.இந்தா இன்பம்….. நங்கநல்லூர் J K SIVAN
எங்கோ ஒரு ஆங்கில கதை படித்த குட்டிக் கதை ஒன்று மனதில் ஆழமான பதிவை உண்டாக்கியது. ஆமாம். சில சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதில் மறக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு நம்மை ஆக்ரமிக்கக் கூடியவை. என்னைப் போலவே நீங்களும் கூட இந்த விஷயத்தை படித்திருக்கலாம். அந்த ஆங்கில கதையை என் வழியில் தமிழ்க் கதையாக மாற்றி நம் சகோதர சகோதரிகள் அதை படித்து நம்மைப்போலவே ரசிக்கவேண்டும் என விருப்பம்.
++
எங்கோ ஒரு மலைப்ரதேசத்தில் ஒரு ஆஸ்பத்ரி. மிக அதிகமாக உடல் சேதப்பட்ட இரு நோயாளிகள் ஒரு அறையில் படுக்கையில் உள்ளனர். வெங்கடாசலமும் அனந்தராமனும் தான் அவர்கள். அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் ஒரு படுக்கையில் இதயத்தில் ரத்த கசிவு மேலிருந்து வடிவதற்காக தலையணை உயர்த்தி வைக்கப்பட்டு அதில் சாய்ந்தவாறு வெங்கடாசலம் . எதிர்த்த பக்கம் சுவற்றைப் பார்த்தவாறு அனந்தராமன். இருவராலும் துளியும் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாது. படுத்தவாறே இருவரும் தங்கள் வாழ்க்கை, மனைவி மக்கள், சுற்றம், செய்த உத்யோகம், உலக விஷயங்கள், எல்லாம் பேசித் தீர்ப்பார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட முடியாத நிலை.குரல் தான் இணைத்தது.
ஜன்னல் ஓரம் கிடந்த வெங்கடாசலம் ஜன்னலுக்கு வெளியே தோன்றிய அழகான காட்சிகள், நீரோடை, அதில் சிறு குழந்தைகள் விடும் காகித கப்பல் விளையாட்டு, நீண்ட புல்வெளி, வித விதமான மரம் செடிகொடிகள், பூக்களை வட்டமிடும் வண்டுகள், ஓடி விளையாடும் குழந்தைகள், அழகுடன் பூத்து குலுங்கும் வண்ண வண்ணபூக்கள், கைகோத்து உலவும் காதலர்கள், நெருங்கி அமர்ந்து நேரம் மறக்க பேசும் வயோதிகர்கள் கூட்டம். பெண்களின் வண்ண வண்ண ஆடைகள், உற்சாகமாக அவர்கள் நடமாடுவது, பறவை, விலங்குகள், இன்னும் எத்தனை எத்தனையோ காட்சிகளை எல்லாம் ஜன்னலுக்கு வெளியே பார்த்துவிட்டு நண்பன் அனந்தராமனுக்கு தினம் தினம் வர்ணித்து சொல்வார்.சுவரோரம் கிடந்த அனந்தராமன். இதையெல்லாம் தினமும் கேட்டு கண்மூடி, தானே நேரில் கண்டு மகிழ்வது போல் இன்புறுவார்.
ஒருநாள் காலையில் ஆஸ்பத்ரி நர்ஸ் மீனா வழக்கம்போல் அனந்தராமன் வெங்கடாச்சலத்துக்கு மருந்துகள் கொடுத்து அவர்களை கவனிக்க வந்தபோது ஜன்னலோரம் கிடந்த வெங்கடாசலம் தூக்கத்திலேயே இரவே அமைதியாக மரணமடைந்ததைக் கண்டு அவர் உடல் அகற்றப்பட்டது.
சுவரோரம் கிடந்த அனந்தராமனுக்கு இது பெரிய ஷாக். நர்ஸ் பெண்மணியிடம் “அம்மா, என் நண்பன் வெங்கடாச்சலம் என்னை விட்டு போய் விட்டான். அவனை இழந்ததால் எனக்கு அமைதியில்லை. முடியுமானால் என்னை அவன் கிடந்த ஜன்னல் ஓர கட்டிலில் கிடத்துவீர்களா?” என வேண்டினார் . அவர் விரும்பியவாறே ஜன்னலோர படுக்கைக்கு மாற்றப் பட்டார்.
அனந்தராமன் ஆவலுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். ஜன்னலை ஒட்டிய வாறு ஒரு உயர்ந்த கான்க்ரீட் சுவர் தான் கண்ணில்பட்டது பார்க்கோ நந்திவனமோ மழையோ, செடிகொடிகளோ எதுவுமே இல்லையே.
“நர்ஸ், ஏன் இந்த சுவரை கட்டி வெளியுலக பார்வையே இல்லாமல் செய்து விட்டீர்கள். இங்கு இருந்த நதி, தோட்டம்,செடி கொடி எதையும் பார்க்க முடியாமல் செய்துவிட்டீர்களே. என் நண்பன் வெங்கடாச்சலம் எவ்வளவுஅழகாக அவற்றை பற்றியெல்லாம் தினமும் கண்டு ரசித்து எனக்கு சொல்வான்! அதைக் கேட்கும்போதே எனக்கும் அந்த வெளியுலக மனிதர்களின் சந்தோஷத்தைப் பங்கு கொள்ள முடிந்தது, எதற்கு ஆஸ்பத்திரி இப்படி ஒரு சுவரை திடீரென்று எழுப்பி இருக்கிறது? என்றார் அனந்தராமன்.
நர்ஸ் சிரித்தாள்.
”என்ன சார் சொல்றீங்க? வெங்கடாசலமா உங்களுக்கு தான் கண்ட வெளியுலக காட்சி யெல்லாம் விவரித்தார்?”நர்ஸ் மீண்டும் சிரித்தாள்.
”ஏன் மா சிரிக்கிறீங்க? “பின்னே என்ன சார்? வெங்கடாச்சலத்துக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாதே. ரெண்டு கண்ணும் ஆஸிடெண்ட்லே குருடாகி ஆபரேஷன் செய்தும் பார்வை வரவில்லையே. ஆறு மாதங்களாக குருடாகத் தானே இங்கு கிடந்தார்” என்றாள்.
”அப்படின்னா வெங்கடாச்சலம் எதுக்கு என்னிடம் தினமும் கதையளந்தார்? அடடா! அந்த மனிதரின் இதயம் இப்போது தான் புரிகிறது. ஒரு நாள் நான் எனக்கு வெளியுலக வாழ்க்கையே தெரியவில்லை. நான்கு சுவற்றுக்குள் முடங்கிக் கிடக்கிறேனே என்று அவரிடம் வருத்தமாக அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வருகிறது. என்னைச் சந்தோஷப்படுத்துவதற்கு, தான் காணமுடியாததை,யோசித்து, எல்லாம் தான் கண்டதாக கூறி எனக்கு இன்ப மூட்டினார்!!. எத்தனை அருமையான உதவும் இதயம் அவருக்கு இப்போது தான் எனக்கு புரிகிறது” மனமுருகிய அனந்தராமன் கண்ணில் காட்டாறு. கண்ணீர் அஞ்சலி!!..துன்பத்தை நாம் துய்த்து இன்பத்தை பரிமாறிக் கொள்வதில் தான் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா!கிருஷ்ணா!