DEVOTIONTO KRISHNA J K SIVAN

கிருஷ்ண பக்தி – நங்கநல்லூர் ஜே.கே. சிவன்

யாருமே கிருஷ்ண பக்தியில் ராதைக்கு ஈடாக முடியாது. ராதைக்கு அப்படி ஒரு ஆழ்ந்த பரவசம், பக்தி கிருஷ்ணனிடம். தலைகீழாக நின்று தவம் செய்து என்ன ப்ரயத்தனப் பட்டாலும் எவ்வளவு படித்தாலும், எழுதினாலும், பேசினாலும், பாடினாலும் , கேட்டாலும், ராதா–கிருஷ்ணன் பிரேம பந்தம் விளக்க முடியாத ஒன்று . புரிந்து கொள்ள முடியாதது. புரிய வைக்கவும் முடியாது. பாதம் ஹல்வா என்று அதன் படத்தை பல விதத்தில் அநேக வண்ணத்தில் பிரசுரித்தாலும், நாள் கணக்கில் அதன் ருசியை பற்றி எடுத்துரைத்தாலும், அதன் செய்முறை பக்குவம் பற்றி எழுதினாலும், அதன் உண்மையான ருசி தெரியப்போவதில்லை. ஒரு விள்ளல் வாய்க்குள் போனால் அன்றி ருசி அறியமுடியாது. பாதம் ஹல்வா ருசியாக இனித்தது என்று எழுதினால் அதன் ருசி தெரியவா போகிறது?.

இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு கண் மூடி ரசித்தால் மட்டுமே அதன் ருசி புரிபடும். நாமே ராதாவாக மாறி கண்ணனை நேசித்தால் ஒருவேளை அப்போது தான் தூய பிரேமை அன்பு பாசம் நேசம் என்றால் என்ன என்று தெரியவரும். இது அவரவர் மனதில் துய்க்க, அனுபவிக்க வேண்டியது. உனக்காக நானோ எனக்காக நீயோ அனுபவிக்க இயலாதது. அளவில்லாமல் எண்ணற்ற இன்ப அனுபவங்கள் பிரவாகமாக ஒவ்வொரு மனத்திலும் வெவ்வேறாக உருவாகும் போது தான் பக்தி என்பதன் உள்ளர்த்தம் புரியும். நெருப்பு சுடும் என்றால் புரியாது. தொட்டதும் தான் அனுபவம் கிடைக்கும்.

ஏதாவது ஒன்று நமக்கு தேவை என்ற போது மட்டும் கடவுளை நாடுபவர்கள் நாம். கடவுள் அதை எப்படி இதை ஏற்பார்? இது தான் நம்முடைய ப்ராப்ளம். எங்கு, என்றைக்கு, எவர் மூலம் கொடுப்பாய்? என்று அவனை வேண்டினால் அந்த எதிர்பார்ப்பு முழு மனதுடன், நம்பிக்கையுடன் கடவுளை வேண்டுவது ஆகாது. கடவுளை நாம் சந்தேகிப்பதைத்தான் அது தெரிவிக்கிறது.

ராதா கண்ணனை முழுமையாக தன்னுடைய உயிர் மூச்சாக நம்பினாள், தானே கண்ணன் என்று உணர்ந்தவள். கண்ணா நீ வேறு நான் வேறோ என்று இணை பிரியாதவள். அவள் எண்ணத்தில் அதனால் தான் கண்ணன் பிரதிபலித்தான் . சரணாகதியின் உச்ச நிலை இது. மீராவின் பாடல்களிலும் இந்த த்வனி எதிரொலிக்கும். ஆண்டாளின் பாசுரங்களும் அவ்வாறே.

ராதை எப்போதும் தன்னை மற்ற கோபியர்களை விட உயர்ந்தவள், சிறந்தவள், தலைவி, எனக் கருதவில்லை. சொல்ல வில்லை. அப்படி ஒரு நினைப்பே அவளுக்குள் எழவில்லை. அவளது கிருஷ்ண பக்தியும் பிரேமையும் தானாகவே மற்ற கோபியரை அவளை வணங்கச் செய்தது. அடி தொட்டு பின்பற்றச் செய்தது.

