ராஜு வாத்யார் சொன்னது. – நங்கநல்லூர் J K SIVAN
மேல வீதி பாரத்வாஜ மண்டபம் பல வருஷங்களாக யாத்ரிகள், துறவிகள், தங்க வசதியான திண்ணைகள் கொண்டது. பெரிய திண்ணைகள் ரெண்டு பக்கமும் கிழக்கு மேற்கு பார்த்தவாறு வழவழவென்று கால் நீட்டி படுக்க சௌகர்யமாக இருக்கும். திண்ணைக்கு உள்ளே சத்திரம் மாதிரி. அதை பூட்டி வைத்திருப்பார்கள்.
ராஜு வாத்யார் அங்கே தான் ”தாமசிப்பார்”. தங்குவார், வசிப்பார் என்பதைஅப்படி தான் சொல்வார். அவர் தமிழில் பாலக்காட்டு மணம் வீசும். எதை சொன்னாலும் ”ஓ” ”அப்படியாக்கும்” என்ற வார்த்தைகள் அடிக்கடி வெளிவரும். நல்ல வேதாந்தி. நமது சனாதன தர்மம் நன்றாக தெரிந்தவர் என்பதால் அநேகர் அவரிடம் சந்தேகம் கேட்பார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் ஹிந்து சந்தானம் பற்றி பேசுவதால் ஒருநாள் யாரோ ஒருவர் ‘ஹிந்துயிசம்’ பற்றி ராஜு வாத்தியாரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்களை நானும் கேட்க நேர்ந்தது. என் காதில் பட்டதை சொல்கிறேன்.
”ஹிந்துயிசம் மதம் இல்லேடா, அது ஒரு வழிமுறை யாக்கும். நிறைய ஜனங்கள் பால்லோ FOLLOW பண்றது.
‘அப்போ நீங்கள் கிறிஸ்டியன், முஸ்லீம் என்கிறாளே அது இல்லையா?”
‘இல்லவே இல்லை”.
‘நீங்க யாரு?”
”நான் ஹிந்து வாக்கும்”
”அப்படின்னா என்ன?
”என் அப்பா ஹிந்து, அம்மா ஹிந்து, அதனாலே அவாளுக்கு பொறந்த நான் ஹிந்து”போறுமா? இப்படித்தான் அநேகரும் ஹிந்து வாக இருக்கோம். யாரும் எங்களை ஹிந்து வாக இரு என்று சொல்லவில்லை, கட்டாயப்படுத்தவில்லை”
”உங்க மத போதகர் யார்?”
‘ தனியா ஒருத்தரும் கிடையாது”
”உங்களுக்கு பைபிள் குரான் மாதிரி எது புஸ்தகம்?”
”யேய், தனியா ஒருக்கா எந்த புஸ்தகமும் இல்லே. ஆயிரக்கணக்கில் வேதாந்த புஸ்தகங்கள் இங்கே இருக்காக்கும் ”
‘உங்க கடவுள் யாரு?இயேசு, அல்லாஹ் மாதிரி யார் இருக்கா?
”நீ சொல்ற கிருஸ்துவ மதம், மாதிரி,முஸ்லீம் மதம் மாதிரி எங்க சனாதன தர்மம் இல்லேடா. எங்களுக்கு ஒரு கடவுளும் உண்டு, ஓராயிரம் கடவுளும் இருக்கா. ஆணாகவும் இருக்கா, பெண்ணாகவும் இருக்கா, வேறே எந்த உருவத்திலும் கருடன் ஹனுமான், ஹயக்ரீவர், நரசிம்மன் னு இருக்கா. யாரை வணங்கினாலும் நாங்க ஹிந்து தான். எந்த கடவுளையும் வணங்கா விட்டாலும் நாங்க ஹிந்துக்கள் தான். நான் தினோமும் கோவிலுக்கு போறதில்லே. எந்த விரதமும் உபவாசமும் பண்ணனும்னு கட்டாயமும் இல்லே.”
”அப்படின்னா ஹிந்துக்களுக்கு கடவுள்னா பயமே இல்லையா?”
”என்ன உளறரே, கடவுள் எப்போதும் எல்லோருக்கும் நண்பனாக்கும் , பிரெண்ட் FRIEND தான். எதுக்கு அவரைப் பார்த்து பயப்படணும்? இந்த விரதம், உபவாசம், சடங்கும் கட்டாயம் நீ பண்ணியே ஆகணும்னு அப்போ தான் நீ ஹிந்து னு எவரும் கட்டளையிட்டதில்லை. மற்ற மதங்களில் இருக்கிற கண்டிப்பு பயம், இங்கே கிடையாது”
‘ நீங்க மதம் மாறுவதில்லையா?”’
