SWARGA VASAL J K SIVAN

”கோவிந்தா  கோவிந்தா  கோவிந்தா”   –  நங்கநல்லூர்   J K  SIVAN
சொர்க்கவாசல்

ஆன்மீக விஷயத்தில்,  அயராத பக்தியில் ஆழங்கால் பதித்தவர்கள் தான்  ஆழ்வார்கள் என்று சொல்வதுண்டு. நாம்
எந்த விஷயத்தையும் மேலெழுந்தவாரியாக பார்த்தே  நமது காலம்  முடிந்து விடுகிறது.  எதற்குமே  அர்த்தம் புரியாமலேயே நமது   ஆயுள் முடிந்து விடுகிறது. நிறைய விஷயங்கள்  தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால்  அற்புதமான  ஆனந்தமான  அனுபவம் கிட்டுகிறது. அனுபவிக்க கொடுத்து வைத்தவர்கள்  புண்யசாலிகள்.

கோவிந்தா  என்பதற்கு எத்தனையோ அர்த்தம்.  த்வாதச நாமா  என்று  பன்னிரண்டு  பேர்கள்  விஷ்ணுவுக்கு.  அதில்  ஒன்று கோவிந்தன்.’கோ’ என்றால் பசு, ‘விந்த’  = தேடு.  கோபாலன், கோகுலம், கோவர்தனன்,  இதெல்லாமே ஆதாரத்தில் பசு சம்பந்தமான விஷயங்கள். இன்னொரு அர்த்தம்  வேதம், வாக்கு, ராஜா.  தமிழிலும்  ‘கோ’ என்ற எழுத்து   ராஜாவை, தலைவனை குறிக்கிறது.

எப்படி  சர்க்கரையையும்  இனிப்பையும்  பிரிக்க முடியாதோ அது போல்  கோவிந்தா  என்கிற பெயரையும்  காருண்யத் தையும்  பிரிக்க முடியாது. அவனைத்  தேட வேண்டாம், அவன் பெயர் சொன்னாலேயே  போதும்.  இகத்துக்குக்கும் பரத்துக்கும்  நமக்கு உதவுவது ”கோவிந்தா” எனும் அவன் நாமம் ஒன்று தான்.   ஒரு  அரசாங்க உத்தரவு, ஆணை, சட்டம் என்றால்  அதை  தவறாமல்  கடைபிடிக்க, பின்  பற்ற, நமக்கு  அந்த ஆணை  பிறப்பித்த  அதிகாரியோ , தலைவனோ, நேரில் வந்து சொல்ல வேண்டிய  அவசியம் இல்லை. அரசாங்க  முத்திரை  ஒன்றே போதும்.   அதற்கு அத்தனை அதிகாரம்.
இது மாதிரி தான்  கோவிந்தனும் அவனுடைய  நாம  மகிமையும்.    அவன் நாமத்தை  உச்சரிக்கும் இடத்தில் அவனே இருக்கிறான். அதனால் தான்  சௌகரியமாக இந்த  வசதி பண்ணி இருக்கிறான்.  எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் அவன் இருக்க முடியுமா?  என்  நாமத்தை நினை, சொல் அதுவே போதும்.   அப்போது அங்கே   நானே  அங்கே  இருப்பேன்,  நீ வேண்டியதை  நிறை வேற்றி தருகிறேன்  என்கிறான்.  கஜேந்திரனும்  திரௌபதியும், ப்ரஹலாதனும்  அப்படித்தான் அவன் நாமத்தால் பயன்பெற்றவர்கள் என்பது நமக்கே  தெரியுமே.

இந்த  கோவிந்தன் நம்மையும் அவனோடு இணைத்துக்கொள்வது தான்  வைகுண்ட ஏகாதசி உன்னதம்.
பத்தும்  ஒன்றும்  என்பது தான் ஏகாதசம், அப்படி வரும் நாள்  ஏகாதசி.   தசம் (பத்து) ஏகம்(ஒன்று ) அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்த பதினொன்றாம் நாளே, ‘ஏகாதசி’ திதி. மாதத்திற்கு இரு முறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் இது வரும். வருஷத்தில் 24 ஏகாதசிகள் என்றாலும்  மார்கழியில்  வரும் வளர்பிறை ஏகாதசி தான்  ‘வைகுண்ட ஏகாதசி. அன்று  மஹா விஷ்ணு வசிக்கும்  வைகுண்டத்தின்  எல்லா கதவுகளும் திறந்து வைத்து, யார் வேண்டுமானாலும்  வைகுண்ட தரிசனம் பெறலாம். மஹாலக்ஷ்மி அன்று அங்கே இருந்து வருபவரை வரவேற்கிறாள்.

