என் மண் – நங்கநல்லூர் J K SIVAN
நங்கநல்லூரைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாலோ அல்லது உட்கார்ந்த இடத்திலேயே என் வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலோ போதும், ஏதேதோ எண்ணங்கள் விஷயங்களாக ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட 60 வருஷங்களாக என் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் மண் நங்கநல்லூர்.
ஒற்றுமையாக வாழும் குடும்பங்களின் ஒரு விஷயம் கவனித்திருப்பீர்கள். ஒரே வீட்டில் கூட்டாக இருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் ஒற்றுமை நிலவும். ஒருவர் வீட்டில் நிகழ்வது மற்றொருவர் வீட்டிலும் நிறைவேறும். அவர்களுக்குள் ரஹஸ்யங்கள் எதுவும் இல்லை. நல்லது கெட்டது எல்லாவற்றிலும் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளும் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன.
என் மனைவியின் மூத்த சகோதரியின் கணவர் மற்ற ஆபிஸ் நண்பர்களோடு சேர்ந்து நங்கநல்லூரில் ஒரு மனை வாங்கி, வீடு கட்ட ஆபிஸ் லோன் போட்டு வேலை ஆரம்பித்தார். பரங்கிமலையில் அஞ்சல் நிலைய அலுவலகத்தில் பணி புரிபவர் என்பதால் நங்கநல்லூர் அருகாமையில் இருந்த இடம் என்பதால் இங்கே மனை வாங்கினார். பொடி நடையாக நடந்தே ஆபிஸ் போக குறுக்கு வழி வயல்கள் வழியாக அரை மணி நேரத்திற்குள் பரங்கிமலை சென்றுவிடலாம்.
நங்கநல்லூரில் அப்போது வசித்தவர்கள் ஒரு கூட்டுறவு சங்கம் நிறுவி அங்கே காலி மனைகள் வாங்கி பிளாட்கள் போட்டு விற்றார்கள். நம்பர் போட்ட தெருக்கள் அவர்களால் தான் வந்தது. குறுக்கே பிரதான சாலைகள். 19வது தெருவில் என் உறவினர் மனை வாங்கி வீடு கட்டினார். கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குனராக என் சகோதரி கணவர் கிராம்ப்டன் இன்ஜினியரிங் கம்பனியில் பணி புரிந்த ஸ்ரீ C S கிருஷ்ணமூர்த்தி ஐயர் நங்கநல்லூரில் வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டவர். நான் அவரை ச் சந்தித்தபோது ”நீயும் இங்கே ஒரு மனை வாங்கேன்” என்றார். திருவல்லிக்கேணி மைலாப்பூர் வாசியான எனக்கு ஏனோ அப்போது நங்கநல்லூர் ஏதோ ஆப்ரிக்க இருண்டகண்டத்தில் காங்கோவுக்கு பக்கத்தில் இருப்பது போல ஒரு எண்ணம். மெதுவாக தட்டிக் கழித்தேன்.
என் மனைவிக்கு நாங்களும் நங்கநல்லூரில் ஒரு வீடு கட்டிக்கொண்டு வாழ விருப்பம். அதற்குப் பிறகு விடாமல் என்னை நச்சரித்ததில் விநோதமில்லை.
நங்கநல்லூரில் மனைவி சகோதரி வீட்டு கிரஹப் பிரவேசத்தில் கலந்து கொள்ள ஒரு நீண்ட பிரயாணம் செய்தோம். போனோம். போனோம். போனோம் போய்க்கொண்டே இருந்தோம். ரெண்டு வழி. ஒன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கி நடப்பது, இன்னொரு வழி அதேமாதிரி மீனம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து. ரெண்டுக்கும் நடுவில் உள்ளநங்கநல்லூருக்கு இடைவெளி கிட்டத்தட்ட ஒரே தூரம் தான்.கிட்டத்தட்ட 2 மைல். .ஆனால் பரங்கிமலையில் ஒரு வசதி. ரயில் நிலையத்தில் இருந்து குதிரை வண்டி சவாரி கிடைக்கும். நாலு ஐந்து பேர் சேர்ந்ததும் வண்டி புறப்படும். சவாரி. தலா 2 ரூபாய். வாணுவம்பேட்டை எனும் இடம் இரு பக்கமும் காஷ்மீர் பள்ளத்தாக்கு போல் பசுமையாக வயல் வெளிகள். நங்கநல்லூரில் இருந்து பார்த்தால் மேற்கே தூரத்தில் மீனம்பாக்க விமான நிலையத்தில் ஆகாய விமானங்கள் தரை இறங்குவது ஏறுவது எல்லாம் கண் கொள்ளாக்காட்சி. மின்சார ரயில் வெள்ளையாக மரவட்டை மாதிரி தூரத்தில் ஊர்ந்து செல்வது தெரியும்.
பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து ஒரே ஒரு பெரிய மண் தெரு மேடவாக்கம் பிரதான சாலை என்று இப்போதுள் ளது தான். மேலே சொன்ன வண்டி மாடுகள், குதிரை வண்டிகள் தான் அந்த சாலையில் அப்போது போகும். நடந்தே குறுக்கே வயல்களைக் கடந்து வந்து நங்கநல்லூர் அடையலாம்..
