாள்”

ஆண்டாளின் மேல் மட்டற்ற அன்பும் பாசமும் அனைத்து கோப கோபியரிடத்திலும்  காணப்பட்டது.
வைதேகியின் வீட்டு வாசலில் ஆண்டாள் நிற்கிறாள் . இன்று மார்கழி 15ம் நாள். ஒரு வார்த்தை முன்பே சொல்லி வைக்கி றேன் ஜாக்கிரதை. வைதேகி பொல்லாத வாயாடி!
“வைதேகி, வாடி வெளியே, நேரமாச்சு!”
ஆண்டாள் குரல் வைதேகிக்கு உள்ளே கேட்டது. ஆனாலும் வைதேகி உள்ளிருந்தபடியே பதில் குரல் கொடுக்கிறாள்:“ஆண்டாள், உன்னை பத்தி எனக்கு நிறையவே தெரியும், உன் அழகு, பேச்சு, பாட்டு, சாமர்த்தியம், பக்தி எல்லாமே. ஏண்டி இவ்வளவு சீக்கிரமே வந்து என்னை எழுப்புகிறாய். மற்ற எல்லாரும் வந்துவிட்டார்களா? எத்தனை பேர் உன்னோடு இருக்கிறார்கள்? மற்றவர்களும் வந்து சேரும் வரை என்னை இன்னும் கொஞ்சம் தூங்க விடேன்”
“வைதேகி, எல்லாருமே வந்தாகிவிட்டது. யமுனை நதிக்கும் கிளம்பி நடந்தாய் விட்டது. . இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானையை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனைப் பற்றி நீ அடிக்கடி ”கஜ ஸம்ஹாரா ” என்று நீட்டி இழுத்து பாடுவாயே அதை நாங்கள் எல்லோரும் கேட்க வேண்டும். ஆகவே நீ உடனே அதைப் பாட சீக்கிரமாக எழுந்து வெளியே வாடி”
யாரிடம் என்ன சரக்கு இருக்கிறது என்று ஆண்டாளுக்கு நன்றாகத் தெரியும். அதை உபயோகித்து தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்விப்பதில் அவளுக்கு நிகர் அவளே தான். படுக்கையில் கிடந்த அந்தப் பெண்ணுக்குப்  பாடப்  பிடிக்கும். எழுந்தாள். கூட்டத்தில் சேர்ந்தாள்,யமுனைக்கு நடந்தார்கள், நீராடினார்கள். பாடினார்கள். வைதேகி சிறப்பாக பாடினாள்.  கிருஷ்ணனே அவள் பாட்டைக் கேட்டு மயங்கினான். அனைவரும் திருப்தியாக அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பினர்.

ஆயர் பாடியில் நம் வேலை முடிந்து இனி வில்லிப் புத்தூருக்குச் சென்று அங்கே நடப்பதையும் பார்க்க வேண்டாமா?
ரங்கமன்னார் கோவிலிலிருந்து யாரோ ஒருவர் அதி காலையிலேயே வந்துவிட்டார். பெரியாழ்வார் தனது மகள் கோதை இயற்றும் திருப்பாவை பாசுரங்களை பற்றிச் சொன்னதில் இருந்து அந்த வைணவருக்கு பரம சந்தோஷம். தினமும் விஷ்ணு சித்தரி டமிருந்து அன்றைய தினத்துக்கான பாசுரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மகிழ்வார். இன்று நேரிலேயே கோதை பாடுவதைக் கேட்க அவள் வீட்டுக்கே விட்டார்.
”கோதை, ரங்க பட்டருக்கும் இன்னிக்கு  நீ எழுதிய பாட்டை ஒரு தடவை பாடிக் காட்டம்மா. ரொம்ப ஆர்வமா கேட்க காத்தி ருக்கிறார். அந்த சாக்கிலே நானும் இன்னொரு தரம் சந்தோஷமா அதைக் கேட்கிறேனே.”
