பாப விமோசனம் – நங்கநல்லூர் J K SIVAN
நாம் நமது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்கிறோமோ, அப்படி நமது மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். வீட்டை சுத்தப்படுத்த பெருக்கி, கழுவி, துடைத்து அலங்கரித்து வைக்கி றோம். மனதை அப்படித்தான் எண்ணக் குப்பை களை பெருக்கி அகற்றி, மனதாய் நல்ல எண்ணங்க ளால் கழுவி துடைத்து பகவானின் இருப்பிடமாக அலங்கரித்து வைக்கவேண்டும். இப்படி சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமைந்துவிட வேண்டும். அதற்கு தினமும் ஐந்து நிமிடங்களாவது மனத்தை ஒருமித்து தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனென்றால் லோகம் மூழ்கும் போது நமக்குக் கைக்கொடுப்பது இந்த தியானம் மட்டுமே தான்.
பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக் காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும். பாபத்துக்கு இரண்டு சக்திகள் உண்டு . ஒன்று இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் நாம் இந்த தவற்றைச் செய்ய தூண்டுவது.
உதாரணமாக, என் அண்ணாவுக்கு மூக்குப் பொடி போடும் வழக்கம் அப்பாவைப் பார்த்து வந்தது.பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது. அதோடு நில்லாமல் நாளைக்கும் பொடிபோடுமாறு தூண்டுவது, இதுதான் பழக்க வாசனை என்பது. அப்புறம் ஒருநாள் பல வருஷங்களுக்கு பிறகு ஒரேயடியாக நிறுத்த ரொம்ப கஷ்டப்பட்டார்.
எதற்காக சொல்கிறேன் என்றால் கர்ம வாசனையை மங்க வைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற முயல வேண்டும். வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள் நம்மைப் போல் பாபிகளானவர்கள் கூட பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி றார்கள். பாபிகளை ரக்ஷிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை. நாம் பாவியாக இருப்பதாலே தான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக் கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம் தான் கொடுக்கிறோம்.
“என்னை மட்டும் சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.’ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச’ .
பயப்படாதே.உன்னை எல்லா பாபங்களிலிருந்து நான் விடுவிக்கிறேன் ” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
நாம் தைரியமாக இருப்போம். ஒன்றைக் கட்டும்போது எத்தனை சுற்றுகள் இறுகச் சுற்றுகிறோமோ, அத்தனை யையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். அப்படிச் செய்தால் சுற்று முடிச்சு அவிழும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப் பான்.
மனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய விவகாரதிலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு மஹானும், ஞானியும், பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தால், இந்திரிய சுகத்தி னால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிக மானதுதான். அதனால் தான் அதற்கு சிற்றின்பம் என்று பெயர். பரமாத்மாவோடு சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான பரம ஆனந்தம் என்று சொல்லி, சம்ஸாரத் திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பது தான் முக்கியமாக நமது மத லக்ஷியம்.