ஸௌந்தர்ய லஹரி 7/103 நங்கநல்லூர் J K SIVAN
7. தேவியின் ஸ்வரூபம்
क्वणत्काञ्चीदामा करिकलभकुम्भस्तनन ता परिक्षीणा मध्ये परिणतशरच्चन्द्रवदना ।
धनुर्बाणान् पाशं सृणिमपि दधाना करतलैः पुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका ॥ ७॥
kvaṇatkāñchīdāmā karikalabhakumbhastananatā parikṣīṇā madhyē pariṇataśarachchandravadanā ।
dhanurbāṇān pāśaṃ sṛṇimapi dadhānā karatalaiḥ urastādāstāṃ naḥ puramathiturāhōpuruṣikā ॥ 7 ॥க்வணத் காஞ்சி தாமா கரிகலப கும்ப ஸ்தன நதா பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வதனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா
தேவி பாகவதம், லலிதா சஹஸ்ரநாமம், மூக பஞ்சசதி ஸ்தோத்திரங்களை எல்லாம் படிக்கும்போது நம் கண் முன் தோன்றும் அம்பாள் சௌந்தர்யா லஹரியில் இன்னும் விஸ்தாரமாக தோன்றுகிறாள். ஸாக்ஷாத் காரமாக அவளை தரிசிக்கும் பாக்யம் பெற்ற ஆதி சங்கரர், மஹா பெரியவா போன்றவர்கள் வாக்கில் அவளை நாமும் அற்புதமாக தரிசிக்கிறோம்.
காலில் சலங்கைகள் கிலு கிலுவென்று ஒலிக்க, மெல்லிய இடுப்பில் பளபளவென்று தங்க ஒட்டியாணம் மினு மினுக்க, அழகிய ஈடற்ற அங்க லாவண்ய தேஹ காந்திகொண்டவளும் பெண்மைக்கே உரித்தான சற்று வணங்கிய முதுகு வடிவுடையவளும், சரத் காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற காந்த சக்தி கொண்ட முகம் படைத்தவளும், கைகளில் கரும்புவில் கொண்டவளாய், புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தியவளாக, த்ரிபுரத்தை நெற்றிக் கண் தீயினால் எரித்த பரமசிவனுடைய ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தியே , பரமேஸ்வரியே, என் முன் காட்சி தந்து அருள்புரிவாய் தாயே.
மேலே சொன்ன வர்ணனை மணிபூரக சக்கரத்தில் தேவி எந்த ரூபத்துடன் பிரகாசிக்கிறாளோ அதை பிரதிபலிக்கிறது.
மேருதண்டம் என்னும் முதுகெலும்பிற்குள் ஸுஷும்னா என்ற நாடி ஸூக்ஷ்மமாக இருக்கிறது. இதன் அடியில் மூலாதார சக்கரமும், அதற்கு நாலு விரற்கடைக்குமேல் ஸ்வாதிஷ்டானமும், அதற்குமேல் தொப்புளுக்கு எதிரில் மணிபூரகமும், ஹ்ருதயத்துக்கு எதிரில் அநாஹதமும், கண்டத்துக்கு எதிரில் விசுத்தியும், புருவ மத்தியில் ஆஞ்ஞா சக்கரமும், சிரஸின்மேல் ஸஹஸ்ரார சக்கரமும் உள்ளன என்பார்கள்.
மணிபூரகத்தில் த்ரிபுராந்தகனான காமேசுவரனுடைய ஜீவநாடியாக பரமேஸ்வரி திகழ்கிறாள் என்பது ப்ரஸித்தம் .
“மன்மதனுக்கும் கரும்புவில், அம்பாளுக்கும் கரும்புவில்; அவனுக்கும் பஞ்சபாணம் புஷ்பங்கள் தான். அம்பாளுக்கும் அதே அஸ்திரங்கள் தான்.
மூக பஞ்சசதியில் மூக கவி “உன்னுடைய கடாக்ஷம் சிவனிடம் மோஹத்தை உண்டுபண்ணுகிறது, மனுஷ்யர்களுடைய மோஹத்தை அடக்கிவிடுகிறது” என்று சொல்வது ஞாபகத்துக்கு வருகிறது. மஹா பெரியவா இதை அடிக்கடி எடுத்துச் சொல்வார்.
மணிபூரகத்திலிருந்து தேவி அனாஹத சக்கரத்தை நோக்கி எழுந்தருளுகையில் தேவி உபாசகர்கள், பக்தர்கள் காதில் அம்பாளின் கால்களில் ஒலிக்கும் சலங்கை ஒலி கலகல வென்று சப்திக்கும் என்று சொல்வார்கள்.