திருமுருகாற்றுப்படை — நங்கநல்லூர் J K SIVAN நான்காவது படைவீடு திருவேரகம்.
திருமுருகாற்றுப்படை நான்காவது படைவீடு ஆரம்பிக்கும் முன்னால் ஒரு பழங்கவிதை
ஸ்ட்ராங் காப்பி மாதிரி ஒரு சின்ன பழந்தமிழ் பாடல் ஒன்று தருகிறேன். ரொம்ப ரசிப்பீர்கள். பண்டைய தமிழகத்தில் புலவர்களால் கவிஞர்களால் தமிழ் எந்த விதத்தில் அற்புதமாக கையாளப்பட்டது. இப்பவும் கவிஞர்கள், இசை அரசுகள், சக்ரவர்த்திகள் எழுதுகிறார்கள்… ஒப்பிட முடியாத படி அல்லவா இருக்கிறது!
ஒரு தமிழ்ப் புலவர். பசி காதடைக்கிறது. கண் பஞ்சடைந்து இருக்கிறது. கால்களில் நடக்கத் தெம்பில்லை. மெதுவாக வருகிறார். சமைத்து சாப்பிடலாம் என்றால் வீட்டில் நிறைய வெங்காயம். அதுவும் ரொம்ப காய்ந்து ஈரப்பற்றே இல்லாமல் உலர்ந்து எப்படி இஞ்சி காய்ந்து சுக்காகுமோ அப்படி சுக்காகி விட்டிருக்கிறது. வேறு என்ன இருக்கிறது வீட்டில். வெந்தயம் கொஞ்சம் டப்பாவில் இருக்கிறது. அது போதாதே. சூடாக ரஸம் பண்ணி ஒரு லோட்டா குடிக்கலாம், கொஞ்சம் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். என்ன ரசம் எளிதில் பண்ண முடியும்?. சீரகம் இருந்தால் போதும். ஆஹா மிளகு சீரக ரசத்துக்கு ஈடு இணை உலகில் என்றுமே இருந்ததில்லையே.? இப்போது காய்கறி அதிக விலை என்றால், கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது சீரக ரஸம் . அதுவும் விடாது ஒரு வாரமாக மழை கொட்டும்போது சூடான சீராக ரஸம் பருப்பு துவையல் இருந்தால் தேவாம்ருதம் தான்.
புலவர் இருந்தது ஏரகம் எனும் ஊர். நக்கீரர் முதற் சங்க காலத்தில் திருமுருகாற்று படையில் பாடிய ஊர். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடிய ஊர். ஏரகம் சுவாமிமலை என்று சொல்கிறார்கள். இல்லை என்று பலர் பல ஆதாரங்கள் காட்டுகிறார்கள். கும்பகோணம் பக்கத்தில் வெகுகாலம் முன் இருந்த ஊராம். அதற்கு மேல் ஆராய்ச்சி நமக்கு வேண்டாம்.
ஏரகத்தில் ஒரு செட்டியார் முருகப்பன் என்று பேர். அவர் மளிகைக்கடைக்காரர். நமது டிபார்ட்மென்ட் ஸ்டோர் மாதிரி பலசரக்கு கடை. மூக்குப் பொடி யிலிருந்து காடா துணி கூட நாலுமுழம் கேட்டா கிழித்து தரும் வரை நிறைய சரக்கு. புலவர் செட்டியார் கடைக்குப் போகிறார்.
