ஸௌந்தர்ய லஹரி 9/103 – நங்கநல்லூர் J K SIVAN
அம்பாள் ஆதார சக்திதேவி
महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं स्थितं स्वाधिष्ठाने हृदि मरुतमाकाशमुपरि ।
मनोऽपि भ्रूमध्ये सकलमपि भित्वा कुलपथं सहस्रारे पद्मे सह रहसि पत्या विहरसे ॥ ९॥
mahīṃ mūlādhārē kamapi maṇipūrē hutavahaṃ sthitaṃ svādhiṣṭhānē hṛdi marutamākāśamupari ।
manō’pi bhrūmadhyē sakalamapi bhitvā kulapathaṃ sahasrārē padmē saha rahasi patyā viharasē ॥ 9 ॥
மஹீ மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத மாகாஶமுபரி
மனோ(அ)பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம் ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே 9
அம்பிகே, நீ தான் அம்மா சகல ஆதாரங்களும் சர்வ சக்தி வாய்ந்த குண்டலினி, பீஜாக்ஷரங்களில் ரஹஸ்யமாக உறைபவள் .
ரொம்ப முக்கியமான ஸ்லோகம் இது. அம்பாள் எங்கு எப்படி எதாக காணப்படுகிறாள் என்று சுருக்கமாக உணர்த்துவது.
நமது தேகத்தில் ஆறு ஆதார சக்ரங்கள் பஞ்ச பூத தத்துவத்தை குறிப்பன: மூலாதாரம்: பிருத்வி தத்வம், மணிபூரகம்: ஜலதத்வம், ஸ்வாதிஷ்டானம்: அக்னி தத்வம், அனாகதம்: வாயு தத்வம், விசுத்தி: ஆகாச தத்வம். ஆக்ஞா :மனஸ் தத்வம். எல்லாமே ஸுஷும்னா மார்க்கத்திலுள்ள சக்ரங்கள். அம்பாள் எனும் குண்டலினி சக்தி இதன் வழியாக மேலே சென்று ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் (ஸஹஸ்ராரபத்மம்) ரகசியமான இடத்தில் தனது பதியான ஸதாசிவனை அடைந்து மகிழ்கிறாள். குண்டலினியில் அது தான் ஸஹஸ்ராரத்தில் ஸமாதி நிலை. இதை தான் ஸமஸ்க்ரிதத்தில் ஷட்சக்ரவேதனம், அந்தர் யாகம் என்பது. இந்த ஸ்லோகம் அதை தொடுகிறது.
மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்து அக்னிகண்டம். அதற்குமேல் ப்ரம்மக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது. மணிபூரகமும் அநாஹதமும் சேர்ந்து சூரிய கண்டம். அதற்குமேல் விஷ்ணுக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது. விசுத்தியும் ஆஞாவும் ம் சேர்ந்து ஸோம கண்டம். அதற்குமேல் ருத்ரக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது.
க்ரந்தி என்றால் நாடிகளின் முடிச்சையும் நாடியினுள் பாயும் எண்ணங்களில் பூர்வ வாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும் சொல்.
மூலாதாரத்திலிருந்து எழுந்த பராசக்தி ஸ்வாதிஷ்டானத்தைக் கடந்ததும் மணிபூரகத்தில் பிரத்யக்ஷமாகிறாள். அங்கே அர்க்யம், பாத்யம், முதல் பூஷணம் வரை உபசாரங்களைச் செய்து அநாஹதத்திற்கு அழைத்துவந்து, தூபம் முதல் தாம்பூலம் வரை உபசாரங்களைச் செய்து, விசுத்திக்கு அழைத்துவந்து, அங்கே பராசக்தியைச் சிம்மாஸனத்தில் இருக்கச் செய்து, சந்திரகலாரூபமான ஸ்படிகமணிகளால் பூஜித்து, ஆஞா சக்கரத்திற்கு அழைத்துவந்து நீராஜனம் செய்து, ஸஹஸ்ராரத்தின் நடுவில் இருக்கும் சந்திரமண்டலத்தில் ஸதாசிவனுக்குப் பக்கத்தில் சேர்த்து அவர்களைச் சுற்றித் திரையிட்டு, தான் ஸமீபத்தில் இருந்துகொண்டு அம்பாள் மூலாதாரத்திற்குத் திரும்பும் ஸமயத்தை எதிர்பார்ப்பது தான் சிறந்த சக்தி உபாசகர்கள் அந்தர்யாகம், ஸமயாசாரம் எனப்படும் மானச பூஜை.
குலபதம் என்பது ராஜவீதி என்று சொல்லக்கூடிய குண்டலினி சக்தி மேல் நோக்கி பிரயாணம் செய்யும் ஸுஷும்னா பாதை.
ரொம்ப விவரமாக உள்ளே போனால் புரிவது கடினம். பெயர்களை மட்டுமாவது தெரிந்து கொண்டால் அப்பப்போ படிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அது என்ன என்று விளங்கும். ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், மனஸு , மாயை, சுத்த வித்யா, மஹேஸ்வரன் , சதாசிவன் – 25 விஷயங்கள் இவை தான். சக்தி உபாசனையில் வரும் வார்த்தைகள்.
அம்பாள் த்ரிசக்தி . இச்சா, ஞானா , க்ரியா சக்தி. மூன்று சக்திகளை ஒன்றாக உணர்வது த்ரிபுர சுந்தரி எனும் நாமம். இந்த ரஹஸ்ய தத்துவங்களை உணர்வது தந்த்ரம். இதை நன்றாக கற்றுணர்ந்தவர்கள் தாந்த்ரீகர்கள். சக்தி உபாசகர்கள்.
இன்னொரு விஷயம் சொல்லி நிறுத்துகிறேன்:
ஸ்ரீ சக்ரத்தில் பஞ்ச பூதங்களை குறிக்கும் பீஜாக்ஷர மந்த்ரங்கள்:
ஹம் : ஆகாசம் விசுத்தியில், சதுர்தஸாரத்தை குறிப்பது.
யம் : வாயு , அநாகதத்தில், பஹிர்தஸாரத்தை குறிப்பது
வம்: ஜலம் . மணிபூரகம், அந்தர்தஸாரத்தை குறிப்பது
ரம் : அக்னி – ஸ்வாதிஷ்டானம் – அஷ்டகோணத்தை குறிப்பது
லம் : ப்ரித்வி – மூலாதாரம் – த்ரிகோணத்தை குறிப்பது