திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
நான்காவது அறுபடை வீடு: 3. திருவேரகம் (சுவாமிமலை
வரிகள் 177 முதல் 189 வரை.
இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ 177
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி 178
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் 179
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை 180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் 181
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல 182
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் 183
புலராக் காழகம் புலர உ டீஇ 184
உ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185
ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி 186
நாவியன் மருங்கின் நவிலப் பாடி 187
விறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந் 188
தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று 189
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு தான் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா, தகப்பன் சாமி, உறைகிறான். ஸ்வாமிக்கே நாதனாக விளங்கிய முருகன் இங்கே ஸ்வாமிநாதன் எனப் படு கிறான். இந்த க்ஷேத்ரமும் சுவாமிமலை என்ற பெயர் பெற்றது. தஞ்சாவூரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்,கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகும் .சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற அர்த்தத்தில் ஸ்வாமிமலைக்கு திரு (ஏர்+அகம்) திருவேரகம் என்று பெயர். . ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்றும் அர்த்தம். ஷண்முகன் இங்கே நான்கரை அடி உயர நின்ற கோல சுவாமிநாதன். வலக்கரத்தில் தண்டாயுதம். இடக்கரம் இடுப்பில். சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் தரித்த, கருணாமூர்த்தி. ஞானமும் சாந்தமும் தவாழும் வதனம். நெல்லி மரம் ஸ்தல விருட்சம். வடமொழியில் “தாத்ரி” ஆகவே சமஸ்க்ரிதத்தில் ஸ்வாமிமலைக்கு “தாத்ரிகிரி” எனப்பெயர் .
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்னும் ஆறு நன்மை புரியும் செயல்களில் வழுவாமல், தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்று என்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியில் பிறந்த, நாற்பத்தெட்டு இளமை மிக்க நல்ல மெய் நூல்கள் குறித்த நல்ல நெறி முறை வழிப்படி கழித்த ஆண்டுகளை, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கொள்கையையும் மூன்று தீயால் உண்டாகிய செல்வத்தினையும் உடைய, நூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகிய இருபிறப்பையுடைய வேதமோதும் பிராமணர் வழிபடும் பொழுது அறிந்து வாழ்த்தும் ஸ்வாமிநாதன், முப்புரியில் ஒன்பது நூலைத் தன்னிடத்தில் கொண்ட பூணூலை அணிந்த சுத்தமாக நீராடி ஈரமுடைய ஆடையை உடம்பில் கிடந்து புலருமாறு உடுத்திய, தலை மேலே குவித்த கையினை உடையவராய், தன்னைத் துதித்து, ஓம் சரவண பவா எனும் ஷடாக்ஷரம், ஆறு எழுத்தினைத் தன்னிடத்தில் கொண்ட கேட்பதற்கு அரிய ஓதப்படும் மந்திரத்தை, நாவில் பெயரும் அளவில் பயில ஓதி, மணம் மிகுந்த மலர்களைத் தூவி, பெரிது உவந்து பக்தர்களால் வணங்கப்படும் ஷண்முகன் என்கிறார் நக்கீரர். அவனை வணங்கினால் வேண்டியதை பெறலாம்.