ஒரு சிறு வேண்டுகோள். எந்த காரணத்தைக் கொண்டும் நம்மிடையே உலவுகின்ற சில படங்களில், நாட்டியங்களில், நாடகங்களில், தொலைக் காட்சிகளில், கதைகளில், கவிதைகளில், சினிமா பாடல்களில் வர்ணிக்கப்படுகின்ற ராதாவை ரசித்து விட்டு இது தான், ”ராதா கிருஷ்ணன் காதலா , பிரேமையா , அப்பட்டமாக இது தானா’?” மட்டரகமாக இருக்கிறதே” என்று எடை போட வேண்டாம். அறியாமையால் அதெல்லாம் வெளிப் படுத்தப்பட்டவை.
ஒவ்வொருவரும் அவரவர் மனதில் அறிவதே ஏற்புடைய வழிகாட்டி. மற்றவரிடம் கடன் வாங்கிய கருத்தாக அமைய வேண்டாம். அதாவது மேலே சொன்ன, படம் கதை, பாட்டு, நாடகம், நாட்டியம் இத்யாதி இத்யாதி…அவரவர் மனநிலையை பிரதிபலிப்பது. உண்மையை வெளிப்படுத்துவது இல்லை. அது முடியாது. ஏன் என்றால் அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கும். இது தான் அது என்று உறுதியாக சொல்வதில்லை. அதை பேசவோ,எழுதவோ முயன்றால் முழுமையாக இருக்காது. ”விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்” இது தான். ஆனந்தத்தை வார்த்தைகளில் படங்களில் கொண்டுவரமுடியாது.. ஸ்வானுபவம்.

மனதில் எழும் விரகத்தை விரசமாக்கினால் புனிதம் கெடும். பெருமை மங்கும், உன்னத உயர்ச்சி தாழ்ந்து விடும். ஆங்கிலத்தில் RADHA என்கிற எழுத்தை திருப்பிப்போட்டால் ARADH, ADHAR என்று படிக்கலாமே. ”ஓஹோ ராதா என்ற சொல்லே கிருஷ்ண ஆராதனை யின் பிரதிபலிப்போ, தத்துவமோ? RADHA கிருஷ்ணனுக்கு ஆதாரமா? ராதா தான் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் எண்ணத்திலும் கண்ணனையே ”ஆராதி”த்தவள், ‘ஆதார” மாக கொண்டவள் என்றும் கூட புரிந்து கொள்ள முடிகிறதே. இப்படி சிந்திப்பவர்கள் ராதாகிருஷ்ண பிரேமையை புரிந்து கொண்டவர்கள்.

ஒரு சில வரிகளில் குட்டிக்கதை ஒன்று சொல்லி முடிக்கிறேன்.
ராதா பக்கத்து கிராமத்துக்கு நடந்து போகிறாள். நேரம் ஆக ஆக சூரியன் மேலே எழும்பி எங்கும் உஷ்ணம் தகிக்கிறது. சுடு மணலில் நடந்து கொண்டிருந்த ராதாவிற்கு ஒரு மர நிழலில் சற்று இளைப்பாறலாம் என்றால் ஒரு மரமும் கண்ணில் படவில்லை. அவள் விடுவிடுவென்று சுடு மணலில் மேலும் நடந்தாள்.
அவள் ஏன் கண்ணனை அப்போது நினைக்கவில்லை? கண்ணனை நினைத்தால் கால் சுடாதே. ஏன் அப்படிச் செய்யவில்லை? காரணம் என்ன தெரியுமா?
” மாட்டேன், மாட்டவே மாட்டேன், அவனை நினைத்தால் அவன் இங்கு என்னோடு வந்து பாவம் அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இந்த சுடுமணலில் நடக்கும் கஷ்டம் என்னோடு போகட்டும். நிழலில் சென்று அங்கே அவனை நினைக்கிறேன். அவனோடு அங்கே இளைப் பாருகிறேன்” என நினைத்தாள் ராதா. இது தான் ராதா. .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *