THAMBUSWAMY SAYINGS. J K SIVAN

தம்புசாமியின் தங்க மொழிகள் – நங்கநல்லூர் J K SIVAN
தம்புசாமிக்கு பொன்மொழிகள் பிடிக்கும் அளவுக்கு பழமொழிகள் பிடிக்காது.எங்கெங்கோ தேடிபிடித்து ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ஒரியா, செவ்விந்தியர்கள் பாஷைகளிலிருந்து எல்லாம் பொன்மொழிகள் கண்டுபிடித்து யார் யாரையோ விட்டு மொழிபெயர்க்க சொல்லி அர்த்தம் புரிந்து கொண்டான். அவன் கடைசியில் ஒரு பத்திரிகையில் தனது பொன்மொழிகள் அச்சில் தனது பெயரை தாங்கிக்கொண்டு வரவேண்டும் என்று தவமிருந்த போது என்னிடம் ஒருநாள் வந்தான். எதற்கு என்னிடம் என்று இன்னும் எனக்கு புரியாததால் அவன் கொண்டு வந்து காட்டிய சில பொன்மொழிகளை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். இது அச்சேறுமா? தம்புசாமியை நண்பர்கள் தப்பு சாமி என்று தான் வேடிக்கையாக கூப்பிடுவார்கள்.
1.” மாந்தர்காள், ஐயோ, காலம் சென்று கொண்டிருக்கிறதே என்ற கவலையா? பேசாமல் உடனே கடிகாரத்தின் பேட்டரியை வெளியே எடுத்து விடுங்களேன். கடிகாரமும் நிற்கும் காலமும் காட்டாது. நிம்மதியாய் இருக்கலாம். காலம் தான் செல்லாதே”.
2.”ஹே, உலகமே, நான் நல்லவன். என்னைப்போல எவரும் இல்லை. என்னை நேர்மையாக மதிப்போடு நடத்து என்று அலறுவது, சிங்கத்திடம் இனி நீ கத்திரிக்காய், முள்ளங்கி, சக்கரை வள்ளிக்கிழங்கு, போன்ற மரக் காய்கறி மட்டும் சாப்பிடேன் என்று கேட்பது போல.”
3. ”அழகு நம் உடையால் பிறர் ரசிப்பது இல்லை, நம் உள்ளத்தால் தான் என்பதற்காக உடையில்லாமல் தெருவில் திரிந்து உண்மையை அறிந்து கொள் என்று சொன்னால், அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். உன் அழகை எப்படி எல்லோரும் ரசிக்கிறார்கள் என்பது உடனே மற்றவர்களின் செயல் வடிவாக உனக்கு அனுபவம் கிட்டும்”. .
4. ”நீ தான் இந்த உலகத்தையே ஆள்கிறாய் என்று தலை நிமிர்ந்து நடக்காமல் எவன் ஆண்டால் எனக்கென்ன என்று நட. இது தான் உயர்ந்த தியாகம். சுயநலம் என்று சிலபேர் தப்பாக சொல்கிறார்கள். புத்தரை சந்தித்தால் கேட்டு தெரிந்து கொள். புத்தர் கிடைக்காவிட்டால் தமிழகத்துக்கு வா”
5. ”ஒவ்வொரு அம்மாவும் தன்னுடைய பெண் தன்னை போல் தப்பாக செலக்ட் பண்ணாமல் ஒரு நல்ல கணவனை அடைய வேண்டும் என்று மட்டும் நினைப்பதோடு அல்லாமல் தன்னுடைய பிள்ளைக்கு அவனுடைய அப்பாவுக்கு கிடைத்தது போல் ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமே என்று கவலை படுகிறாள். இது உலகெல்லாம் சுற்றி அலைந்து கண்டுபிடித்த பேருண்மை. பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய விஷயம். இது மஹா ஜனங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?”
6. ”என் கணவன் நல்லவன், புகை பிடிக்கவில்லை, குடிக்கவில்லை, மற்ற பெண்ணை ஏறெடுத்து பார்த்ததில்லை. ஓட்டலுக்கு போனதில்லை. சமத்தாக எட்டுமணிக்கே தூங்கி விடுவார். டிவி பக்கமே போகமாட்டார். பாட்டு எல்லாம் பிடிக்காது. கதை புத்தகம் எல்லாம் படிக்க மாட்டார். கோவிலுக்கு மூன்று வேளை செல்வார். மாமிசம் சாப்பிட்டதில்லை. ஒரு சினிமா பார்த்ததில்லை, தினத்தந்தி நக்கீரன் எல்லாம் படித்ததில்லை. இறந்து விட்டார் . உடனே இன்சூரன்ஸ் பணம் கொடுக்கவும்” என்று கேட்ட மனைவிக்கு இன்சூரன்ஸ் கம்பனி பதில் சொல்லியது :
” சாரி மேடம் உங்கள் கணவன் வாழ்க்கை என்னவென்று தெரியாமல் கடைசிவரை உலகில் எல்லோரும் போல வாழவே இல்லையே. வாழ்ந்தால் தானே இறக்க முடியும் அப்புறம் தானே பணம் கொடுப்பார்கள்!! .
7. ”மனைவியை முதலைகள் நிறைந்த குளத்தில் போட்டவன் மீது மிருக கொடுமை வதை செய்வோரை எதிர்க்கும் மிருக உரிமை கழகம் கடும் எதிர்ப்பு செய்து வழக்கு போட்டது.நல்லவேளை இந்தியாவில் இது நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை. முதலைகளும் பேசவும் டிவி பார்க்கவும் ஆரம்பித்து விட்டால் இலவச டிவி யார் கொடுப்பார்கள்??
8. ”தற்கொலை செய்துகொள்ள எத்தனையோ வழி உள்ளதே, விஷம், தூக்க மருந்து, தொங்குவது, மேல் மாடியிலிருந்து விழுவது, போன்று , இருந்தாலும் ஏனய்யா திருமணம் செய்து கொள்கிறோம்?. ஒரு அறிஞரின் கேள்வி கேட்டதற்கு சில சாமியார்கள் இன்னும் பதில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்”.
9. ”கணக்கு பார்த்தால் இருபது சதவீதம் பையன்களுக்கு தான் மூளை இருக்கிறது . மற்றவர்களுக்கு பெண் நண்பிகள் தான் இருக்கிறார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் ஒத்துக் கொண்டிருப்பதை இந்தியாவும் ஏற்றுக் கொள்ளலாமே.
10. ”ஆஹா நம்மிடம் இது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நாம் நினைப்பதெல்லாம், ஒன்று தடை செய்யப்பட்டதாகவும், தகாததாகவும், நீதிக்கு புறம்பாகவும், விலை உயர்ந்ததாகவும் மற்றவன் மனைவியாகவும் கூட உள்ளதே என்று சீன துறவி ஒருவர் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.!!!!!
11. ”10% சாலை விபத்துகள் குடித்து விட்டு ஒட்டுவதால் என்று சொல்கிறார்களே மற்ற 90% விபத்துகள் குடிக்காமல் ஒட்டுவதால் அல்லவோ நடக்கிறது ? என்று தம்புசாமி கடைசியில் ஒரு கேள்வி கேட்கிறார். உங்களில் யாருக்காவது பதில் தெரிந்தால் கமிஷனர் ஆபிசுக்கு சொல்லலாம்.
இப்போதைக்கு இவ்வளவு பொன்மொழிகள் மட்டும் போதுமல்லவா? என்று தம்புசாமி கேட்டபோது நான் சிலையாகி வெகுகாலமாகிவிட்டது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *