பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN
பகவானோடு உரையாடல்
”M ” ராமகிருஷ்ண பரமஹம்ஸரை நிழல் போல் தொடர்ந்து அவர் வாக்குகளை சேகரித்தார். யார் யார் எப்போது தக்ஷிணேஸ்வரம் காளி கோவிலுக்கு வந்து, என்ன என்ன கேள்விகள் சந்தேகங்கள் கேட்டார்கள், என்ன பதில் கிடைத்தது என்பதை இருநூறு வருஷங்களுக்கு அப்புறம் கூட நமக்கு தெரியும் வண்ணம் எழுதி வைத்திருக்கிறார். அந்தக்காலத்தில் டேப் ரிகார்டர், யு ட்யூப், வாட்ஸாப்ப் எதுவுமே இல்லை. கருப்பு வெளுப்பு பிலிம் டப்பா காமிரா கூட ஒரு சிலரிடம் தான் இருந்தது. ராமகிருஷ்ணர் போன்ற உயர்ந்த ஞானியிடம் தெளிவு பெற எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
‘M. பகவான் ராமகிருஷ்ணரை கேட்கிறார்:
M ” சுவாமி உலகில் எப்படி வாழவேண்டும்?
ப: ” கடமைகளை விடாமல் செய்யும்போது கவனத்தை பகவான் மேல் வை. குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பாக சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்கு சேவை புரிவதில் தவறில்லை. நெருங்கி பழகும் நேரம் உள் மனதில் இவர்கள் எவரும் என்றும் உனைச் சேர்ந்தவர்கள் இல்லை. சந்தையில் கூட்டம். நிரந்தரமற்ற உறவு என்ற நினைவு அடித்தளமாக இருக்கவேண்டும்.
இதோ பார், ஒரு வேலைக்கார பெண்மணி காலையில் இருந்து மாலை வரை உன் வீட்டில் வேலை செய் கிறாள். உன் குழந்தைகளை அன்போடும் ஆசையோடும் பார்த்துக் கொள்கிறாள். அவர்களும் ஒட்டுதலாக அவளிடம் இருந்தாலும் அவள் மனதில் இடம் பெற்றவர்கள் ஆனாலும் அவர்கள் தமது குழந்தைகள் இல்லை என்ற உணர்வு அந்த வேலைக்கார பெண்ணுக்கு உண்டே. அவளுடைய சொந்த குழந்தைகள் மட்டுமே அவள் அடிமனதில் எப்போதும் உள்ளவர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, வேளா வேளை சாப்பிட்டார்களா, தூங்கினார்களா, பசிக்கு யார் உணவு கொடுத்தது? என்ற எண்ணங்கள் எப்போதும் அவள் மனதில் ஓடும். எப்போது வேலை முடிந்து வீட்டுக்கு போவோம் அவர்களை பார்ப்போம் என்ற ஆவலில் வேலை செய்வாள்.
ஆமை நதியில் நடமாடினாலும் அதன் எண்ணம் கரையில் தான் எப்போதோ இட்ட சினைகள் மேலே தான் இருக்கும். உன் கடமைகளை அது போல் செய்து கொண்டே மனதை கடவுள் மீது வை. கடவுள் மீது மனது செல்லவில்லை என்றால் உலக வாதனைகள் உன்னை அலைக்கழிக்கும். மீள முடியாது.
உலக ஆசா பாடங்களில் மனம் போய்விட்டால் புதை குழி தான். ஜாக்கிரதை.
பலாப்பழத்தை தோல் உரிக்க கையில் பிசின் படாமல் ஒட்டாமல் இருக்க எண்ணெய் நிறைய தடவிக்கொள்கிறோமே அதே போல தான் இதுவும். தெய்வீக எண்ணம் தான் எண்ணெய் இங்கே. தனிமை அவசியம் அப்பா. கட்டாயம் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் .
பாலை அசையாமல் உறைய வைத்தால் தான் தயிர். அப்புறம் வெண்ணை.
இறை நாட்டத்தில் மனது அசையாமல் இணையவேண்டும்.
