ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN
எல்லாம் சீக்கிரம் சீக்கிரம்.
ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் மதுரா நகரத்தில் கம்சன் அரண்மனை சிறை வளாகத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்ததை ஸுகப்ரம்மம் பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னபோது அவன் தானே கிருஷ்ணன் நேரில் தரிசித்தது போல் உணர்ந்தான். தேவகிக்கு இந்த தெய்வீக குழந்தையை இதற்கு முன் இழந்த குழந்தைகளைப்போல் இவனையும் கம்சனிடம் பறிகொடுக்க மனம் இல்லை. பேதை மனம் கிருஷ்ணனை எங்காவது அந்த சிறைக்குள் ஒளித்து வைக்க இடம் தேடியது.எங்கும் நிறைந்தவனை எங்கே ஒளித்து வைப்பது? நாராயணன் தேவகியின் தாயன்பை ரசித்தவாறு அவளோடு பேசினான்:
”தாயே , நீ இந்த ஜென்மத்தில் மட்டும் என் தாயல்ல . ஸ்வயம்புவ காலத்தில் பல யுகங்கள் முன்பு நீ ப்ரஸ்னி என்றும் வசுதேவர் ஸுதாபா எனும் பிரஜாபதி யாகவும் பன்னிரெண்டாயிரம் வருஷம் கடும் தவம் செயது என் தாய் தந்தையாக பெருமை எய்தியவர்கள்.உங்களுக்கு அது இப்போது தெரியாது, எனக்கு தெரியும். அடுத்ததாக அம்மா, நீ அதிதியாகவும் வாசுதேவர் காஸ்யப ரிஷியாகவும் தோன்றியபோது நான் உபேந்திரன் என்ற வாமனனாக உங்களுக்கு மகனாக பிறந்தேன்.இப்போது மூன்றாம் முறையாக உங்கள் மகனாக பிறந்துள்ளேன். மஹா விஷ்ணுவே உங்கள் மகன் என்று நீங்கள் அறியவே நான் சங்கு சக்ர ஆயுதங்களோடு சதுர்புஜத்தோடு தோன்றினேன். இனி நான் ஒரு சாதாரண குழந்தையாகவே காட்சிளிப்பேன்.” என்றான் நாராயணன். அவன் தோன்றிய அதே நேரத்தில் அவன் திட்டப்படி யோகமாயா கோகுலத்தில் நந்தகோப மகாராஜாவின் மனைவி யசோதையின் பெண் குழந்தையாக உருவெடுத்தாள்.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நாராயணன் தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தான். வசுதேவருக்குள் ஒரு சக்தி புகுந்தது. இயந்திரம் மாதிரி அவர் செயல்பட ஆரம்பித்தார். யோகமாயா தனது சக்தியை பிரயோகித்துவிட்டாள் . கம்சன் அரண்மனையின் சிறையிலாகட்டும் கோகுலத்தில் நந்தகோபமஹாராஜாவின் அரண்மனை காவலாளிகளாகட்டும் எல்லோரும் ஏதோ ஒரு வித தூக்க மயக்கத்தில் இருந்தனர். சிறைக்கதவுகள், மாளிகைக்கதவுகள் தானாகவே lஏதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பாடு சத்தமில்லாமல் திறந்து கொண்டன. இருளில் வழி தெரிந்தது. யமுனையை நோக்கி குழந்தை கிருஷ்ணனை தூக்கிக்கொண்டு விடுவிடுவென்று ரோபோ மாதிரி நடக்கிறார். ஜோ வென்று மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.எங்கும் ஜலப்ரவாஹம். யமுனைக்கு அக்கரையில் கோகுல கிராமத்தில் நந்தகோப மஹாராஜா வசுதேவரின் உற்ற நண்பர். அவர் வீடு நோக்கி செல்கிறார். யமுனை நதி ரெண்டாக பிளந்து வழிவிட்டது.. இதெல்லாம் என்ன ஆச்சர்யம்? எங்கு சென்றாலும் காவல் காரர்கள் தூங்கி வழிகிறார்கள், இரும்புக்கதவுகள் சத்தமின்றி தானே திறந்து வழிவிடுகிறது. நந்தகோபர் அரண்மனையில் எல்லோருமே தூக்கக்கலகத்தில் இருக்க,யசோதையின் படுக்கையில் அவள் அசந்து தூங்க, அருகே புதிதாக பிறந்த குழந்தை மட்டும் கொட்டு கொட்டு என்று விழித்துக் கொண்டு இதெல்லாம் முன்பே தெரிந்தமாதிரி தன்னைத் தூக்கிக்கொண்டு போக தயாராக உள்ளது. வசுதேவர் தான் கொண்டுவந்திருந்த கிருஷ்ணனை யசோதையின் அருகே விட்டுவிட்டு யோகமாயாவைத் தூக்கிக் கொண்டு வந்தவழியே அதே வேகத்தில் திரும்புகிறார். மீண்டும் யமுனை வழி விடுகிறாள். கம்சன் அரண்மனை சிறைக்காவல் கதவு திறந்து இருக்கிறது.காவல்காரர்கள் தூங்குகிறார்கள். தேவகி அருகே யோகமாயா ஒன்றும் தெரியாத அப்போது தான் பிறந்த குட்டிக் குழந்தையாக படுத்திருக்கிறாள். மாமன் கம்சன் வருகைக்காக காத்திருக்கிறாள்.மழை விடாமல் பெய்து கொண்டு தான் இருக்கிறது. மீண்டும் வசுதேவர் தேவகி கால்களில் சங்கிலிகள் தானாகவே பூட்டிக்கொண்டன. சிறைக்கம்பிக் கதவுகள் மூடிக்கொண்டு பூட்டுகள் பழையபடி உறுதியாக அவற்றில் தொங்கின.
யசோதைக்கு நடந்தது எதுவுமே தெரியாது என்றாலும் தேவகிக்கு ஸ்ரீமன் நாராயணன் தனக்கு புத்திரனாக வந்து பிறந்தது தெரியும். ஒரு சாதாரண குழந்தையாக அவன் மாறி வசுதேவரால் எடுத்துச் செல்லப்பட்டு கோகுலம் நந்தகோப மகாராஜாவின் அரணமனைக்கு சென்றதும் தெரியும். எல்லாம் பகவான் லீலை என்பதும் தெரியும். கண்ணன் இருந்த இடத்தில் ஒரு பெண் குழந்தை, யோகமாயாவாக இருப்பதும் தெரியும். ரெண்டு பேரில் அதிர்ஷ்டக்காரி யசோதை. பெண்குழந்தை யோகமாயா பிறந்தும் அவள் சரியாக ஆணா பெண்ணா என்ன குழந்தை என்று அறிவதற்குள் உறக்கம், அசதி மயக்கம் அவளை ஆட்கொண்டு கண்விழித்துப் பார்த்தபோது ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாக அவள் அருகே படுத்திருந்தது அவளுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.