கோதை அமர்ந்தாள் . எதிரே இருந்த ஓலைச் சுவடியைப் புரட்டினாள் . அன்று அவளால் இயற்றப்பட்ட பாசுரம் அவள் குரலில் வெளியேறி அந்த நந்தவனத்தில் இருந்த மரம் செடி கொடிகளும் ஆர்வமாக கேட்ட பாசுரம் இது தான்:
”எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்”
”ரொம்ப ஆச்சர்யம். ஸ்வாமி, உங்க பொண்ணு, நிச்சயம் மனுஷி இல்லே. தெய்வப் பிறவி. சாக்ஷாத் அந்த மஹா லக்ஷ்மி தாயாரே வந்து பொறந்திருக்கா ” என்று தான் நிச்சயமாக தோன்றுகிறது. இதிலே பொருந்தி யிருக்கிற உள்ளர்த்தத்தை வழக்கம் போல நீங்களே அடியேனுக்கு சொல்லணும். எனக்கு புரிஞ்சிக்கிற சக்தியில்லை ”
”சுவாமி எனக்கு புரிஞ்சதை சொல்றேன்:
ஒருத்தர் கிட்டே ஒரு நல்ல குணம், திறமை, சாமர்த்தியம் இருந்தா அதைப் போற்றணும். ஆயர்பாடியிலே எந்த பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தாளோ, அவள் கிளி மாதிரி குரல் உடையவள். நன்றாக பாடுபவள். நீ பாடினால் அந்த கிருஷ்ணனே நேரில் வந்து கேட்பவ னாயிற்றே. நீ வந்தால், பாடினால், அவன் வந்து கேட்டால், மனம் மகிழ்ந்தால் அனைவருக் கும் அல்லவோ அந்த மாதவனின் அருள் கிட்டும் என்று ஆண்டாள் மற்றவர்களுக்கு சொல்கிற மாதிரி இந்த பாசுரம் அமைஞ்சிருக்கு”
”விஷ்ணு சித்த சுவாமி, லோக க்ஷேமத்துக்காகவே தான் உங்க பொண்ணு கோதை, இதைப்  பாடியிருக்கா. முதல்லே, நீங்க எல்லோரும் வந்தாச்சா என்று போய் எண்ணுங்கோ. நான் இப்போ எதுக்கு வரணும். என்னை எழுப்பாதேங்கோ” என்று எதிர்த்து அடம் பிடித்த பெண் அப்பறம், தானே முதல்லே, ஆண்டாளோடு நோன்புக்கு வந்தாளே இதற்கென்ன அர்த்தம்?
”ஒரு வைஷ்ணவன் தான் செய்வது தவறு என்று உணர்ந்த மறுகணமே பெருந்தன்மையோடு அதை ஒப்புக்கொண்டு பிராயச்சித்தமாக தன்னைத் திருத்திக் கொள்பவன். மற்றவர் மேல் அதிக அன்புடையவன். அவர்களை மதிப்பவன். சரணாகதி அடைபவன். இல்லையென்றால் விஷ்ணு சம்பந்தப்பட்ட வார்த்தையான ”வைஷ்ணவன்” என்ற பெயர் பொருத்தமே அவனுக்கு இருக்காதே”
” ராமன் காட்டுக்குச் சென்றதற்கு தன் தாய் கைகேயியோ, கூனியோ காரணம் இல்லை, நான் தான்’ என்று வலிய பரதன் ஒப்புக்  கொண்ட மாதிரி தான் இது. இதைத் தான் ”நானே தான் ஆயிடுக” என்று அந்தப் பெண் கூறுகிறாள் என்று இந்த கோதை எழுதியது அதி அற்புதம்’ என்று புகழ்கிறார் ரங்கபட்டர் .
கோவிலில் மணி அடித்தது. வந்தவர் சென்று விட்டார். போகும்போது அவர் தனக்குள் முணுமுணுத்தது நம் காதிலும் விழுகிறது:
‘ஆண்டாள், இந்த பாசுரத்தில் கண்ணன் குவலயாபீடம் என்கிற பலம் கொண்ட மத யானை யையும், கம்ச சாணுரர்களைக் கொன்றதையும் எதற்கு இங்கு உதாரணம் காட்டுகிறாள்?
ஒருவேளை உலகில் பிறந்த  நம் ஒவ்வொருவருக்குள்ளேயும், காம, க்ரோத, லோப, மோக, மத குவலயாபீடங்கள், கம்சர்கள், சாணுரர்கள் இருக்கிறார்களே அந்த கிருஷ்ணனைத் துதி பாடி அவனிடம், ”அவர்களையும் கொல்லப்பா என் செல்லப்பா” என்று வேண்டிக் கொள்ளவே தான் ”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *