தெரிந்தது, மறந்தது, மீண்டும் நினைக்க …. நங்கநல்லூர் J K SIVAN
வியாதி ஏன் வருகிறது?”
முக்கால் வாசி வியாதிக்கே காரணம் மன அமைதியில்லாதால், மனப்பக்குவம் இல்லாத தால் தான். மனக் குழப்பத்தால், கொதிப்பால் உண்டாகும் வியாதிகள் தான் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். .
ஜேசுதாஸ் பாட்டு ஒன்று ஞாபகம் இருக்கிறதா? ”இரண்டு மனம் வேண்டும். இறைவனிடம் கேட்டேன். நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று” என்று. நமக்கு எப்போதும் ரெண்டு மனங்கள் உள்ளது. எதிரெதிராக அவை செயல் படும். ரெண்டு வித கருத்துகள் நேர் எதிராக அவற்றில் வெளிப்படும். ஏதோ வெளியே பெரிய பிரச்னை இருப்பது போல் தோன்றினாலும் அதெல்லாமே உள்ளே இருந்து உருவாகியவை தான். அவற்றை சமாளிக் கும் சக்தியும் உள்ளேயே இருக்கிறது. யார் அவற்றை லட்சியம் செய்கிறார்கள்?
தெளிவு, நிதானம், அமைதியோடு மனோதிடம் தேவை என்றால் அது எல்லோர் மனத்திலும் இருக்கிறது.
வாழ்க்கை முழுமையானது. நல்லது. அதில் கூச்சல், கும்பல் தள்ளு முள்ளு தேவை இல்லை. பிரபஞ்ச நீதியை புரிந்துகொண்டு அதற்கேற்ப உள் அமைதி,ஒரு சீரான முயற்சி, உண்டக்கிக் கொண்டால் போதும்.
பலவித துன்பங்களும் தொல்லைகளும் நாம் தானாகவே வரவழைத்துக் கொள்பவை தான். இதற்கு ”நான், தான்” என்ற எண்ணங்களே ஆதாரமானவை. உடல் சம்பந்தப் பட்டவைகளில் இதன் பாதிப்பு அதிகமாகிறது. உணர்ச்சிகளை உசுப்பி விடுவது இவற்றின் வேலை. மன அமைதி குன்ற முக்ய காரணம். மற்றவர்களோடு ஒத்து போக முடியாதவன் தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டியது தான். யார் அவனை லட்சியம் பண்ணுவார்கள்? அதனால் ஆத்திரம் கோபம் தான் விளைகிறது என்றால் இப்படி அவதிப்படுபவன் ஒவ்வொருவனும் தனி ஆவர்த்தன வித்வான் தானே. ”
நமது விஞ்ஞான வளர்ச்சி இதில் நமக்கு மேம்பாடு அடைய உதவாதா? என்று கேட்டால் நிச்சயமாக உதவும்.விஞ்ஞானத்தில் முன்னேறிய நாம் அழிவுக்கும் நாச காரியங்களிலும் தான் நமது திறமையை சக்தியை காட்டியுள்ளோம். அணுவைக் கண்டுபிடித்து அதன் ஆக்க சக்தியை விட அழிக்கும் சக்தியில் கரை கண்டுவிட்டோம். ஒரு பட்டன் அமெரிக்க அதிபர் தட்டினால் உலகம் அழியும். இது தான் விஞ்ஞான வளர்ச்சியா?
அழிவிலிருந்து காக்க ஆன்ம சக்தியை அல்லவோ வளர்க்க வேண்டும். வேற்றுமை மனத்தில் தான் முளைக்கிறது. வேற்றுமையை ஆன்ம சக்தியால் தான் களைய முடியும். வேற்றுமை விலகினால் எஞ்சி நிற்பது ”வேற்றுமை இன்மை” அதாவது ஒற்றுமை. ஒற்றுமை நிலவினால் அமெரிக்க அதிபர் பட்டன் எதற்கு ?
உள்ளே அமைதி கண்டால் வெளியே அது பொங்கி வழிந்து எங்கும் அமைதியே நிலவும் . தருமரையும் துரியோதனனையும் உலகில் நீ யாரைக் காண்கிறாய் என்று கேட்டதற்கு துரியோதனன், என் எதிரிகள் எங்கும் இருக்கிறார்கள் அவர்களை ஒழிக்க முயல்வேன் என்றான். தருமனோ எல்லோரும் என் நண்பர்களாகவே தான் தெரிகிறார்கள் என்றான். இதெல்லாம் நமது முன்னோர்கள் கதையாக சொன்ன மனோதத்துவ சாஸ்திரம்.இதில் இருக்கும் உண்மையை நாம் மறக்கக் கூடாது.
