தண்டலம் கைலாசநாதர் காமாட்சி அம்பாள் ஆலயம்.நங்கநல்லூர் J K SIVAN
26/2/23 குன்றத்தூரிலிருந்து சுமார் 4 கிமீ. வளைந்து மோசமான சாலைகளில் பயணித்தால் வழியில் கண்டவரிட மெல்லாம் கேட்டு சொல்வதை புரிந்து கொண்டால் அரை மணிக்குள் ஒரு பழைய சிவன் கோவிலை தண்டலம் எனும் கிராமத்தில் காணலாம். வழியில் எங்கும் தண்டலம் செல்ல பெயர்ப்பலகையோ அடையாளமோ எதுவும் கிடையாது. யாருக்கும் ஒரு பழைய சிவன் கோவிலை பக்தர்களுக்கு வழிகாட்ட ஆர்வமோ அக்கறையோ இல்லை. உள்ளூர்காரர்களே இப்படிப்பட்ட கோவில்களுக்குச் செல்வதில்லை. குயவர் தெரு, வணிகர் தெரு என்று விசாரித்துக் கொண்டு ஒருவழியாக கைலாசநாதர் ஆலயத்தை அடைந்தோம்.எப்படியும் 1500 வருஷத்துக்கு குறைவில்லை. பழைய சிவாலயம். அமைதியான ஸ்தலம். ஆலயம் குறுகலாக இல்லை, விஸ்தாரமாக இருக்கிறது. சுற்றி மதில் சுவர்கள் அதன் புனிதம் பழைமை வேறுபடாமல் காத்து ரக்ஷிக்கிறது.
தண்டலம் என்ற பெயரில் மற்றும் சில க்ஷேத்திரங்கள் உண்டு. பெயர் தான் ஒன்று. ஆனால் வெவ்வேறு இடங்களில் இருப்பவை, வெவ்வேறு விசேஷங்கள் கொண்டவை.
குன்றத்தூர் அருகே தண்டல ககிராம ஆலயத்தில் சிவன் பெயர் கைலாசநாதர். கிழக்கு பார்த்த லிங்கம். அம்பாள் காமாக்ஷி தெற்கு பார்த்து நிற்கிறாள். ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன், கணேசர், சுப்பிரமணியர் ஆகியோர்கள் இருக்கிறார்கள். கோவிலில் கொடிமரம் இல்லை.சிக்கராயபுரம் தண்டலம் என்று ஊருக்கு பெயர். கோவிலில் கண்ணைக்கவரும் அழகோடு ஒரு பெரிய சிவலிங்கம். ஒரு குண்டு குள்ள கணபதி உடம்பு பூரா எண்ணை யை தடவிக்கொண்டு கோஷ்டத்தில் பல நூற்றாண்டுகளாக நிற்கிறார். அருணாசலேஸ்வரர் கிரானைட் கல்லில் ஜம் மென்று சதுர ஆவுடையார் மேல் காட்சி தருகிறார். கிரானைட் லிங்கத்தை யார் இவ்வளவு வழவழவென்று துளியும் பிசிர் இல்லாமல் லிங்கமாக செதுக்கியது. புண்யம் செய்த சிற்பி யாரோ?
கோஷ்டத்தில் ஒரு தக்ஷிணாமூர்த்தி ரொம்ப சௌந்தர்யத்தோடு இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு முயலகன் மேல் பதித்தவர் சதுர்புஜங்களில் இரண்டு அபய, வரத ஹஸ்தங்கள், ஒன்றில் ஜபமாலை. இரண்டில் மான் மழு. தக்ஷிணாமூர்த்தி முகத்தில் சாந்தம், அழகிய முகம்.
இது போன்ற கோவில்கள் இருப்பதே தெரியவில்லை. குன்றத்தூரில் அருகிலேயே தண்டலம் எனும் இவ்வளவு அழகான கிராமம், அமைதியான கல்வெட்டுகள் நிறைந்த பழைய சிவாலயம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்திருக்க வேண்டிய அறநிலையத்துறைக்கு முதலில் தெரிந்திருந்தால் ஏதாவது நடவடிக்கை எடுத்து அதற்கு போகும் வழியையாவது எங்காவது பலகைகளில் எழுதி இருந்தாலே பக்தர்களுக்கு ரொம்ப உபயோகமாயிருக்குமோ? ஊர் மக்கள் தான் ஏதாவது மனசு வைத்தால் தான் அதாவது முடியும் என்று தோன்றுகிறது. தண்டலம் ஆலயத்துக்கு ஒரு குளம் இருக்கிறது. அது பராமரிப்பு இன்றி சோழர் காலத்திலேயே இன்னும் இருக்கிறது.அதன் கரையில் மர நிழலில் கொண்டுவந்திருந்த இட்லி மிளகாய்ப்பொடி சூடான இஞ்சி டீ சாப்பிட்டு காலை உணவை முடித்துக் கொண்டோம். ஒரு இட்லி துண்டை படுத்துக் கொண்டிருந்த நாய்க்கு அருகே ”இந்தா நீயும் சாப்பிடு” என்று அதன் அருகே கீழே போட்டபோது என்னையும் நான் போட்ட இட்லியும் பிடிக்காமல் என்னை கோபமாகப் பார்த்துவிட்டு வேறு இடத்தில் நிம்மதியாக படுக்க சென்றுவிட்டது.