கோவிந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
கிருஷ்ணனுக்கு எத்தனையோ பேர். அதில் ஒன்று கோவிந்தன். ரொம்ப சுலபமாக கோவிந்தா என்று நம்மால் சொல்ல முடிகிறது. கோவிந்தனைப் பாடாத, பேசாத, நாவென்ன நாவே என்று சொல்லும்படியாக நாவினிக்கும் நாமம் கொண்ட நாராயணா, உன்னை ஒரு எட்டு ஸ்தோத்ரம் அருமையாக ஆதி சங்கரர். பாடினது இது. அதன் இனிமையை உன் பக்தர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதைப் படிக்கவேண்டும், ரசிக்க வேண்டும், எழுதவேண்டும், மற்றவரோடு பகிர வேண்டும் என்ற என்னுடைய எண்ணமே நீ தானே. அதனால் அல்லவோ என் கைகள் கம்பியூட்டரில் அசைகிறது. இது நீ எனக்கு அளித்த அரிய வாய்ப்பு.
அன்பர்களே ஒரேயடியாக எட்டு அஷ்டகங்களையும் நீளமாக பதிவிட்டால் படிக்க சிரமப்படுவீர்கள்.J K SIVAN என்ற பெயரை முகநூலில் FACEBOOKல் பார்த்தாலே ஓடிவிடுவீர்கள் என்பதால் ரெண்டு ரெண்டாக தர உத்தேசம். விடாமல் அதை சேர்த்து வைத்துக்கொண்டு மொத்தமாக ஒரு தடவை படியுங்கள். விட்டு விட்டு ஒவ்வொருநாளும் படிக்கும்போது ஸ்ரத்தை குறைந்து போகும். சரிதானே?
सत्यं ज्ञानमनन्तं नित्यमनाकाशं परमाकाशम् । गॊष्ठप्राङ्गणरिङ्खणलॊलमनायासं परमायासम् ।
मायाकल्पितनानाकारमनाकारं भुवनाकारम् । क्ष्मामानाथमनाथं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 1 ॥
Sathyam jnanam anantham nithyamanakasam paramakasam, Goshta prangana ringana lolam anayasam paramayasam,
Maya kalpitha nanakara manakaram bhuvanakaram, Kshmama nadha manadham, pranamatha govindam paramanandham.
ஸத்யம் ஜ்ஞானமனந்தம் நித்யமனாகாஶம் பரமாகாஶம் | கோஷ்ட ப்ராங்கணரிம் கணலோல மனாயாஸம் பரமாயாஸம் | மாயாகல்பிதனானாகார மனாகாரம் புவனாகாரம் | க்ஷ்மாமானாதமனாதம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம் || 1 ||
ஏழு மலையானே, எதையும் வேண்டாத உன்னிடம் எதெல்லாம் வேண்டாமோ அதையெல்லாம் சேர்த்து தான் உன்னிடம் வேண்டுகிறோம் ஆண்டவா, சத்யமும் தர்மமும் புரியவைக்க நீ ராமனாக வந்தாய். புரிந்தது. அனந்தம் என்று தூணிலும் துரும்பிலும் நீயே ஆதாரம் எனக் காட்ட நரசிம்மனாக வந்தாய், நித்ய அநித்யங்களை எடுத்துச் சொல்ல தேரோட்டி கிருஷ்ணனாக வந்தாய், பரம ஆகாசமான விஸ்வரூப னானாய். ஆனந்தம் என்பதின் நிரூபணமாக பாற்கடலில் பள்ளிகொண்ட ரங்கநாதனும் நீயே தான். பாமர கோபியரின் பசுக்கூட்டத்திலும் நீ, மாயையின் தோற்றத்தால் பல ரூபங்களில் காணும் பரமா, உருவமும் நீ அருவமும் நீ, பிரபஞ்சமும் நீ, பிரிக்கமுடியாத அணுவிலும் சதகூறிட்ட கூறிலும் உள்ளவன். மனச் சாந்தி யை தரும் மாதவா, நீ சாதாரண குசேலனையும் நேசித்தாய், அகில லோக மாதா லக்ஷ்மியையும் மார்பில் வைத்துள்ளவன். கோவிந்தா, உன்னை வணங்குகிறேன்.
2. मृत्स्नामत्सीहॆति यशॊदाताडनशैशव सन्त्रासम् । व्यादितवक्त्रालॊकितलॊकालॊकचतुर्दशलॊकालिम् ।
लॊकत्रयपुरमूलस्तम्भं लॊकालॊकमनालॊकम् । लॊकॆशं परमॆशं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 2 ॥
Mruth sanamathsihethi yasodha thadana shaisava santhrasam, Vyadhitha vakthralokitha lokaloka chathurdasa lokaleem,
Loka thrayapura moola sthambham, lokalokamanalokam, Lokesam paramesam, pranamatha govindam paramanandham.
