ஸௌந்தர்ய லஹரி 44/103 – நங்கநல்லூர் J K SIVAN
44 சிந்தூர அழகி
तनोतु क्षेमं नस्तव वदनसौन्दर्यलहरी- परीवाहस्रोतःसरणिरिव सीमन्तसरणिः ।
वहन्ती सिन्दूरं प्रबलकबरीभारतिमिर- द्विषां बृन्दैर्बन्दीकृतमिव नवीनार्ककिरणम् ॥ ४४॥
tanōtu kṣēmaṃ nastava vadanasaundaryalaharī- parīvāhasrōtaḥsaraṇiriva sīmantasaraṇiḥ ।
vahantī sindūraṃ prabalakabarībhāratimira-dviṣāṃ bṛndairbandīkṛtamiva navīnārkakiraṇam ॥ 44 ॥
தனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர த்வஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 44
‘சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத்கசா’ என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குப் பொருள் கூறும்போது பாஸ்கரராயர் “புஷ்பங்களின் வாசனையை விட்த் தேவியின் கூந்தலுக்கு இயற்கையாகவே அதிக வாசனை இருப்பதால் அப்புஷ்பங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டும் தரிக்கப் பட்டதாகக் கூறுகிறார். தேவி சூடிக்கொண்டதால் புஷ்பங்களுக்குப் பெருமை.
நெற்றியில் குங்குமம், அதுவும் சுமங்கலிகள் நெற்றியில் மேலே நடு வகிட்டில் அணிந்திருப்பது, பெண்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் தரும் என்பதோடு சமூகத்தில் அன்னையின் அந்தஸ்து, பெருமை, மரியாதை, அவளது காருண்யம் அனைத்தையும் உணர்த்துவது. அம்பாளின் நெற்றி வகிட்டில் அவள் குங்குமம் அணியும் வகிட்டைப் பற்றி ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார்.
”பராசக்தி, உன்னுடைய முகத்தின் , சுந்தரவதனத்தின் பேரழகு, எனும் பெரிய வெள்ளப்பெருக்கு, வழிந்தோடும் அருவிப்பாதை மாதிரி உள்ளது உன் வகிடு. கன்னங் கரேல் என்ற அடர்ந்த பலம் மிகுந்த கேச பாரத்தின் இருளாகிய சத்ருக் கூட்டத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட உதய சூரியனுடைய ஒளி போல இருக்கிறது உன் வெள்ளைநிற வகிட்டில் இருபுறம் அதன் கரை போல இருக்கும் கேசம். நீ அணிந்துள்ள சிந்தூரம் வகிட்டை அலங்கரிப்பது சூரியன் போல் சிவந்து கண்ணைப் பறிக்கிறது. லோகத்துக்கே க்ஷேமத்தை அளிப்பது. இந்த ஸ்லோகத்தில் தான் முதன் முதலாக ஸௌந்தர்ய லஹரி என்ற பெயர் வருகிறது. அதுவே ஸ்தோத்ரத்தின் பெயராகி விட்டது.
உதிக்கின்ற செங்கதிருச்சித் திலக முணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழுத்துணையே –
அபிராமி அந்தாதியிலும் இந்த பாடல் அம்பாளின் சிந்தூரத்தை மாணிக்கம், சிவந்த மாதுளை, கமலமலர், வகிடு வெண்மையாக பளிச்சென்று ஒளிரும் மின்னல்கொடி என்று வர்ணிக்கிறார்.
கருமையான கேசக் காடு, இருள், மாயை, அஞ்ஞானம். நம்மை சூழ்ந்து கொண்டிருப்பது. அம்பாளைச் சரணடைந்
தால் சூரிய ஒளி போன்று அவை விலகும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 632வது நாமம் ”சிந்துர திலகாஞ்சிதா” என்று அவள் சிந்தூர திலகம் அணிந்து மிளிர்பவள் என்று போற்றுகிறது.