ஞாயிறு ஆலய தரிசனம். – நங்கநல்லூர் J K SIVAN
கடந்த ரெண்டு மூணு வருஷங்களாக வெளியே எங்குமே செல்ல முடியாதபடி கொரோனா பயம், அதனால் விளைந்த கட்டுப்பாடு, என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கட்டு விலகி வெளியே போக ஆரம்பித்தேன். என் அருமை நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் ஒரு ஒய்வு பெற்ற இந்திய அரசாங்க உயர் அதிகாரி. டில்லியில், வெளிநாட்டு உறவு, பாஸ்போர்ட் இலாகாவில் உயர் மட்ட அதிகாரி. பல வருஷங்களாக காரில் நிறைய கோயில்களுக்கு என்னோடு சென்றவர். ஸ்ரீனிவாசன் தம்பதிகளோடு நான் பல ஆலயங்கள் சென்றது பற்றி இதுவரை நிறைய எழுதி இருக்கிறேன். ரெண்டு மூன்று வருஷங்களாக எங்குமே செல்ல வில்லை.
சென்ற ஞாயிறு 12.2.2023 விடிகாலை 6.15மணிக்கே ஸ்ரீனிவாசன் தம்பதிகள் அரும்பாக்கத்திலிருந்து காரில் வந்துவிட்டார்கள். நங்கநல்லூரில் வசிக்கும் என் இன்னொரு நண்பர் ரிசர்வ் பேங்கில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிதானந்தம் எங்களோடு பல கோவில்களுக்கு வருபவரும் நேற்று சேர்ந்து கொண்டார்.
சிவராத்ரி வரை குளிரும் பனியும் வழக்கமாக இருக்கும். சென்னை திருச்சி சாலையில் உத்திரமேரூர் வரை சென்று அங்கே திரும்பி வந்தவாசி போகவேண்டும் என்று எங்கள் பயணம் துவங்க. வழியில் பாலாற்றை கடக்கும்போது அதன் இருகரைகளில் சில கோவில்களும் தரிசிக்க முடிவெடுத்தோம். ஆகவே திருமுக்கூடல், பழைய சீவரம், உத்திரமேரூர் கோவில்கள், தென்னாங்கூர், திருப்புலிவனம், அம்மையப்பநல்லூர், வழூர் ஆகிய ஊர்களில் இருக்கும் சில கோவில்களை மட்டும் தரிசிக்க முடிந்தது. இரவு 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும்போது இரவு 8.15. சென்ற கோவில்களில் பெற்ற தரிசனம் பற்றி இனி ஒவ்வொன்றாக எழுத மனதில் எண்ணத்தை ஸ்ரீ கிருஷ்ணன் கொடுத்திருக்கிறான். வரிசையாக எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது. ஆனால் எல்லா கோவில்களையும் பற்றி எழுதுவேன்.