ஸௌந்தர்ய லஹரி 43/103 நங்கநல்லூர் J K SIVAN
கேச வர்ணனை
धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनं घनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुम्बं तव शिवे ।
यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसो वसन्त्यस्मिन् मन्ये वलमथनवाटीविटपिनाम् ॥ ४३॥
Dhunotu dhvaantam nas tulita-dalit’endivara-vanam Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive;
Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso Vasanthyasmin manye vala-madhana-vaati-vitapinam.
துனோது த்வாந்தம் நஸ் துலித தலிதேந்தீவர வனம் கன ஸ்நிக்த ஶ்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ ஶிவே
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ முபலப்தும் ஸுமநஸோ வசந்த்யஸ்மின் மன்யே வலமதன வாடீ விடபினாம் 43
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று நக்கீரன் பரமசிவனையே கேட்டான் என்று நமக்கு தெரியும். ஆதி சங்கரர் அற்புதமான சுகந்த நறுமணம் அம்பாளின் கேசத்திற்கு உண்டு இன்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார். பரமசிவனின் இணைபிரியா அர்த்தநாரிஸ்வர பத்னியே ! மலர்ந்த கறுநெய்தல் காடுபோல் பிரகாசிப்ப தாகவும், அடர்ந்தும் வழவழப்பாகவும், மெதுவாகவும் உள்ளதுமான உன்னுடைய கேச பாரம் எங்களுடைய அக இருளை போக்கடிக்கட்டும். அதில் உள்ள இயற்கையான வாசனையை அடைய விரும்பி இந்திரனுடைய நந்தவனத்தில் உள்ள மரங்களின் புஷ்பங்கள் அந்தக் கேசபாரத்தில் வசிக்கின்றன என்று எனக்கு தோன்றுகிறது. அந்த தேவலோக நறுமண மலர்கள் தங்கள் நறுமணத்தை அம்பாளின் கேச வனத்தில் குடியிருந்து பெற்றன என்கிறார். அற்புத கற்பனை. அம்பாளின் கூந்தல் நிறம் அடர்ந்த கருப்பு என்கிறார். லலிதா ஸஹஸ்ரநாம 185வது நாமம் கூட இதை தான் சொல்கிறது.
185 ”நீலசிகுரா” — கன்னங்கரேர் என்ற கருநாக கூந்தலுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். ஆக்ஞா சக்ரத்தை கருநீல வர்ணம் என்பார்கள். பின் மண்டையில் முகுளம் பகுதியில் மேல் இருக்கும் இந்த சக்ரத்தை கேசங்கள் மறைத்து இருக்கும். இது வெளியில் பிறர் கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான் இன்றும் தலையை மழித்தாலும் சிறிய சிண்டு, சிகையாவது பின் மண்டையில் மரியாதையோடு வைத்துக்கொள்வது. அம்பாள் பக்திக்கு எடுத்துக் காட்டு.