FAMILY DEITY- J K SIVAN

குலதெய்வம் தெரியுமா?   நங்கநல்லூர்  J K  SIVAN
நமது முன்னோர்கள் இயற்கையோடும், இயற்கையை தெய்வமாகவும் கருதி தெய்வ சிந்தனையோடு வாழ்ந்தவர்கள்.  நீண்ட காலம் நோயற்று இன்பமாக வாழ்ந்தவர்கள் என்று கருதலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக  தெய்வ சிந்தனை குறைந்தாலும் பரவாஇல்லை, தெய்வ நிந்தனை அதிகரித்து வருகிறது. கோயில்களை இடிக்கிறோம், அதற்கு பெருமைப்படுபவர்களை  கடவுள் கொடுத்த கைகளை தட்டி வரவேற்பவர்களும் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் தெய்வமே மறந்து போனபோது  ஒவ்வொரு குடும்பத்துக்கும்  பிரத்யேகமாக வாழவைக்கும் குல தெய்வம் எப்படி ஞாபகம் இருக்கும்?  குலதெய்வத்தை நினைக்காமல்  வணங்காமல் அவர்கள் ஆசி பெறாமல் எந்த நல்ல காரியமும் வாழ்வில் நடந்ததில்லை.  குடும்ப கஷ்டங்களுக்கு,  துன்பங்களுக்கு காரணம்  குலதெய்வ குற்றம் என்று ஜோசியர்கள் சொல்லும்போது தலையை சொரிகிறோம்.  ப்ரம்மன் ஸ்ரிஷ்டிக்கிறான், விஷ்ணு எனும் நாராயணன் காக்கிறான், சிவன் ஸம்ஹார மூர்த்தி என்று முப்பெரும் கடவுள்கள் தெரியும். ப்ரம்மாவின் சிருஷ்டியில்  ஒவ்வொரு  ஜீவனுக்கும் 13 ஜென்ம காலங்கள் .இந்த  13 ஜென்ம காலம்  எவ்வளவு தெரியுமா? சுமார் 781 வருஷங்கள்.  படைக்கப்பட்ட  ஒவ்வொரு ஜீவ னையும்   காப்பாற்ற, பாதுகாக்க எந்தெந்த  உப தேவதை அல்லது  தெய்வாம்சங்களுக்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறதோ, அந்தந்த  தெய்வங்களும், தேவதைகளும்    பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட நம்மை  தங்களோடு இணைத்துக் கொண்டு விடுகிறார்கள்.  ஆகவே  அப்படிப்பட்ட  பிரத்யேக  தேவதை, தெய்வமே  நம்மைக்  காக்கும் கடவுள்  என்று நமது ஆத்மா ஏற்றுக் கொள்கிறது. அதுவே நம் குல தெய்வம். அநேகமாக நம்முடைய  பிறந்த ஊர்களில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் தான் அவை. அவர்களின் பெயரையே நம் முன்னோர்கள் நமக்கு இட்டிருக்கிறார்கள்.  நாம் நமது  வாரிசுகளுக்கு சூட்டுகிறோம். வம்சாவழியாக  இப்படித்தான் குலதெய்வங்கள் நம் வாழ்வில் முக்ய  பங்கு வகிப்பவர்கள்.  வருஷம் ஒரு தடவையாவது குடும்பத்தோடு கிராமத்துக்கு சென்று வழிபடும் வழக்கம் இருந்தது.
