அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN
சடைய நாயனார் & இசை ஞானியார்
உலகத்தில் எத்தனையோ சிவபக்தர்கள் உள்ளனர். அதில் எத்தனையோ குடும்பங்களில் பக்தி மிக்கவையாக இருப்பதும் ஆச்சர்யம் இல்லை. அப்பா அம்மா பிள்ளை மூன்று பேருமே கோவிலில் சிலையாக நின்று நாம் வணங்குபவர்களாக எத்தனை குடும்பங்களை பார்க்க முடியும் ? அப்பா,அம்மா, பிள்ளைகள், அதாவது சிவன் உமை கந்தன் மூவரும் சோமாஸ்கந்தனாக இருப்பதோ, சிவன் பிள்ளையார், உமை ,கந்தன் நால்வருமே கோவிலில் வணங்கப்படுபவர்களாக உள்ளதும் தெரியும் அவர்கள் கடவுள்கள். தெய்வங்கள். நான் சொல்வது மனிதர்களில் அப்படிப்பட்ட ஒரு குடும்பம் பற்றி. இதுவரை தெரியாதவர்கள் இதோ தெரிந்து கொள்ளுங்கள். அறுபத்து நாயன்மார்களில் அப்பா சடைய நாயனார்,அம்மா இசைஞானியார், பிள்ளை சைவ சமய குறவர்களில் ஒருவரனான சுந்தரர்.
சிவன் அடியார்களின் சொந்தம். சிவன் பெருமை அவன் அடியார்களின் சரித்திரத்தில் மேலோங்கி நிற்கிறது.
ஆகவே தான் சேக்கிழார் பெரிய புராணத்தை நமக்களித்திருக்கிறார்.
திருநாவலூர் தமிழகத்தில் ஒரு புண்யஸ்தலம். சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டு சிவாலயம். இன்னொரு பெயர் திருநாமநல்லூர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்த க்ஷேத்ரம். புராதன கல்வெட்டுகளில் இதன் பெயர் திருத்தொண்டிஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம். ஸம்ஸ்க்ரிதத்தில் பக்த ஜனேஸ்வரம் எனப்பட்டது. பராந்தக சோழன் பிள்ளை இராஜாதித்தன் கற்றளியாக நிர்மாணித்த சிவாலயம். அதனால் அவன் பெயரும் சேர்ந்த 13ம் நூற்றாண்டு ராஜாதித்த ஈஸ்வரம்.
இக்கோயிற் கோபுரம் கி.பி. 13 நூற்றாண்டை சார்ந்தது கோபுரத்தின் மேல் ஐந்து செப்புக் கலசங்கள் சாலைவடிவில் உள்ளது. ஐந்து நிலைமாடம் உடையது. துவார பாலகர் ஐந்து நிலைமாடத்திலும் இருபுறமும் உள்ளனர். சுமார் 80 அடி உயரம் உடையது. இதனையடுத்து உள்ளே பிள்ளையார் சிலையும், பலிபீடமும் துவஜஸ்தம்பமும் உள்ளன. துவஜஸ்தம்பத்தின் முன் நந்தி உள்ளது, இது 4 அடி உயரம் உடையது. இதற்கு முன் சிறு மண்டபம் உள்ளது. இந்நந்தி கி.பி.10 நூற்றாண்டைச் சார்ந்தது.
சிவன் பெயர் பக்தஜனேஸ்வரர். கிழக்கு நோக்கிய பெரிய லிங்கம். சுந்தரர் பரவை ,சங்கிலி, ஆகிய இரு மனைவியர்களுடன் காண்கிறார். கையில் தாளம் தலையில் கொண்டை.இந்த ஆலயத்தில் தக்ஷிணாமூர்த்தி நிற்கிறார். பின்புறம் ரிஷபம். ஜடாமகுடமும் இடது காதில் மகர குண்டலமும், வலது காதில் பத்ர குண்டலமும் உள்ளன. வலது மேற்கையில் அக்கமாலையும், கீழ்க்கை காளையின் மீதும் ஊன்றி உள்ளன. இடது பக்க கைகளில் ஒன்று திரிசூலம் ஏந்தியும், மற்றொன்று ஏடு தாங்கியும் உள்ளது, காலில் வீரக்கழல்.. தொடை வரை ஆடை. 7ம், நூற்றாண்டு சிலை. சுந்தரர் அப்பா சடையனார். திருநாவலூரை சார்ந்த ஆதிசைவர் சிறந்த சிவபக்தர். மனைவி பெயர் இசைஞானியார்.
