திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
மூன்றாவது அறுபடை வீடு: 3. திருவாவினன்குடி (பழனி மலை)
வரிகள் 143 முதல்176 வரை.
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் (145)
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உ யிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப் (150)
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உ யரிய பலர்புகழ் திணிதோள்
உ மைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உ யர்ந்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)
உ லகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
ஏமரு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உ யர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவின் வளியிடைத் (170)
தீயெழந் தன்ன திறலினர் தீப்பட
உ ருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உ றுகுறை மருங்கிற்றம் பெருமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உ ரியன் அதா அன்று.176
விண்ணுலக மாதர்கள் நோய் இல்லாத தேகத்தை உடையவர்கள், மாமரத்தில் கிளைகளில் புதிய இளம் தளிர்கள் இருக்குமே அந்த மாந்தளிர் நிறத்தை உடையவர்கள், மற்றும் பலர் தங்கநிறம் போன்ற சருமத்தை கொண்டவர்கள், கண்ணைப்பறிக்கும் பளபள வென்ற ஆபரணங்களை அணிந்தவர்கள், தேகவாகு கொண்டவர்கள் என்று வர்ணிக்கிறார் நக்கீரர்.
அதோ திருமால். மஹா விஷ்ணு. அவருடைய கொடி கருடன். கருடத்வஜன். அந்த கருடன் எப்படிப்பட்டது? கொடிய விஷத்தை தன்னுடை வாயில் விஷப்பையில் வெள்ளையான பற்களுக்கு அடியில் கொண்ட சர்ப்பங்கள், வேண்டியபோது குடித்தவுடன் பற்களில் உள்ள துளைவழியாக விஷம் கடிபட்ட ஜீவனுக்குள் இறங்கும். பையில் நஞ்சுகொண்டு இருக்கும் துளையுடைய வெள்ளைப் பற்களையும், நெருப்பு அனல் வீசுகிறமாதிரி உஸ் உஸ் என்று சீறிக்கொண்டு படமெடுத்து ஆடும் சர்ப்பங்கள். நினைத்தாலே நடுங்க வைக்கும் சர்ப்பங்கள். அப்படிப்பட்ட பாம்புகளை தனது பலமிக்க சிறகுகளால், கூரிய வளைந்த நகங்களால் அடித்துக் கொல்லும் வரிவரியாக உள்ள இறக்கைகளை கொண்ட கருடன். அவனைக் கொடியில் வைத்திருக்கிறார் விஷ்ணு. இன்னொருவரும் காணப்படுகிறார். நன்றாக வளர்ந்த உயரமான ரிஷபம் அதைக் கொடியில் கொண்ட ரிஷபத்வஜன், பரமேஸ்வரன். அவருடைய ஒரு அங்கமாக உமாதேவி. உமையொருபாகன். முப்புரத்தை நொடியில் எரித்த அக்னியைக் கொண்ட நெற்றிக்கண்ணன். ராக்ஷஸர்கள் அவர் பெயரைக் கேட்டாலேயே நடுங்குவார்கள். அதோ திருமால் உந்தியில் தோன்றிய பிரம்மதேவன். வேதங்களை ரக்ஷிப்பவன். மற்றவன் அதோ இந்திரன். ஆயிரம் கண்ணுடையான். நூற்றுக்கணக்கான யாகங்களை நிறைவேற் றியவன். அவனுடைய ஐராவதம் எனும் வெள்ளை யானைக்கு நான்கு தந்தங்கள். நீளமான பலம் கொண்ட தும்பிக்கை. அழகிய நடை. அதன் மீது ஆரோகணித்த இந்திரன். ஆகவே படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலை புரிபவர்களான பிரம்மா விஷ்ணு மகேஸ்வரன் தவிர தேவாதி தேவன் இந்திரன்.வருணன், சோமன், யமன், சூர்யன், சந்திரன் முதலானோர் எண்ணற்ற தேவர்கள் ரிஷிகள் முனிவர்களுடன் நான்கு திசைகளிலிருந்தும் வந்து வணங்கும் ஆறுமுகன் இங்கே பழனியில் குடிகொண்டிருக்கிறான்.பட்டப்பகல் பன்னிரண்டு மணி உச்சி வேளை வெயிலைப் போல கண் கூசும்படியான ஒளிமிக்க தேக காந்தி கொண்ட குமரன் ஷண்முகன்.முப்பத்து மூன்று கோடி தேவர்கள் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. ஒரே சமயத்தில் எண்ணற்ற நக்ஷத்திரங்கள் ஒளி வீசுகிறது போல் அல்லவா தோன்றுகிறார்கள். அவர்கள் பேச்சு இடி இடிப்பது போல அல்லவா செவியைப் பிளக்கிறது. சக்தி இழந்த எங்களை மீண்டும் சக்தி பெற்று பழையபடி நாங்கள் இயங்க நீ தான் அருளவேண்டும் என்று முருகனை, ஷண்முகனை வேண்டிக்கொண்டு அல்லவா நிற்கிறார்கள். இவ்வளவு பேரை தரிசிக்க நாம் கட்டாயம் பழனிக்கு ஒரு தரமாவது செல்லவேண்டும்.பழனிக்கு கீழே உள்ள திருவாவினன்குடியில் சில காலம் ஷண்முகன் எனும் தேவசேனாபதி தேவானையோடு குடிகொண்டிருந்தவன் என்கிறார் நக்கீரர்.
திருமுருகாற்றுப்படையில் அடுத்த படைவீடாக, நான்காவது படைவீடாக சுவாமிமலை எனும் திருவேரகத்துக்கு செல்லப்போகிறோம்.