ம்றுத்ஸ்னாமத்ஸீஹேதி யஶோதாதாடனஶைஶவ ஸம்த்ராஸம் வ்யாதிதவக்த்ராலோகித லோகாலோகசதுர்தஶலோகாலிம் |
லோகத்ரயபுரமூலஸ்தம்பம் லோகாலோகமனாலோகம் | லோகேஶம் பரமேஶம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம் || 2 ||
”கிருஷ்ணா யார் நீ? இதை நாங்கள் கேட்கவில்லை. உன்னை வளர்த்த தாய் யசோதை அதிசயித்துக் கேட்ட கேள்வி இது.
நீ மற்ற ஆயர்பாடி சிறுவர்களோடு சேர்ந்து நாவல் பழ மரத்தின் மேலேயிருந்து அவர்கள் உதிர்த்த நாவல் பழங்களை, கீழே நின்றவாறு பார்த்துக் கொள்கிறேன் என்று வேலையை ஒப்புக்கொண்டு அவை மண்ணில் விழுந்தவுடன் ஆவலாக நாவல் பழங்களை மண்ணுடன் கலந்து தின்றதைக் கண்டு உன் தாயிடம் கோள் சொல்ல, யசோதை கோபமாக வெளியே வந்தாள் அல்லவா? தூரத்தில் மரத்தடியில் பையன்கள் கூட்டம். நடுவே தரையில் ஒன்றும் தெரியாதவன் மாதிரி கிருஷ்ணா நீ அமர்ந்திருந்தாய் . வாய் நிறைய பழங்கள். உதடு கன்னம், தாடையில் எல்லாம் கருநீல நாகப்பழ கலரில் மண்ணோடு கலந்து சாறு அப்பி கிடந்ததே.
“உன்னோடு ஒரு நாள் கூட நிம்மதி கிடையாது எனக்கு. எப்பவும் ஏதாவது ஏடாகூடம். வாய் நிறைய இவ்வளவு மண்ணு தின்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?. திற வாயை?” என்றாள் தாய்.
” ஹுஹும் மாட்டேன்” என்று தலையாட்டினாய். வாய் திறக்கவில்லை. பேசவில்லை. பேச முடியாதவாறு வாய் நிறைய நாவல் பழம் அடைத்துக் கிடந்ததே..
”அடம் பண்ணினே பிச்சுடுவேன் பிச்சு. மரியாதையா வாயைத் திற”
உன் கண்கள் மலங்க மலங்க பார்த்தன. தலையை மீண்டும் அசைத்தாய் . வேண்டாம் விட்டுவிடு” என்று ஜாடை காட்டினாய். புரிந்து கொண்டாளா யசோதை?
”பிடிவாதமா பண்றே. இப்ப பார்” . யசோதா திறவாமல் மூடிக்கொண்டிருந்த உன் வாயைத்தன் கையால் திறந்தாள். வாய் மெதுவாக திறந்தது. உள்ளே எவ்வளவு மண் இருக்கிறது என்று கவலையோடு பார்த்தாள். ஆனால் அவளுக்கு மார்பு படபட என்று அடித்துக் கொள்ள, கண்கள் இருள கை கால் நடுங்க தலை சுற்றியது.
கிருஷ்ணா, உன் வாயில் மண் அல்ல, மண்ணுலகமே, ஏன், வானுலகமும், இந்த பிரபஞ்சமே தெரிந்தது.
அனைத்தும் சுழன்றது. இதோ யமுனை, கங்கை, ஹிமாசலம், ஏன் இந்த ஆயர்பாடி கூட தெரிகிறதே, உன் வீடு, அந்த மரம், அதன் கீழே யசோதை, எதிரே தரையில் உட்கார்ந்து கொண்டு கிருஷ்ணா நீ, உன் திறந்த வாய், அந்த திறந்த வாய்க்குள் மீண்டும் பிரபஞ்சம், திரும்ப திரும்ப அளவில்லாத பிரபஞ்சம், பிரபஞ்சத்தில் மற்றொரு பிரபஞ்சம்..” யசோதை கையை உன் வாயில் இருந்து எடுப்பதற்குள் அவளே தரையில் மயங்கி விழுந்தாள். நீ வாயை மூடிக்கொண்டு சிரித்தாய் . சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு எழுந்த யசோதா,
”என் கிருஷ்ணா, நீ யார்…? அவள் வாய் மெதுவாக முணுமுணுத்தது.
உனக்கும் மண்ணுக்கும் நிறைய சம்பந்தம் உண்டே கிருஷ்ணா. மண் தின்றவன் நீ. இந்த மண்ணுலகில் எங்களை காப்பவன் நீ. இந்த மண்ணுலகையே ஒரு காலால் அளந்தவன் நீ. மண்ணையும் விண்ணையும் தன்னுள் காட்டியவன் நீ. மண்ணுலகமான இந்த பூமா தேவியோடு காட்சி தருபவன் நீ. வ்ரஜபூமி மண்ணில் வாழ் மக்களை, மாக்களை, சகல உயிர் காக்க கோவர்தன மலையையே இடது சுண்டு விரலில் தூக்கியவன் நீ. மன்னுயிர் மண்ணில் வாழ வகை சொல்லித்தரும் கீதை சொன்னவன் நீ.
கோவிந்தா உனது பாதாரவிந்தங்களில் சரணடைகிறோம்.