”எதுக்கு ? எந்த ஹிந்துவும் தானாகவே மதம் மாற விரும்பவே மாட்டான். ஏதாவது ஒரு திணிப்பு இருந்தால் தான் அந்த அவசியத்தினால், கட்டாயத்தினால் வேறு மதக்காரர்கள் அவனை மாற்றுகிறார்கள்.அவன் சுய விருப்பத்தை மீறி கட்டாயத்தால் மாறினவனாக தான் இருப்பான் ”
ஒரு விஷயம் சொல்லட்டுமா, நான் ஹிந்துவா இருக்கறதால என்னாலே சுயமா, சுதந்திரமா யோசிக்க முடிகிறது. எந்த கட்டாயமும் என் மேல் திணிக்கப்படவில்லை. சுயமாகவே, என் விருப்பத்தோடு நான் ஹிந்து வா இருக்கேன். ”
‘ஹிந்து மதம் என்றாலே சில உயர்ந்த கோட்பாடுகள் நம்பிக்கைகள் அவ்வளவு தான். என் தலைமேல் யாரும் உட்கார்ந்துண்டு அப்படிப் பண்ணனும், இப்படிப் பண்ணனும் னு சமூகத்திலே அதிகாரம் பண்ணதில்லை. ஏன்னு கேட்டால், இந்த ஹிந்து சமுதாயத்துக்கு, யாருமே தலைவன் இல்லை. இஸ்லாம் கிருஸ்தவ மதத்தில் இருப்பது போல் தலைமை அதிகாரி, உண்டாக்கியவர்னு ஒருத்தரும் இல்லை.”
”நீ ங்க சொல்றதைப் பார்த்தா கடவுள் நம்பிக்கை இல்லையோ என்று தோன்றுகிறதே”
”நீ புரிஞ்சுண்டது அவ்வளவு தான். என்னைப் பொறுத்தவரை பகவான், பரம்பொருள் என்று ஒன்று இருப்பதை யென்றுமே மறுத்ததில்லை. மறந்ததில்லை.
வேதமோ, கீதையோ, உபநிஷதமோ, ஸ்ருதி. ஸ்ம்ரிதியோ, கடவுள் இருக்கிறார் இல்லை என்று எது சொன்னாலும் அதெல்லாம் புரியாவிட்டாலும், இந்த பிரபஞ்சம், உலகம் என்பது யாராலோ எப்போதோ படைக்கப் பட்டது ,தானாக வந்ததில்லை, அந்த சர்வ சக்தியை பணிந்து வணங்கவேண்டும் என்ற அளவு எல்லா ஹிந்துவுக்கும் நன்னாவே தெரியும்.”
‘எதுக்கு இவ்வளோ சாமி ஏதாவது ஒரு சாமியை கும்பிடலாமே?”
‘ எங்களுக்கு சக்தி, சர்வம் ப்ரம்மம் என்ற ஒரு நம்பிக்கை, கோட்பாடு உண்டு. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தனியாக ஒரே ஒரு சொந்தமான சாமி தான் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. அவநவவன் அதை எந்த ரூபத்தில் வழிபட ஆசைப்படறானோ, பண்ணிக்கட்டுமே என்ற பரந்த மனப்பான்மை இங்கே மட்டும் தான் உண்டு.’
ஒன்னு புரிஞ்சுக்கோ. கடவுள் கொடுமையான சர்வாதிகாரி இல்லை.”
”ரொம்ப சந்தோஷம் ஐயா. கடவுள் இருப்பதை உணர்ந்தவர் நீங்கள். பிரார்த்தனை என்றால் என்ன?
‘எங்க கிட்டே ஒரு அற்புதமான பிரார்த்தனை உண்டு தெரியுமோ நோக்கு? Loka Samastha Sukino Bhavantu. Om Shanti, Shanti, Shanti,’ लोका समस्ता सुखिनो भवन्तु !!! ॐ शान्तिः शान्तिः शान्तिः !!! உலகத்திலே எல்லோரும் சந்தோஷமாக வாழணும் , எங்கும் சாந்தி, அமைதி நிலவணும் , அன்பு செழிக்கணும் இது தான் எங்க மந்திரம் நம்பிக்கை, பிரார்த்தனை”
”ரொம்ப நல்லாயிருக்கு சார் உங்க ஹிந்து மத கோட்பாடு, நம்பிக்கை, சந்தானம் எல்லாம்”
‘ யேய் , இது சந்தானம் இல்லை, சனாதனம், என்றும் அழிவில்லாதது என்று அர்த்தம். விசால மனப்பான்மை கொண்டது . தனிமனிதன் வணங்குவது, பிறரின் நலத்தை நாடும் பிரார்த்தனை. உள் மனதில் ஆண்டவனை தேடுவது.”
‘உங்க மதத்துக்கு மாறுவது எப்படி சார்?