அப்போதெல்லாம் சென்னை விமான நிலையம் மீனம்பாக்கத்தில் இருந்தது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே ஒரு மண் தெரு கிழக்கே வளைந்து செல்லும். அதில் நுழைந்தால் ரயில்வே கேட் வழி மறிக்கும். தாம்பரத்துக்கும் , பீச்சுக்கு இடையே ரயில்கள் ஓடம். வெளியூர் ரயில்கள் எழும்பூருக்கு வந்து போய் கொண்டிருக்கும். ஒருமணி நேரமாவது காத்திருந்தால் தான் கேட் திறப்பார்கள். வாகனங்கள் கேட் திறக்க ரெண்டு பக்கமும் காத்திருக்கும். இருசக்கர சைக்கிள் ஓட்டுபவர்கள், நடப்பவர்கள், கேட்டின் கீழே குனிந்து தண்டவாளங்களை ஜாக்கிரதையாக கடந்து அந்த பக்க கேட்டுக்குள் குனிந்து க்ராமத்துக்குப் போவோம்.க்ராமத்தின்பெயர் பழவந்தாங்கல். ஒரு நீண்ட தெரு வளைந்து நங்கநல்லூருக்குள் கொண்டு விடும். இப்போதும் அந்த தெரு ஒரு வழிப் பாதையாக இருக்கிறது. நங்கநல்லூர் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. ரயில் தண்டவாளம் கேட் இருந்த இடம் பூமிக்கடியில் சுரங்க பாதையாகி இப்போது மழைக்காலத்தில் பெரிய ஏரியாக சில சமயம் காட்சி அளிக்கிறது.
நங்கநல்லூரில் பச்சை வயல்களுக்கிடையே பல காலனிகள். அதில் பெரிய காலனி நங்கநல்லூர் கூட்டுறவு சங்க வீட்டு மனை சங்கம். அவர்கள் லே அவுட்டில் தான் தெருக்களுக்கு நம்பர். அந்த சங்கத்தில் தான் என் சகோதரி கணவர் C S கிருஷ்ணமூர்த்தி ஐயர் தலைவராக இருந்தார். அவர்கள் போட்ட லே அவுட் காலனி நிலங்கள் படபடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன. ஆகவே அதற்குத் தெற்கே இருந்த தனியார் லே அவுட்களில் விசாரித்தோம். தெற்கு நங்கநல்லூரில் சிலர் புதிதாக லே அவுட்கள் போட்டிருந்த காலம். நாயுடுகள் நிலம். ஒரு நாயுடுவின் அதிகாரம் பெற்று சுடர் சோடா பாக்டரி என்று பரங்கி மலை ரயில்நிலையம் அருகே பன்னீர் சோடா,கோலா,கலர் விற்றுக்கொண்டிருந்த அன்பர் துரைசாமி பழக்கமானார் . அவர் போட்ட லே அவுட் தான் கன்னிகா காலனி. என் மாமனாரும் ஒரு பிளாட் வாங்கி கன்னிகா காலனியில் வீடு கட்டி விட்டார். அவருக்கு அடுத்த மனையில் என் மனைவியின் இன்னொரு சகோதரியும் பிளாட் வாங்கி வீடு கட்டினாள் . நானொருவன் தான் பாக்கி.
”நீயும் இங்கே வந்துடு. ஒரு மனை வாங்குப்பா, நல்ல இடம். மனை விலை எல்லாம் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு கிரவுண்டு இப்போதெல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொல்றான். (ஆயிரம் ரெண்டாயிரம் அப்போது பெரிய தொகை) சீக்கிரம் ஒரு மனை வாங்கி வீடு கட்டிக்கொள். வசதியான இடம். கன்னிகா காலனியில் துரைசாமியின் 22-23 பிளாட்களில் இன்னும் சில பிளாட்கள் விற்கப்படாமல் மிச்சம் இருக்கிறது. சீக்கிரம் வாங்கு. நீயும் அங்கே ஒரு வீடு கட்டிக்கொண்டு வந்துவிடலாம். திருவல்லிக்கேணியிலும் மயிலாப்பூரிலும் ஒண்டுக் குடித்தனம் போதும் எனறு என் மனைவி வர்க்கம் துளைத்தது.
கன்னிகா காலனியில் பிளாட் வாங்கி சிறிதாக ஒரு வீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அதன் பின் நங்கநல்லூர் வாழ்க்கை புது அனுபவங்களைத் தந்தது. சிலவற்றை அடுத்து வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
ஒன்று மட்டும் மறக்காமல் சொல்லவேண்டும். இன்று நான் சந்தோஷமாக நங்கநல்லூரில் வாழ ப்ரதம காரணம் என் மனைவியும் அவள் சகோதரிகளும் பெற்றோர்களும் தான். என்றும் அவர்களுக்கு நன்றி செலுத்த என் மனம் மறக்காது.