வாழ்க்கையில் தப்பிக்கும் ஸ்வபாவம் (escapism ) இருக்கக்கூடாது. ‘கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா ” மனப்பான்மை தான் தைர்யத்தை கொடுக்கும். வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் எல்லா இயல்பான பிரச்னைகளுமே அவற்றை நாம் சந்திக்கும் தைர்யத்தை நமக்கு அளிப்பதற்கான சக்தி கொண்டவை. எல்லா பிரச்னை களையும் முழுமையாக அலசவேண்டும். அப்போது தான் அதன் தன்மை, காரணம், பலன், எப்படி சமாளிப்பது என்பதெல்லாம் புரியும்.
பிரச்னையை பற்றி நினைத்தாலே மனத்தில் ஒரு பயம் உண்டாகுமானால் அது பூதா காரம் பெற்றுவிடுகிறது. சமாளிப்பது கடினம், ஐயோ நம்மால் முடியாது, என்ற ஒரு பொய்த் தோற்றம் ஏற்பட்டு நிம்மதி குலைகிறது. ஆனால் அதை நெருங்கி நேராக சந்திக்கும்போது சூரியன் முன் பனி போல் பயம் விலகும். காரணம் மனதில் உதிக்கும் தைர்யம், மனோதிடம்.
முக்யமாக ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். யாருமே மற்றொருவர் மேல் ஆளுமை செலுத்த முடியாது. என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும் கணவன் மனைவி மேலோ, மனைவி கணவன் மேலோ, சர்வ அதிகாரமும் செலுத்த இயலாது. அதே போல் குழந்தைகள் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒருவர் மற்றொருவருக்காக வாழ்வது முடியாது. அவரவர் தத்தம் செயல்பாட்டுக்கு தக்கவாறு வாழ்கிறார்கள். மனம் வேறு உடல் வேறு.
வாழ்வில் மற்றொரு தடை கவலை. எப்போதுமே கவலை கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ குறித்து இருப்பதால் அது அருமையான தற்சமய நிகழ்காலத்தை விழுங்கி கவலையில் அதை அழுத்தி விடுகிறது.
ஆகவே இதை மறக்க வேண்டாம்:
1. வாழ்க்கையை நம்பிக்கையோடு சரியான முறையில் அணுகவேண்டும்.
2. பிரச்னையைக் கண்டு தலை தெறிக்க ஓடாமல் தைரியத்தோடு பயமின்றி அமைதியாக எதிர்கொள்ள வேண்டும்.
3. மன உறுதியும் தன்னம்பிக்கையும் பிரச்சனைக்கு தீர்வு காண உதவும்.
4. எளிய வாழ்க்கையும், ஒழுக்கமான கட்டுப்பாடோடு சீரமைத்துக்கொண்ட பாதையும் நன்மை பயக்கும். எதெல்லாம் தீது என தோன்றுகிறதோ அவற்றின் அருகே கூட போகக் கூடாது.
5.உள்ளும் புறமும் அமைதி பயக்கும் வாழ்க்கை முறையை நாடவேண்டும்.
6. தேவையற்ற சுமைகளை தாங்கிக் கொள்ள முயற்சிக்காமல் எது அத்தியாவசியமோ அவற்றில் நாட்டம் கொள். அத்யாவசியத்துக்கும் அனாவசியத்துக்கும் வித்யாசம் தெரியவேண்டும்.
7. உள்ளும் புறமும் சுத்தமான வாழ்க்கையை மேற்கோள்வோம்.
கண் காது, மனம், சிந்தனை, எண்ணம் எல்லாம் எதற்காக அந்த இறைவன் கொடுத்திருக் கிறான் இதெல்லாம் அறியத்தான். புரிந்து கொள்வோம், தானாகவே தெரிந்து கொள்வோம். இதற்கு குரு வேண்டாம்.
Sir. This article was awesome. Thank you for the article. Sir my request is please post in facebook sir it is easier to read and share.please
Aruna enna theluvana sinthanai Unga writeup syllabus varthaigale illai