”வாங்க புலவரே . நல்லா இருக்கீயளா ?””ஏரக செட்டியாரே. அதை ஏன் கேக்கறீங்க. நாளு ஓடுது. உடம்பை தள்ளிக்கிட்டு போவுது. ”
”என்னா வேணும் உங்களுக்கு கேளுங்க தாரேன்”
”காஞ்சு சுக்காப் போன வெங்காயம் சுமந்துக்கிட்டு வந்திருக்கேன். அதோடு வெந்தயத்தை வச்சிக்கிட்டு என்னாத்தை பண்றது. குழம்புக்குப் போடப் பெருங்காயம் உங்க கிட்டே வாங்கிக்கிட்டு போவலாம் என்று வழியிலே தோணிச்சு. அதையும் ”சே வேணாம் போ களுதே’ ன்னு விட்டுட்டேன். வெங்காயமும் வேணாம், பெருங்காயமும் வெந்தயமும் வேண்டாம். இந்த வெங்காயம் பெருங்காயம் எல்லாம் நாளு கிழமை விரதம் இதுக்கெல்லாம் ஒத்து வராது. உதவாது. சுட சுட வெறும் சீரக ரஸம் கொதிக்க வெச்சு சாப்பிடலாமே ன்னு தோணிடிச்சி. ஏரக செட்டியாரே , சீரகம் கொடுங்கய்யா. வேறெதுவும் வேண்டாம். செட்டியாரிடம் புலவர் பாட்டாக கேட்கிறார். “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? – மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே!”
செட்டியாரையும் பாட்டையும் மேலெழுந்தவாறு படித்தால் ஒருவன் வெங்காயம் வெந்தய குழம்பு வேண்டாம், செட்டியார் சீரகம் கொடுங்க, ரசம் செய்ய அதுபோதும் என்று தான் புரியும். இப்போது உள்ளர்த்தம் பார்த்தால் அசத்துகிறது.
ஏரகம் சுப்ரமணிய சுவாமி க்ஷேத்ரம். திருவேரகம் என்று பெயர். அறுபடை வீடுகளில் நான்காவது. ஒரு பக்தர் முருகனிடம் போய் கேவலம் வெங்காயம், பெருங்காயமா கேட்பார்?
”திருவேரக முருகா என்று மனமுருகி என்ன கேட்கிறார்? இந்த உடம்புக்கு பெயர் ”காயம்”. காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா…என்கிறோமே அது. இதில் இப்போது சுற்றும் தொற்று நோய் முதற்கொண்டு எத்தனையோ நோய்கள் இடம் தேடுகிறது. உடம்பு உஷ்ணமாக கோடை வெயில் போல் சுரத்தில் சுடுகிறது. ஆகவே வெம்மை கொண்ட காயம் வெங்காயம். இந்த உடம்பில் எத்தனையோ சமாச்சாரங்கள் கணையம், இதயம், குடல், ஈரல், என்று ஆகவே இது பெரும் காயம். எவ்வளவு பெரிய உடம்பு இருந்தாலும் உள்ளே உயிர் மூச்சு காற்று பிராணன் ஆத்மா இருந்தால் தான் மதிப்பு. இது உயிரில்லாவிட்டால் மரக்கட்டை. காய்ந்து சுக்காக போன காயம். எவரும் அருகில் கூட வரமாட்டார்கள். அய பஸ்பம் என்று ஒரு மருந்து. அதை சஞ்சீவி மருந்தாக உபயோகித்த காலம் போய் விட்டது. அந்த அய பஸ்பத்தை வெந்நீரில் சுடவைத்து வெந்த உடன் கஷாயமாக கொடுப்பார்கள். அதாலும் இந்த காய்ந்து போன உடல் பலன் தராது. வெந்த அயம் தான் வெந்தயம். வெந்தயம் ஒரு அருமையான மருந்து. இந்த உடலால் என்ன பயன். அயபஸ்பம் கூட பலன் தரவில்லை. இந்த வேண்டாத சரக்கை சுமந்து கொண்டு என்ன பயன்? ஏரகத்து முருகா எனக்கு ”சீரான அகத்தை” சீரகம் கொடு. உன்னை ஆத்ம சிந்தனையாக நினைக்கும்போதே எனக்கு உள்ளம் உருகுதய்யா……என் உள்ளம் உன்னை நாட வேண்டும். அதுவே போதும் இந்த அர்த்தம் எப்படி இருக்கிறது?
இந்த மாதிரி பழைய விஷயங்கள் சொன்னால் பிடிக்குமா?