சிறிய குழந்தையாக சுந்தரர் சிவ பக்தி செல்வமாக வளர்ந்தார். சிவலிங்கம், அதற்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை, பிரசாதம் அளிப்பது, தேரில் வைத்து இழுப்பது போன்றவை தான் குழந்தியின் விளையாட்டாக இருந்தது.
ஒரு நாள் குழந்தை சுந்தரர் ஒரு சப்பரம் கட்டி, அதில் சிவலிங்கம் வைத்து தேர் மாதிரி தெருவில் இழுத்து விளையாடிக்கொண்டிருந்தது. அடிக்கடி அந்த குட்டித்த தேரை நிறுத்தி, சூடம்காட்டி, ஸ்தோத்ரம் பாடி, வாயால் மேளம் கொட்டி ஆடிக்கொண்டிருந்தது. தெருவில் அப்போது அந்த ஊர் ராஜா நரசிங்க முனையரையர் நகர்வலம் வந்து கொண்டிருந்தார், ராஜாவின் ஆள், ”குழந்தே உன் தேரை ஓரமாக இழுத்துக் கொண்டு போ, ராஜா வருகிறார்”என்று ஆணையிட்டான்.
“இங்கே கோவில் தேர் செல்கின்றது, அது போன பின் தான் உங்கள் ராஜா தேர் செல்லும் ” என்றான் சுந்தரன். குட்டிதேரை மெதுவாக இழுத்துக்கொண்டு வாயில் “டும் டும் டும்” என மேளம் வாசித்தான். ராஜாவுக்கு அந்த அழகான சுந்தர குழந்தையை பிடித்துவிட்டது.விஷயம் அறிந்து அப்பா அம்மா இருவரும் ஓடிவந்து ராஜாவை வணங்கி குழந்தை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்கள்.
”எனக்கு இந்த குழந்தை ரொம்ப பிடித்திருக்கிறது. என்னோடு அனுப்பினால் அரண்மனையில் ஆசையோடு வளர்க்கிறேன்” என்று கேட்டார் ராஜா.சடையனார் இசைஞானியார் ரெண்டு பேருக்குமே பெரும் அதிர்ச்சி. இருந்தாலும் ராஜாவிடம் சென்றால் குழந்தை கல்வி, கேள்விகளில் வீரத்திலும் சிறக்க வாய்ப்பு உண்டே. பாசத்தை விடவா அவை பெரியவை?
பெற்ற இளம் குழந்தையினை விட்டுவிட எந்த பெற்றோர் முன்வருவர்?
ராஜா புரிந்து கொண்டார்.” நான் ராஜாவாக உங்கள் குழந்தையை நான் கேட்கவில்லை. ஒரு சிவனடியாராக கேக்கிறேன். இவனை சிவபக்தி சேகரனாக வளர்க்கிறேன். தருவீர்களா?” என்று கேட்டார்.
சிவன் பெயரால் மன்னன் அடியாராய் கேட்டபின் வேறு வழி இல்லையே. ‘“மன்னா, உங்களிடம் வளரும் குழந்தை எல்லா கலைகளிலும் அறிவிலும் சிறந்து விளங்கும். ஆனால் எங்கள் விருப்பம் அவன் மிகபெரும் சிவபக்தனாய் வளரவேண்டும்.அதற்கு அவன் உங்களோடு இருக்கட்டும் ஆனால் அனுதினமும் மாலை அவன் இந்த திருநாவலூர் ஆலயத்துக்கு வரவேண்டும், பெற்றோராக அல்ல சிவனடியார்களாக அவனுக்கு நாங்களும் அவனை காண வேண்டும்”
என்று கேட்டுக்கொண்டார்கள் ..மறுநாள் முதல் மாலை வேளையில் அக்குழந்தை கோவிலுக்கு வர ஆரம்பித்தது
பட்டாடை அணிந்து, நகைகளெல்லாம் பூட்டி பூச்சூடி அலங்காரம் செய்து அது தெய்வ குழந்தையாக அங்கு வந்து பெற்றோரை கட்டி அணைத்தது
அந்நேரமும் அது சிவனடியார்க்கு கொடுக்கபட்ட குழந்தை எனும் நினைவுடன் சடையனாரும் இசைஞானியாரும் அக்குழந்தைக்கு வேதமும் பாடலும் இசையும் கற்று கொடுத்தார்கள்
குழந்தை விளையாடி விளையாடி படித்து அரண்மனை திரும்பியது. அக்குழந்தை தவிர வேறு செல்வம் தம்பதியருக்கு இல்லை குழந்தை செல்வம் உள்பட
மகனை சிவ உத்தரவுபடி பணியாற்ற சொல்லிவிட்டு கடைசிவரை திருநவாலூர் ஆலயத்தில் அடியார்களாய் பணி செய்தார்கள்.