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்த பின் அதன் மனதில் குலதெய்வம்  அதை காப்பாற்ற குடிகொள்கிறது.  நமக்கு நம்  குலதெய்வம் என்று ஒன்று இருப்பது தெரியும். ஆனால்  அது எது என்று  பலர்  அடையாள காண முயற்சிப்பதில்லை.  பெரும் குற்றம் இது.அடிக்கடி  நினைப்பதால் தான்  நம் குலதெய்வம் நம்மை  நல்வழிப்படுத்துவது புரியும். தெரியும். குல தெய்வ வழிபாடு இல்லாமல் எந்த பண்டிகையும்  சுப காரியங்களும்  நமக்கு கிடையாது.  ”வாத்ய உங்கள் குல தெய்வம் எது, பேர் சொல்லுங்கோ” என்று கேட்கும்போது   விழிப்பவர்கள்  அதிகம் இப்போது.  ஒரு வம்சம் என்பது எவ்வளவு வருஷம்? மூன்று  தலைமுறையாவது நிச்சயம்.  அதாவது 50 X 3 என்று வைத்துக்கொண்டால் கூட  150 வருஷம் என்று குறைந்த பக்ஷம் வைத்துக் கொள்ளலாம்.  அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா  என்று முக்கி முக்கி  ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். சில தலைமுறைகள்  10- 15 கூட  எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   கெட்டிக்காரர்கள்.
மேலே சொன்ன  ஆத்மாவின் 13 ஜென்மங்களை   தேடும்போது  உத்தேசமாக  13 x 50 = 650 வருஷங்கள் என்று வருகிறதே  யாருக்கு  650 வருஷங்களுக்கு முன்பு   யார் எப்படி இருந்தது எவருக்குத் தெரியும்? சந்ததி என்று அதற்கு பெயர்  அது தெரியவே தெரியாதே.
குல தெய்வம் ஏழேழு ஜென்மம்  காப்பாற்றும் என்பார்கள். அதாவது 49 ஜென்மங்கள் அப்புறம் தான்  13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.
ஒரு பெண் கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போகும்போது  அவளுக்கு புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடுகிறது.   எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது ஒரு  கணக்கு. ஏதாவது ஒரு  கால  கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால்  அந்த  வம்சம் தொடராமல்  அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு – வம்சாவளிகளுக்கு மட்டுமே குறைந்த பக்ஷம் தொடரும்
ப்ரம்மா  விஷ்ணு மகேஸ்வரன் ஆகிய  மூவரும்   தமது சார்பாக லக்ஷக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக    உபகணங்களாக   உலகெங்கும் அனுப்பி . அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில்  பல வித பெயர்களில் மொழிகளில் ஆங்காங்கே  கிராமங்கள் பட்டி தொட்டிகளிலும்  பரவி உள்ளனர். ஆங்காங்கே வசிக்கும்  மக்கல்  இவர்களை ஆராதித்து ஏற்றுக் கொள்கிறார்கள். அவை குலதெய்வங்களாக, கிராம தேவதைகளாக  வழிபடப்பட்டு நம்மை காக்கிறது.இப்படி தான் ஏழேழு தலைமுறைகளுக்கு  நமக்கு அந்தந்த உப தெய்வங்கள்  குலதெய்வங்களாகிறது.ஒவ்வொரு வம்சத்தில் நடக்கும் நல்லது   கேட்டதற்கு அந்தந்த குலதெய்வங்கள் பொறுப்பு. அவர்களை வழிபடுவதற்கு நல்லதே  நடக்க காத்தருளவேண்டும் என்பதற்காக. குலதெய்வத்தை இஷடப்படி மாற்றிக்கொள்ள அவை சட்டைகள்,  ஆடைகள் அல்ல.  குடும்பத்தில் இப்போதுள்ள வயதானவர்கள், ஊர்  கிராமத்தில் பெரியவர்கள், வெகுகாலம் குடும்பத்தை முன்னோர்களை  தெரிந்தவர்கள் மூலமாகவாவது  குலதெய்வத்தை அறிந்து  வணங்கி அவர்கள் ஆசி பெறுவது ரொம்ப அவசியம்.குலதெய்வம் தெரியாதவர்கள்   திருப்பதி  வெங்கடேசனை குலதெய்வமாக  சுவீகரித்துக்கொள்கிறார்கள்.  எல்லோருக்கும்  பொதுவான  காக்கும் தெய்வம் அல்லவா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *