ஒரு சின்ன அட்வைஸ். – நங்கநல்லூர் J K SIVAN
கஷ்டங்கள் வரட்டும். கொஞ்சம் கூட கவலையே இல்லை. வந்தால் தான் அதை எப்படி சமாளிப்பது , கரை சேருவது என்று வழி பிறக்கும். இல்லை யென்றால் அதைப் பற்றிய பயமே பாதி உயிரை தின்றுவிடும். எனக்கு தெரிந்து கஷ்டங்களை எனக்கு விடாமல் தொடர்ந்து கொடுடா என்று கேட்டவள் குந்தி தேவி ஒருவள் தான். கிருஷ்ணன் கஷ்டங்களிலிருந்து காப்பாற்றுவான். அவன் ஒருவனால் தான் அது முடியும். அவனை அடிக்கடி வரச்சொல்வதற்கு ஒரே வழி மேலும் மேலும் கஷ்டங்கள் என்னை வந்து அடைந்தால் தான் என்று சொன்னவள்.தைரியமும் தன்னம்பிக்கையும் பகவான் ஒவ்வொருவருக்கும் கொடுத்து தான் உலகில் பிறக்க வைத்திருக்கிறான். அதை எப்போது உபயோகப்படுத்துவது? ஒரு கஷ்டம் வந்த பிறகுதான் அதை எப்படி தீர்ப்பது என்றும் இனிமேல் அது மாதிரி வராமல் தடுப்பது என்கிற தீர்வும் கிடைக்கும்.
ஒரு கஷ்டத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? என் தோல்வி அல்ல அது. இன்னும் தீர்வும் காணும் வேளை வரவில்லை. என் வெற்றி கொஞ்சம் தள்ளி போடப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளும் மனம் வேண்டும். ஜப்பானில் ஒரு பஸ் டெர்மினலில் ஒரு பலகையில் எழுதி இருந்த வாசகம் என்னவாம் தெரியுமா. ”இங்கே பஸ் தான் நிற்கும். உங்கள் நேரம் இல்லை. அது நிற்காது ‘ ஆகவே நேரத்தை வீணாக்காது, மனத்தை நொந்து கொள்ளாமல் விடிவை நோக்கி நகர்ந்து செல்வோம். நல்லதே நடக்கும். பகவான் மேலும் நமக்கு நம்பிக்கை உண்டே. கடலில் மிதக்கும் கப்பல் கடலுக்குள் சென்றால் தானே கடல் கப்பலை விழுங்கி மூழ்கும். மிதந்து கொண்டே போவோம். நம்பிக்கை தான் வாழ்க்கை படகின் துடுப்பு.
உலகம் அற்புதமாக படைக்கப்பட்டு நமக்கு பகவானால் தரப்பட்டுள்ளது. அதை அனுபவிப்போம். நாமும் வாழ்ந்து அனுபவித்து மற்றவர்களையும் வாழ வைப்போம். live and let live என்றால் அது தானே. பயம் கலக்காமல் தோல்வி மனப் பான்மை இல்லாமல் ஆக்க பூர்வமாகவே சிந்திப்பது நமக்கு பழக்கமாகட்டும். கஷ்டங்களின் ஆழ அகல, நீளத்தை நினைப்பதை விட்டு அதிலிருந்து வெளியேற உண்டான தீர்வுகளை பற்றியே சிந்திப்போம்.’எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற அகம்பாவம் தான் ஒருவனை அழித்து விடுகிறது. தலையை குனிந்து கொள்ள இயற்கையிலேயே நமக்கு வசதி இருக்கிறதே. பணிந்து வணங்கி போற்றி நம்மை விட பெரியவர்களை மதிப்போம். எல்லா போட்டிகளிலும் பரிசு பெற்றவன் கழுத்தில் தங்க மெடல் மாட்டும்போது தலையை உயர்த்தி நிமிர்த்தி திமிராகவா நிற்பான். தலையை குனிந்து தானே கழுத்தில் அந்த மெடலை வாங்கிக்கொள்கிறான். பெருமை பெறுகிறான். பணிவு ரொம்ப அவசியம்.