மூளை… நங்கநல்லூர் J K SIVAN
என்னுடைய நண்பன் என்றால் குறைந்தது நிச்சயம் 75க்கு மேல் தான் இருக்கவேண்டும் அல்லவா?”சிவா என்னால் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லைடா” என்றான் ரங்கராஜன். எனக்கும் அப்பப்போ இந்த ட்ரபுள் உண்டே. அவனுக்கு என்ன பதில் சொல்வது? கூகிளில் தேடினேன். சில அற்புத விஷயங்கள் அகப்பட்டன. அப்படி தெரிந்த உண்மைகள்:
65க்கு மேலே இது அநேகருக்கு பொதுவான தொந்தரவு. ஞாபகமறதி வந்துவிடும். எங்கே வீட்டு கொத்து சாவியை வைத்து தொலைத்தேன்? மூக்கு கண்ணாடியை கழட்டி எங்கே வைத்தேன். பர்ஸ் பையில் இல்லையே எங்கே போயிற்று? செருப்பை கல்யாண வீட்டில் எங்கேயோ விட்டுவிட்டு எங்கேயோ ஏன் தேடுகிறேன்?. அக்கா பிள்ளை அடிக்கடி வருபவன் பேர் எப்படி மறந்தது? நம்ம ஆடிட்டர் பேர் கிருஷ்ணனாகோபாலனா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் மூளையிலிருந்து வரும். ஆனால் லேட்டாக தான், ஸ்லோ வாக தான் வரும். மூளையின் இயக்கம் சிறு வயதில் இருந்தது போல் இப்போது இல்லை. நிதானமாக தான் செயல்படும். புது விஷயங்களை மூளை எளிதில் வாங்கி சேமிக்காது. அதற்கும் 85 க்கு மேல் ஆகிவிட்டது அல்லவா?
வயதாவதால் உண்டான விவேகம் கொஞ்சம் நமக்கு உதவும். வயாதானாலும் மூளைக்கு வேலை தந்து கொண்டே இருந்தால் மூளை திசுக்கள் வளரும். அளவில் அதிகரிக்கும். புது விஷயங்களை தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியென்றால் நிச்சயம் இனிமேல் கீதை புரியும் போல் இருக்கிறது! மூளை வளர்ச்சிக்கு கம்ப்யூட்டர் ரொம்ப உதவும் என்பது என்னுடைய 85+ அனுபவம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது எதையாவது தேடி படி என்கிறது கூகுள் வைத்ய ஆராய்ச்சி. நான் தான் 18 மணி நேரம் உட்கார்ந்து இருக்கிறேனே.
கண் பார்வை இல்லாதவர்களுக்கும் , தந்தி வாத்யம் வாசிக்கிறவர்களுக்கும், (வயலின், வீணை சாரோட, சாரங்கி) சாதாரண ஆட்களைவிட மூளை சிறப்பாக செயல்படுமாம்.
எதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டுமோ அந்த பெயரை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமாம். நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். அப்போது தான் தேவையானபோது மூளை அதை தேடித் தருமாம். எது அடிக்கடி தேவையாக தோன்றுகிறதோ அந்த பெயர்களை, நம்பரை ஒரு பழைய டயரியில் எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி பார்க்கவேண்டும். அப்போது தான் மறக்காது போலிருக்கிறது.
மூளை என்பதே தசை தானே.நரம்புகள் சூழ்ந்தது. மூளைக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டும் என்பதற் காக பழைய பாடல்களின் வார்த்தைகளை நினைவு கூறுவேன், பாடுவேன், அந்த ராகம் எப்படி எந்த இடத்தில் ஆலாபனம் என்று ஞாபகப் படுத்திக் கொள்வேன். பாடிப்பார்ப்பேன். டைம்ஸ் பேப்பரில் SUDOKU போடுவது சிலது கஷ்டமாக இருந்தாலும் தினமும் விடாமல் போட்டு வெற்றி காண்பேன். இதெல்லாம் மூளைக்கு வேலை. சிலர் குறுக்கெழுத்து போட்டிகள் கட்டங்கள் நிரப்புவார்கள்.
படிப்பதும் எழுதுவதும் இருக்கவே இருக்கிறது. தியானம் பண்ணுவது அற்புதமான வேலை. த்ருப்திகரமாக இருக்கிறது.
குழந்தைகளோடு பார்க்கில் விளையாடுவது அதி உன்னத பொழுதுபோக்கு. மூளைக்கு வேலை. சமையல் கட்டில் துவையல் அரைப்பது , அப்பளம் பொரிப்பது .வடை சுடுவது சமையலில் உதவுவது எல்லோருக்கும் முடியாதது.
மொத்தத்தில் மூளை ஒரு அபூர்வமான பரிசு. அதை எப்படி பொது நலத்துக்கும் பிறர் நன்மைக்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் உள்ளது. ”உனக்கு மூளை இருக்கா, மூளை இல்லையா?” என்று யாரையும் கேட்பதே தப்பு. மூளை இல்லாமல் எவரும் பிறப்பதில்லை. பாரபக்ஷம் இன்றி ஒவ்வொருவருக்கும் மூன்றரை அவுன்ஸ் எடை உள்ளே வைத்து தான் கிருஷ்ணன் வெளியே தள்ளுகிறான்.