மனித மனதை குரங்காக அலைக்கழிப்பது பொன்னும் பெண்ணும் பற்றிய எண்ணம் ஒன்றே.
உலகம் நீர். மனது பால். நீரும் பாலும் சேர்ந்தால் பிரிக்க முடியாது. ஒன்றே ஆகிவிடுகிறது. ஒன்றாக அப்படி கலந்த பின் சுத்த பால் எங்கே ?? அதை தயிரானபி ன் கடைந்தால் நீரின் மேல் வெண்ணை ஒட்டாமல் பிரியும் இல்லையா?
ஆன்ம ஒழுக்கம் பெற தனிமை தேவை. தனிமையில் தான் ஞானம் கிடைக்கும். அது தான் வெண்ணெய். அதை பெற்றால் மனம் உலகம் எனும் தண்ணீரோடு ஒட்டாது. பணம் உலக வாழ்க்கைக்கே தவிர ஆன்மீக உலகத்தில் அதற்கு மதிப்பில்லை. தேவையும் இல்லை”
M: “சுவாமி கடவுளை கண்ணால் பார்க்க இயலுமா?”
ப: ”ஆஹா நிச்சசயமாக. ஏன் முடியாது? தனிமை. பகவன் நாம உச்சாடனம். சத்தியம் அசத்தியம் பேதம் உணர்தல் அசத்திய உலகத்தோடு ஓடடாமை. இது முடிந்தால் கடவுளைகாண்பது எளிது.
M: “எந்த நிலைமையில் விதிக்கு உட்பட்டு, ஒருவன் கடவுளை காண முடியும் சுவாமி?”
ப: ”மனம் குவிந்து உருகி அவனை உன் இதயத்தில் தேடு.பார்க்கலாம். குழந்தை குட்டி மனைவி வீடு வாசல் என்று பாசமும் நேசமும் கொண்டு உருகி கண்ணீர் விட்டு பணத்தை தேடுபவன் போகாத ஊருக்கு வழி தேடுபவன். கடவுளை நாடி எவன் மனம் உருகி வாடுகிறான். தேடுகிறான்?? சொல்? பகவானை தேடல் நாடல் என்று சொன்னேனே அதை விடியற்காலையில் சூர்யோதயத்துக்கு முன் தோன்றும் அரை வெளிச்சம் என்று சொல்லலாம்.அதை தொடர்ந்து பளிச்சென்று சூரிய தரிசனம்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். நீ பகவானை தேடுவது எது போல் இருக்கவேண்டும் என்றால், இரவும் பகலும் இடைவிடாமல் நீ உலக சாதனங்கள் மேல் கொள்ளும் பற்றை போல, தாயின் குழந்தை பாசம் போல், ஒரு உத்தம மனைவி தனது பர்த்தாவை நேசிப்பது போல்., இந்த மூன்றின் மேல் உலகத்தில் வைக்கும் பற்றை அப்படியே இறைவன் மேல் வைத்தால் கடவுளை காணலாம்.
“பூனைக்குட்டிக்கு ஒன்று மட்டும் தான் தெரியும் ‘மியாவ் மியாவ்’ என்று ஈனஸ்வரத்தில் கத்த. அதன் அம்மா பூனையின் வசம் தன்னை பூரணமாக சரணடைந்து விடுகிறது. அம்மா பூனை அதைக் கவ்வி சமையல் அறையில் கொஞ்ச நேரம்,சில சமயம் பரண் மேல், சில சமயம் படுக்கை அறையில் அலமாரியில் கொண்டு வைக்கிறது. பூனைக்குட்டியின் ”மியாவுக்கு” அம்மா பூனைக்கு அர்த்தம் நன்றாக புரியும். அதுபோல் நமது வேஷமில்லாத உண்மையான பிரார்த்தனை பகவானுக்கு நன்றாக அதே போல் புரியும். நமக்கு எது எப்போது தேவையோ அதை கொடுப்பான்.”
”M ” முக்கு பரமஹம்சரை ரொம்ப பிடித்துவிட்டது. இனி அடிக்கடி வர ஆரம்பித்தார். இதுபோன்ற எளிய அழகாக புரியும்படி போதிக்கும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை.