கனவிது தான் நிஜமிது தான்….. நங்கநல்லூர் J K SIVAN
எல்லோருக்கும் கனவு வரும். சிலர் எனக்கு கனவே வருவதில்லை என்கிறார்கள். உண்மையில் அவர்களும் கனவு காண்கிறார்கள். ஆனால் கனவு காண்பதை நினைவில் கொள்ளாதவர்கள். மறந்து போகிறவர்கள். ஒன்றரை மணி யிலிருந்து 3 மணி நேரம் கனவு ஒவ்வொரு ராத்திரியும் நமக்கு வருமாம். அப்படியானால் வாழ்வில் குறைந்தது ஆறு ஏழு வருஷம் கனவில் போகிறது. வருஷத்துக்கு உத்தேசமாக 1500 கனவுகள் ஒருவருக்கு வரும் போல் இருக்கிறது.
விடிகாலையில் வருவது கொஞ்சம் நீண்ட கனவு. மற்றது எல்லாம் குறும்படம். நீளமான கனவு அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் ஓடுமாம். நூற்றுக்கு தொண்ணுறு கனவு மறந்தே போய்விடுகிறது.கனவில் எப்போதும் தெரிந்த முகங்களே வரும். வாழ்வில் எத்தனை பேரை பார்க்கிறோம், பழகுகிறோம்.குருடர்களும் கூட கனவு காண்கிறார்களாம். கனவு கலர் கலராக வருமா கருப்பு வெளுப்பா என்றால் அநேகமாக கலரில் தான். வாழ்க்கையில் காண்பதெல்லாம் பல வண்ணங்களில் தானே. நாலிலிருந்து ஏழு கனவுகள் வரை ஒவ்வொரு ராத்ரியும் வருகிறதாம். ஆச்சர்யமாக இருக்கிறது.
குழந்தைகள் கனவில் மிருகங்கள் பக்ஷிகள் தான் அதிகமாக வருகிறதாம். நாய்கள், குதிரைகள், பாம்பு, கரடி, சிங்கம். ராக்ஷஸ உருவங்கள் கனவில் வந்து கடித்து பயந்து அழுவார்கள்..
அது சரி. மிருகங்களுக்கும் கனவு வருமாம். டால்பின் dolphin எனும் மீன்வகைக்கு கனவே வராதாம். பாதி மூளையின் சக்தியோடு தான் டால்பின்கள் தூங்குபவை என்பதால் தான் இது.
இன்னொரு ஸ்வாரஸ்யமான விஷயம். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு கனவுகள் எல்லாம் நன்றாக ( ஞாபகம் அதிகமாக) இருக்குமாம். கருவுற்றிருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் அதீதமாக செயல்படுவதால் இது முடியுமாம்.
என் நண்பர் சுப்ரமணிய மாமாவுக்கு எப்போதும் மன்னார்குடி கிராம வீட்டில் பின் கட்டில் உக்ராண அறையில் ஓட்டைப் பிரித்துக்கொண்டு திருடன் உள்ளே குதித்து, நெல் குதிரில்உட்கார்ந்து இருப்பது போல் தான் அடிக்கடி வழக்கமாக கனவு வந்து பாதி ராத்ரியில், விடிகாலையில் எல்லாம் உரக்க ஏதேதோ உளறி திருடனைப் பிடி என்று கட்டளையிடுவார். அவர் மனைவி சரஸ்வதிக்கு பழக்கம் என்பதால் கன்னா பின்னா என்று கத்தி அவரை எழுப்ப, அப்புறம் ஒரு டம்ப்ளர் பானை ஜலம் குடித்துவிட்டு விபூதியை இட்டுக் கொண்டு தூங்குவார். அப்புறமோ மறுநாளோ மீண்டும் திருடன் வரும்போது கத்துவார்.
சிலருக்கு பயம் அடிமனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும். அவர்களுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருந்தால் அது அடிக்கடி அவர்களை கனவில் வந்து வாட்டும். மாமாவுக்கு திருடனை நினைத்தால் பயம் போலிருக்கிறது.
ஆண்களின் கனவுகள் முக்கால் வாசி வெளியுலகு சம்பந்தமானவை. பலபேரை சந்திப்பதால் அவர்களில் யாரையாவது கனவில்ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சம்பவத்தில், காண்பார்கள். பெண்கள் அநேகமாக வீட்டுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் சம்பந்தமான கனவுகள் தான் அடிக்கடி காண்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஆண்களின் கனவுகளில் ஆண்கள் அதிகம் தென்படுவார்கள். பெண்கள் கனவில் வெட்டு கொலை குத்து காயம் அதிகம் இருப்பதில்லையாம்.கனவு குறட்டை ரெண்டும் சேர்ந்து ஒரே சமயத்தில் வரவே வராதாம்.கனவு பலிக்குமா நிஜமாகுமா என்று கேட்டால் ஆகும் ஆகாது என்று மதில் மேல் பூனையாக பதில் வருகிறது.