”என்னடா இது பேத்தல்… நன்னா புரிஞ்சுக்கணும். ஹிந்து மதத்துக்கு யாரும் யாரையும் கட்டாய படுத்தி மாற்றியதாக சரித்ரம் இல்லே. அது மதமே கிடையாது. நான் தான் சொன்னேனே அது ஒரு கோட்பாடு, சனாதன தர்மம் என்று தான் அதற்கு பெயர். பண்பாடு. நல் வாழ்க்கை முறை. யாரும் யாரைக் கேட்டுக் கொண்டும் கட்டாயத்தினால் இதில் சேரவேண்டிய அவசியம் இல்லை. மனம் இருந்தால் தானாகவே மார்க்க முண்டு. கட்டாயமோ, கண்டிப்பா, அதிகாரமோ, திணிப்போ எங்கே எதுவும் யாரிடமிருந்தும் கிடையாது. அவரவர் மனம் விரும்பினால் சேர்ந்து கொள்ள வழி உண்டு”
பைபிளில் சொல்லுகிற வாக்கியம் இங்கே பொருந்தும். ‘ Kingdom of God is within you. பூஜ்யத்தில் ராஜ்ஜியம் அமைத்து புரியாமல் இருப்பவன் ஒருவன் இருக்கான். அவன் ஒவ்வொருத்தர் மனத்திலும் உண்டு”. புரிந்தால் வாழ்க்கையின் அர்த்தம் தெரியவரும். இங்கே அன்பே சிவம். ‘Isavasyam idam sarvam’ Isam ” என்று சொல்பவர்கள் நாங்கள். கடவுள் எங்கும் எதிலும் எவற்றிலும் இருப்பவன். அவனை விட்டு விலகி எவரும் எதுவும் இல்லை. உண்மையாக இரு என்று தான் அடிக்கடி இங்கே சொல்லப்படுகிறது. காலம், நேரம், உருவம் அற்ற கடவுள் நம்மை காக்கிறான் என்ற நம்பிக்கை ஹிந்துவுக்கு எப்போதும் உண்டு.
எப்போதோ நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் செய்த விஷமம் நம்மை ஹிந்து என்று அட்டையை கெட்டியாக கழுத்தில் மாட்டிவிட்டான். அதனால் தான் இத்தனை சங்கடம், சர்ச்சை. எங்கும் எதிலும் ஒன்றாகவே காணப்படுபவனுக்கு இருப்பவனுக்கு எதற்கு தனி அடையாளம்? எதிலிருந்து அவன் தன்னை தனித்து அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டும். எல்லையற்ற சமுத்ரத்துக்கு விளம்பரமோ கரையோ எதற்கு?
மதம் என்பது சிலருக்கு வியாபாரமாக ஆகிவிட்டது. பொழுது போக்காக, சுயநல லாபத்துக்காக கையாளப்படும் வஸ்து வாங்கிவிட்டது.
”நான் ஹிந்து, என்னிடம் அஹிம்சை, பிற உயிருக்கு தீங்கு செய்யாமை நிச்சயம் உண்டு. எல்லா தர்மங்களிலும் சிறந்தது அது என்று தான் சொல்வோம். Ahimsa Paramo Dharma’ என்பது எங்கள் கோட்பாடு.
சிலர் நீ கிருஸ்துவனாக இரு, முஸ்லிமாக இரு என்று சொல்லலாம். பிரச்சாரம் செய்யலாம். எங்கள் வேத நூல்கள் ”நீ மனிதனாக இரு” என்று தான் சொல்பவை. நீ அவரை பின்பற்று, இவரை பின்பற்று என்று அவர்கள் சொல்லலாம். எங்கள் வேதங்கள் ‘உன் ஆத்மாவை, மனசாட்சியை, பிரம்மத்தை பின்பற்று” என்று தான் நாங்கள் சொல்பவர்கள்.
பரம பிதா, பரமண்டலத்தில் இருக்கிறார் என்று நாங்கள் சொல்வதில்லை, உன்னுள்ளே தேடு, நீயே ப்ரம்மம். ”அஹம் ப்ரம்மாஸ்மி”என்று எங்கள் உபநிஷதம் அழகாக சொல்கிறது.
மற்றவர்களை போல் கடவுள் சோதனை செய்கிறான், மன்னிக்கிறான், தண்டிக்கிறான், உம்மாச்சி கண்ணை குத்தும் னு சொல்லக்கூடாது, அப்படி எல்லாம் குழந்தைகள் கிட்டே சொல்லாதேங்கோ” என்று பெற்றோர் களுக்கு சொல்பவர்கள். உன்னுள்ளே உன்னை வழிநடத்துகிறார். அவன் குரலைக் கேள் வழிநட. என்று தான் சொல்வோம். உன் அவஸ்தைகள், துயரங்கள், துன்பங்கள் எல்லாம் உன் காரியத்தால் விளைந்தவை ஏற்றுக்கொள் என்று சொல்பவர்கள்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இருப்பது சனாதனதர்மம். விஞ்ஞானத்தினால் முழுமையாக அறிய முடியாதது. தெய்வீகத்தை எந்த அளவுகோலால் அளப்பது?”
என்ன சொல்கிறீர்கள், ராஜு வாத்யார் சிறந்த ஞானி என்று ஒப்புக்கொள்கிறீர்களா, விஷயம் தெரிந்து நன்றாக யோசித்தவர், யோசிப்பவர், என்று என்னோடு சேர்ந்து தலையாடுகிறீர்களா?