THIRUPPAVAI J K SIVAN

அழகிய  ஆழ்வாரே ,  ஆண்டாளே !            –   நங்கநல்லூர்   J K  SIVAN திருப்பாவை
மார்கழி 8ம் நாள்:
8.  தேவாதி தேவன்  

சமீபத்தில்  கொஞ்ச நாளாக  கொரோனா  தொந்தரை இல்லாமல் இருந்தோம். இப்போது  புது மாதிரியான கொரோனா  ஓமிக்ரான்  வேகமாக  பரவுகிறதாமே.   கொரோனாவை விட மோசமானதாம்.  முகமூடி இல்லாமல் எங்கும் அலைய வேண்டாம்.  அதற்கு  என்னவோ புது ஊசி மருந்து,  முக கவசம்  எல்லாம்  இனிமேல் கட்டயாமாகலாம்.   வீட்டில் தனிச்சிறை மீண்டும் வரலாம்.
அதெல்லாம்  ஒன்றுமே  அறியாத  காலத்தில்  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு  முன்பு   ஆண்டாள் காலத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
வாழ்க்கையில் சில விஷயங்கள் அலுப்பு தட்டுவதில்லை. காரணம் மனம் தான்.   அது தனக்கு பிடித்ததையே பேசுகிறது, பாடுகிறது, நினைக்கிறது, பார்க்கிறது. எழுதுகிறது.  இது போலவே  தான்  படிப்பதும். ஏற்கனவே தெரிந்தது தானே, புதிதல்லவே என்று ஒருபோதும் நினைப்பதில்லை.  ஒவ்வொரு முறை படிக்கும்போது ஒரு புது  அர்த்தம். ஆர்வம். ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் இப்படிப்பட்டவை.  காலம் காலமாக எண்ணற்றோர் எத்தனையோ முறை, எத்தனை வருஷங்களாக  பக்தியோடு படித்திருக்கிறோம், பாடி இருக்கிறோம், இன்னும் அதில் படிக்க நிறைய இருக்கிறது என்பதை விட அறிந்து கொள்ள  வேண்டியது அளவற்றதாக இருக்கிறது. காரணம் முப்பது பாசுரத்தில் மூன்று லோக விஷயங்களை யும் அடைத்து வைத்திருக்கிறாள் அந்த சிறுமி ஆண்டாள்.

இன்றும், ஆமாம் இந்த மார்கழி 8 வது நாளும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பிக் கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்கிறாள்.. அந்தச் சிறிய ஆயர்பாடி கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர் நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், அதற்கு அருகாமையில் நந்தகோபன் வசிக்கும் பெரிய மாளிகை, நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், அதை சுற்றிலும் கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில  மண்  வீதிகள், தூரத்தில்  தெரியும் காடு, அங்கே தான் யாரும் செல்வதில்லையே!

”என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினால் தான் நோன்புக்கு வருவது என்று   ஒரு வழக்கமாகி விட்டது இந்த பெண்களுக்கு. நாம்  வந்து கதவை தட்டி எழுப்பினால்  தான் வருவார்கள் போலிருக்கிறது” என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்

”அதனால் என்ன, வாங்க போய் அவர்களை எல்லாம் எழுப்புவோம் ‘ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்.
”எழுந்திருங்கள், உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்தாகி விட்டது. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமாக அசைந்து மேச்சலுக்கு வந்துவிட்டனவே. . சிலது காத்திருக்கிறது. எங்களைப் போல!! நாம் எல்லோரும் விரதமிருந்து அந்த கிருஷ்ணனை, சாணுரன் என்ற மல்லனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை, எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை,  பூஜிப்போம். எழுந்து வாருங்களேன். நேரமாக வில்லையா?”

ஆண்டாள் மற்ற சில பெண்களுக்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் நேரத்தில் நாம் பொடி நடையாக நடந்தே ஆயர்பாடியிலிருந்து நேராக வில்லிபுத்தூர் வந்து விடுவோம். நம்மால்  இவ்வளவு தூரத்தையும் மனதாலேயே   நடக்க இயலுகிறது.

+++
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தரின் ஆஸ்ரமத்தில் வழக்கம் போலவே வாயிலில் பெரிய கோலம் போட்டு வைத்திருக்கிறாள் கோதை. அதன் அருகே மான் விழியோடு ஒரு இளம் பொன்னிற பசுங் கன்றுக்குட்டி ”அம்மா” என்று நின்றவாறே குரல் கொடுத்துக்  கொண்டு தனது அம்மாவைத் தேடுகிறது.  அட,  ஆயர் பாடியில் எருமை, வில்லிபுத்தூரில் பசுவா? ”பலே பலே”.    நல்ல காம்பினேஷன் (COMBINATION) இல்லையா! .

உள்ளே விஷ்ணு சித்தரின் முகம் அந்த சிறிய அகல் எண்ணெய் விளக்கொளியிலும் மலர்ந்து காண்கிறதே. தலை ஆடுகிறதே.   அவ்வளவு சுகமாக ரசிக்கிறார், அன்று அவர் மகள் கோதை எழுதிய பாசுரத்தின் அர்த்தத்தையும் அவள் பாடும் இனிமையும் சேர்த்தே  சுகானுபவம்.
ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சாணூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு,  போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றிப்  பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.

”கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.”

விஷ்ணு சித்தர் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக ரசித்து புளகாங்கிதமடைகிறார்:

ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால்,   இதைவிட பரமனிடம் சரணாகதி அடைவதைப் பற்றி யாரும் இவ்வளவு சுருக்கமாக சொல்ல  முடியாது.

”தூக்கத்தை விட்டு எழுந்திரு” என்பதே உலக மாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். ‘வெளிச்சம் வந்துவிட்டது’ என்பதே ”உன்னை நீ புரிந்துகொண்டாய்”  என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது  அஞ்ஞான பனியைப்போக்கும்  ஆத்ம சூர்யன்.

மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் திருப் பாதங்களின் சுடரொளி, ஆஹா பிரமாதம். அந்த பாடலை மனதிற்குள் தானே அசை போட்டு ரசித்தவாறு அவர் பூக்குடலையைத் தேடினார். விடிந்து  விட்டதே. நந்தவனத் திற்கு சென்று புத்தம் புதிய வண்ண வண்ண மலர்களை பறித்து, ரங்கனுக்கு மாலை தயாராக வேண்டுமே! கோதையின் பாமாலையோடு கோவிந்தனுக்கு பூமாலையும் சூட்டவேண்டுமே!.

இந்த பாசுரத்தை என்னுடைய வாழ்நாளில் இதுவரை எண்ணிலடங்காமல் MLV குரலில் தன்யாசியில் செவியுற்று மகிழ்ந்து வருகிறேன். இன்னும் நிறைய கேட்பேன் இருக்கும் வரை.     சந்நியாசி போல் எல்லா ஆசையை விட்டாலும் தன்யாசி மேல் உள்ள ஆசை மட்டும் என்னை விடவே இல்லை. இது தான் அந்த லிங்க்
https://youtu.be/2L4oW43nu90

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *