ஹே ஸ்வாமிநாதார்த்த பந்தோ. நங்கநல்லூர் J K SIVAN
அருள்கவி அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடாத நாவும் கேட்காத செவியும் இருந்தென்ன பயன்? ஆமாம். வாஸ்தவமாகவே மனதை உருக்கும் திருப்புகழில் இது மிகவும் பிரபலமான ஒரு பாடல். ஒரு சிலநாட்களாக கண் திறந்து பார்க்க முடியாத நேரம், உடல் உட்கார்ந்து எழுத உதவாத நேரம், செவி ஒன்றே எனக்கு அப்போது ஆனந்தமாக சில அற்புத பாடல்களை படுத்துக் கொண்டே ரசித்து ருசிக்க முடிந்து உதவியது.. நேரத்தை அற்புதமாக அப்படி செலவழித்தேன். அப்படிக் கேட்ட எண்ணற்ற பாடல்களில் திருப்புகழ் பாடல்களும் பல. அவற்றில் ஒன்று இது.
பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய …… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய …… மணவாளா
காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு …… மருகோனே
கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட …… அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு …… சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு …… மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி …… லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல …… பெருமாளே.
பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும், அணிந்த ஜடாதாரி,சிவபிரான் அருளிய குமரேசனே,
சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி, குறமகளாகிய வள்ளியின் பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, பிரிக்கப்பட்ட ஒரு விழியை காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய
ஸ்ரீராமர் எனும் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, யமன் என்னை அணுகாத படி, உன் இரு பாத கமலங்களில் வழிபடும் புத்தியை எனக்கு அருள்வாயாக.
ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும் தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, நடனம் ஆடும் மயில் மீது ஏறி தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர காட்சி தருகின்ற இளையவனே, மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்
நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, சூரனின் உடல் வீழ, கடல் வற்றிப்போக, ஞான வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.
டாக்டர் S ராமநாதனை அறியாதவர்கள் சங்கீத உலகத்தில் கிடையாது. ஒவ்வொரு க்ரிதியையும் ஆழ்ந்து அலசி ராகம் தாளம் பாவம் தப்பாமல் அளிக்கும் வெகு சிலரில் ஒருவர். அவர் பாடிய இந்த திருப்புகழ் என்னை கவர்ந்தது. அறுபடை வீட்டில் ஒன்றான சுவாமிமலை, திருவேரக , ஸ்வாமிநாதன் மூடிய என் கண்ணில் தெரிந்தான். இது தான் நான் கேட்ட பாடலின் லிங்க் https://youtu.be/08X4YgSIKeA