இந்த மாதிரி ஒரு வைகுண்ட எகாதசியில் தான்  திருப் பாற்கடலை கடைந்தார்கள்  தேவர்களும் அசுரர்களும்.  அம்ரிதம் வந்தது.  லக்ஷ்மி தேவியும் வந்தாள்.  ஒரு விதத்தில் அவளது  பிறந்த நாள்  மாதிரி இது ஆகிறதில்லையா?  இன்று உபவாசம் இருப்பது  சகஜம்.
வைகுண்ட ஏகாதசி அன்று  இறப்பவன் நிச்சயம்  வைகுண்ட வாசி.   யாரையாவது  நீ  வைகுண்டம் வருகிறாயா  அப்பா, இதோ வாசலில் வண்டி நிற்கிறது என்றால், எதிர்பக்கமாக  ஓடுவோம்.  இங்கேயே  பல காலம் வசிக்க மட்டுமே  ஆசை.  அது  நடக்காது. இந்த விஷயத்தில் அவர்  ஸ்ட்ரிக்ட்.   செய்த  காரியத்துக்கு  தக்க பரிசு  தான் காத்திருக்குமே. எங்கே  வைகுண் டம் போவது?  வாடகை வீடோ, உல்லாச விடுதியோ  இந்த  உலக வாழ்க்கை கொஞ்ச காலத்துக்கு தான்.  சாஸ்வதமானது இல்லை.
கோவிந்தன் காட்டிய பாதையில் சென்றால், வைகுண்டம் நிச்சயம்.  அங்கே  பசி, தூக்கம், விழிப்பு, நேரம், காலம், பேதம், எதுவுமே இல்லை. இப்படி  அங்கே  சுகமாக இருப்பவர்கள் தான்  ‘நித்யசூரி’  கள் . எப்போதும் கோவிந்தனோடு.  ஒரு நாள் அப்படி  வாழ்வோமே  என்று நினைக்க வைக்கவே  வைகுண்ட ஏகாதசி சுவர்க்க வாசல் திறப்பு.

கோவிந்தனின் ஆரம்பமும் முடிவுமே கோதா (கோதை நாச்சியார்  என்கிற  ஆண்டாள்)  தான்.  ‘கோவிந்தா’  வில்  ‘கோதா’  அடக்கம்.  முதல் எழுத்தும் முடிவேழுத்தும்.  நம்  தலை எழுத்து  நன்றாக இருந்தால், இருக்க வேண்டுமானால்,  நாம் கோவிந்தனை நினைப்போம். மார்கழியிலாவது கோதாவைப்  பாடுவோம். அன்று  ஒரு நாளாவது உபவாசம் இருப்போம். உடலுக்கு ரொம்ப நல்லது. கோவிந்தா என்று  நம்மை அர்பணித்தால்  இனி  பூமியில் திரும்பி வரமாட்டோம். பிறவியே கிடையாது என்ற  அர்த்தத்தை வேறு மாதிரியாக உபயோகிக்க  யார்  கற்றுக்  கொடுத்தார்களோ?
” யாரூ,   கோதண்டமா  அவனுக்கா  ஆயிரம் ரூபா  கடன் கொடுத்தே.  அப்போ அது கோவிந்தா தான்?”    பணம்  திரும்பி வராது என்பதை கோவிந்தா என்று சொல்வதிலாவது பாதி புரிந்து கொண்டால் சரி. நமது பாபங்கள்   கோவிந்தா  என்று  சொல்லி அவனை வேண்டும்போது  குறைந்து நம்மிடம்  திரும்பி வராது.

வருஷத்தில் ஒருநாளாவது அவனை நாம்  அடைய  நம் முன்னோர்கள் செய்த ஏற்பாடு தான்  வைகுண்ட ஏகாதசி.   ”கோவிந்தா”   என்று வாய் நிறைய சொல்வோமே.  இதைத்தானே ஆண்டாளும் இந்த  மார்க்க சீரிஷா மாதம் (மார்கழி) யில்  வாயினால் பாடி மனதினால் சிந்தித்து என்கிறாள்.

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *