கிருஷ்ண த்வைபாயானர். – நங்கநல்லூர் J K SIVAN அவரை மாதிரி இன்னொரு மகரிஷியை நினைத்துப் பார்க்கவே கூட முடியாது. அடேயப்பா. என்ன அசுர வேகமாக எண்ணற்ற ஆயிரம் ஸ்லோகங்களைப் பாடி எழுதி இருக்கிறார். வேதங்களை அலசி பகுத்து நான்காக பண்ணி கொடுத்திருக்கிறார். அதனால் தான் அவர் பெயர் வேத வியாஸர் என்று மனதில் நின்று இயற் பெயர் மறந்து போய்விட்டது. அவருடைய மற்ற பெயர்கள் கிருஷ்ண த்வைபாயனர் , பாதராயணர் . அவர் பெயரில் பாதராயண கோத்ரம் இருக்கிறது. அதில் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் பலர், தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் நமஸ்காரம். பகவானின் அவதாரம் வியாஸர் .
ராமாயணம், பாரதம், பாகவதம், கீதை, புராணங்கள் இன்னும் எத்தனையோ தந்தவர். அளவற்ற ஆன்மீக தெய்வீக செல்வங்களை வாரி வழங்கியவர். நாம் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், செல்வந்தர்கள். செல்வம் இருந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்கள்.
வியாஸரின் புத்திரர் சுகப்பிரம்ம ரிஷி. அப்பா எட்டடி என்றால் பிள்ளை பதினாரடி பாய்பவர். நைமிசா ரண்ய வனத்தில் ரிஷிகளுக்கு அவரும் சௌனகரும் சகலமும் சொல்லிக் கொடுத்தவர்கள் . பரீக்ஷித் மகாராஜாவுக்கு சுகர் உபதேசித்தது ஸ்ரீமத் பாகவதத்தில் சில அருமையான பகுதிகள். சப்தாஹமாக வருஷா வருஷம் பலரால் அனுஷ்டிக்கப்படுவது. அப்பா எழுதிய மஹா பாரதத்தில் விட்டுப்போனவை. தொடர்ச்சி என்று கூட எடுத்துக் கொள்ளலாம். எல்லாமே இப்போது நமக்கு அழகான புத்தகங்களாக கிடைத்துவிட்டது. புத்தகம் கூட வேண்டாம். வாட்ஸாப்ப் யூட்யூபில் கூட படிக்கலாம், கேட்கலாம், எழுதலாம், பாடலாம். பகவானின் அவதார அனுபவமாக தான் ராமாயணம் மஹாபாரதம், பாகவதம் எல்லாம் அறிகிறோம். பக்தி வளர்கிறது. ஆன்மிகம் செழிக்கிறது. சனாதனம் புரிகிறது. ரெண்டு ரிஷிகளும் ப்ரம்ம ஞானிகள்.
சூத பௌராணிகருக்கு இன்னொரு பெயர் உக்ரஸ்ரவஸ். இவர் ரோம ஹர்ஷண ரிஷியின்புதல்வர். மஹா பாரதம், புராணங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து எல்லோருக்கும் சொன்னவர். வியாசர் தலைமை யில் அவர் ஏனைய ரிஷிகளுக்கு நிகழ்த்திய உபதேச பிரசங்கங்கள் தான் நைமிசாரண்யத்தில் எதிரொ லித்தது. இந்த சூத பௌராணிகர் சுக ப்ரம்மம் கங்கைக்கரையில் பரீக்ஷித் மகாராஜாவுக்கு ஸ்ரீமத் பாகவதம் எடுத்துச் சொன்னபோது கூட இருந்து கேட்ட ஒரு மஹரிஷி.
சில ரிஷிகள் வியாசரை சில கேள்விகள் சட்டென்று கேட்டபோது பட்டென்று அவர் சொன்ன பதில் இது:’
”மகரிஷி, உலகில் ஜனங்களுக்கு எது ஸ்ரேயஸ் அதாவது மன நிறைவு தரும்?””வேறென்ன , பகவான் மேல் பக்தி அதனால் கிடைக்கும் மனத்தூய்மை தான்””சாஸ்திரங்கள் சொல்வதின் தாத்பர்யத்தில் எது மனதை தூய்மை படுத்தும்?” ”உண்மையான பக்தி””பகவான் ஏன் கிருஷ்ணன் அவதாரம் எடுத்தார்?”””ஜனங்களோடு ஜனங்களாக இருந்து லோக க்ஷேமம் பண்ண அப்படி ஒரு ஆசை. ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்கள் எல்லாமே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் தானே.””கிருஷ்ணனின் விளையாட்டுகள் எது?””எதெல்லாம் உலகில் ஜனங்களை நல்வழிப்படுத்தி நல்லோரை பாது காக்குமோ அதெல்லாம் தான் ””மத்ஸ்யாவதாரம் மற்ற அவதாரங்களின் காரணம் என்ன?””ப்ரளயத்துக்குப் பிறகு பிரபஞ்சத்தை உருவாக்குவது அதை பராமரித்து ,பாதுகாப்பது””கிருஷ்ணனின் அவதாரம் முடிந்த பிறகு தர்மம் எதை தஞ்சம் அடைகிறது””ஸ்ரீமத் பாகவதம் புராணங்களின் வாக்குகளில் தர்மம் உறைகிறது. அவற்றை நாம் அனுசரித்து பின் பற்றவேண்டும்”
இன்னும் சில எண்ணங்கள் மனதில் அப்பப்போ தோன்றும்போது அடுத்த பதிவு இடுகிறேன்.