ஸ்ரீ ராம தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN
இன்று காலை திடீர் என்று மழை பெய்தது. காலை 9.10க்கு இன்று நான் ஸ்ரீ ராம தரிசனம் என்ற 6ம் பதிவை எழுதி முடித்தேன். ஸ்ரீ துளசிதாசருக்கு ராம தரிசனம் கொடுத்ததை பற்றி ”ராம தரிசனம்” என்ற தலைப்பில் என் பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே. மேலே சொன்ன 6ம் பதிவை எழுதி முடித்த போது காலை 9.10 மணி. அதை முகநூல், வாட்சாப்,என்னுடைய BLOG எல்லாவற்றிலும் பதிவிட்டு நாற்காலியில் சாய்ந்தபோது வாசலில் ஸ்ரீராமா ஜெயராமா என்று குரல். குரல் அல்ல குரல்கள். ரெண்டு பேர் வாசலில் நின்றார்கள். சிலு சிலு என்ற மழையில் அவர்கள் உடலில் சிறு தூறல்கள். ஆகவே என் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாக கதைவைத் திறந்து கொண்டு வந்து வாசலில் மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். யார் அவர்கள் என்று பார்த்தேன்.
”ராம லக்ஷ்மணர்கள்”.
”நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்”
”தெலுங்கு பேசறவங்க. ஊரப்பாக்கம் சாமி’
”’இதென்ன வேஷம், இன்னிக்கு எதாவது ஸ்பெஷலா?”
”இல்லீங்க, தெனோமும் இது தாங்க டிரஸ்.?
”அட. இதினால் என்ன லாபம் ?”
‘எங்களுக்கு வயிறு நிரம்புதுங்க. எங்க வீட்டிலே எல்லோரும் பசியில்லாம சாப்பிடறோம்??
”அடாடா ராமன் வேஷத்துக்கே இவ்வளவு மஹிமையா.?
‘உங்க பேர் என்ன?
‘ராம கொண்டால ராவ். இவன் லட்சுமண நாராயண ராவ்..’
‘இதற்கு மேல் ஒன்றும் கேட்க எனக்கு தோன்றவில்லை. மழை தூற்றல் நின்றது. மனது நிறைந்தது. ஆளுக்கு கொஞ்சம் ரூபாய்கள் கொடுத்து அனுப்பினேன்.எப்படியெல்லாமோ பிச்சை எடுத்து பிழைக்கிற காலத்தில் ராம லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், கிருஷ்ணன் என்று வேஷம் எடுத்து பிச்சை எடுக்காமல் கையில் ஜாலராவோடு பாடிக்கொண்டு, பகவான் நாமாவை சொல்லிக்கொண்டு வாசலில் நின்றால் கௌரவம் மட்டும் இல்லை பக்தியும் ஞாபகப்படுத்தப்படுகிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது.அதெல்லாம் சரி, அது எப்படி நான் ”ராம தரிசனம்” எழுதி முடித்த அடுத்தகணமே மழை தூறல் போடவேண்டும் ராம லக்ஷ்மணர்கள் என் முன்னே தோன்றவேண்டும்… அவர்கள் வந்து சென்ற பின் வாசலில் போய் பார்த்தேன். அந்த தெருவிலேயே அவர்கள் கண்ணில் படவில்லையே…எங்கள் தெருவில் சந்தே கிடையாதே. எதிரும் புதிருமாக பத்து பத்து வீடுகள் தானே….. .