ஒரு பழங்கதை. – நங்கநல்லூர் J K SIVAN
சந்திரகுப்த மௌர்யனைப் பற்றி ரொம்ப விஷயம் கிடையாது. ஒரு அற்புதமான ராஜா. அவன் வெற்றிக்கும் பெருமைக்கும் முதுகெலும்பு நமது மதிப்புக்குரிய சாணக்கியன் எனும் கௌடில்யன். சந்திரகுப்தன் காலத்தில் கிரேக்க யாத்ரீகன் மெகஸ்தெனிஸ் வந்து ஐந்து வருஷம் ராஜாவின் அரண்மனையில் இருந்திருக்கிறான். மெகஸ்தெனிஸ் எழுதிய இண்டிகா புத்தகம் இப்போது கிடையாது. அதன் சில சிதறல்களை பல வெள்ளைக்காரர்கள் கிரேக்கர்கள் எங்கெங்கோ தேடிப்பிடித்து எழுதியது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. ”எங்கே சந்திரகுப்தன்” என்று சொல்லு என்றால் அவர்கள் வாயில் நுழைந்த வார்த்தை ”சன்றக்கோட்டோஸ்”. ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வராவதி ஆன கதை. தரங்கம்பாடி ட்ரங்குபார் ஆன மாதிரி. சாணக்யரின் அர்த்தசாஸ்திரத்தில் குப்தன் கால சட்டம் விதிமுறைகள் பழக்கத்தில் இருந்தது. ராஜாவுக்கு கௌடில்யனிடம் பெருமதிப்பு. அவனது குரு அவர்.
நந்தர்களை முறியடித்து மௌர்ய சாம்ராஜ்யத்தை சந்திரகுப்தன் நிறுவ முக்கிய காரணம் சாணக்கியன். இப்போது அவன் இல்லையே என்று ஏங்குகிறேன். நமது பாரததேசத்தை எவ்வளவு அற்புதமாக மாற்றி இருப்பான்?சந்திரகுப்தனின் தலைநகர் பாடலிபுத்திரம். மெகஸ்தெனிஸ் வாயில் அது ”பள்ளி போதம்’. சந்திரகுப்தன் பரம்பரையில் வந்தவர்கள் பிந்துசாரன், அசோக சக்கரவர்த்தி. போதுமா? பழைய கால பௌத்த, ஜைன, ஹிந்து,கிரேக்க கல்வெட்டுகள், ஓலைகள், எழுத்துக்கள் சந்திரகுப்தன் புகழ் பாடுகிறது.ஒன்று சொல்வது போல் மற்றொன்று சொல்லவில்லை என்பதால் எதை நம்புவது என்று தேவைப்படுபவர்கள் யோசிக்கட்டும். நாம் உருப்படியாக ஏதாவது டிவி பார்க்கலாம்.
சந்திரகுப்தன் பாடலிபுத்ரத்தில் பிறந்தவன். அன்றைய பாடலிபுத்திரம் இன்றைய பாட்னா. பீகாரில் இருக்கிறது. அவன் சரித்திரம் கதைகள், நாட்டுப்பாடல்கள் மூலம் தான் அறிய முடிகிறது. சரித்திர புத்தகம் ஆதாரமாக எதையும் சொல்வதற்கில்லை. அவன் க்ஷத்ரியனா என்றே ஆதாரபூர்வமாக சொல்ல வழியில்லை. பிப்பலிவாஹனா என்கிற நேபாள்-இந்திய எல்லைப்பகுதி ஊரில் மயில் வளர்க்கும் மூரா என்பவள் பிள்ளை அவன். அம்மா பெயரால் தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கு பிற்காலத்தில் மௌரிய சாம்ராஜ்யம் என்று பெயரிட்டான். நந்த குல ராஜபரம்பரையை சேராதவன் என்பதால் அவனால் அரசனாக முடியவில்லை. எப்படியோ அவனுக்கு நந்த குலத்தோடு சம்பந்தம் இருப்பதை அறிந்து தான் சாணக்கியன் அவனை ராஜாவாக்கினான். இல்லையென்றால் சாணக்கியன் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கவே மாட்டான்.
அவன் காலத்தில் ஆண்ட நந்த வம்ச ராஜ தன நந்தன். அவனை வென்று சந்திரகுப்தன் ராஜாவானான். கிரேக்க சக்கரவர்த்தி அலெக்சாண்டர் கண்ணால் கண்ட கேள்விப்பட்ட ராஜ்யங்களை, நாடுகளை வென்று கொண்டே இருந்த சமயம் அது. அவன் பார்வை இந்தியா மீது விழுந்தது. அவனுடைய தளபதி செலுக்கஸ் நிகேடார் என்பவனை ”பெரும்படையோடு இந்தியாவுக்கு போய் வென்று வா” என்று அனுப்பினான். இந்தியாவில் நம்மை வெல்பவர் யார் இருக்கப்போகிறார்கள் என்று நினைத்து வந்த செலுக்கசை சந்திரகுப்தனை வைத்து சாணக்கியன் வென்றுவிட்டான். தோற்ற செலுக்கஸ் தன பெண்ணையும் 500 யானையும் சேர்த்து மாப்பிள்ளை சந்திரகுப்தனுக்கு கொடுத்துவிட்டு போனான்.அப்போது வட இந்தியா சுக்கு நூறு குட்டி குட்டி ராஜ்யங்களாக இருந்தது. மகத ராஜ்ஜியம் தான் இருப்பதிலேயே கட்டுக்கோப்போடு சொல்லும் அளவுக்கு படை பலத்தோடு இருந்த ஹிந்து ராஜ்யம். சாணக்கியன், நமது வல்லபாய் பட்டேல் அந்த காலத்தில் என்பதால் மற்ற ராஜ்ஜியங்களோடு நல்ல உறவு வைத்துக்கொண்டு சந்திரகுப்தனை மகத சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாக்கினான். இந்த படை பலத்தால் தான் செலுக்கஸ் நிகேடாரை தோற்கடிக்க முடிந்தது. இன்னும் சொல்லுகிறேன். நான் இப்படி சந்நியாசி விஷயங்களையும் பழைய சரித்திர கதைகளையும் சொல்கிறேனே, எத்தனை வாசகர்களுக்கு நான் எதிரியோ தெரியவில்லை. என்ன செய்வது, என்னால் முடிந்தது இது தான்.