யாரால் வெற்றி? நங்கநல்லூர் J K SIVAN
அர்ஜுனனின் மகன் அரவான் வீர இளைஞன். மஹா பாரத யுத்தத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெற்றி கொள்ள படைத்த கள பலி சடங்கில் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள முன் வந்த தீரன். யுத்தத்தில் பாண்டவர்களுக்கு உதவியாக போரிட ஆசைப்பட்டவன். ஆகவே களபலிக்கு முன் அவன் கிருஷ்ணனிடமிருந்து பெற்ற மூன்று வரங்களில் ஒன்று: களபலிக்குப் பின்னாலும் தனது கண்களால் பாரத யுத்தத்தை முழுதும் பார்க்க வேண்டும் என அரவான் விரும்பினான். அரவான் விரும்பியபடியே கள பலியில் வெட்டப்பட்ட அவன் தலை ஒரு உயரமான இடத்தில் ஒரு மரக்கிளையில் தொங்கவிடப் பட்டது. அங்கிருந்து பார்த்தால் குருக்ஷேத்திர போர்க்களம் முழுவதும் தெரியும்படியான ஒரு இடம் அது.
போர் முடிந்து விட்டது. கௌரவர் பக்கம் பாண்டவர் பக்கம் ரெண்டிலுமே நிறைய பேர் மாண்டு விட்டார்கள் . பாண்டவர்கள் ஐவர் மற்றும் ஒரு சிலரே உயிர் பிழைத்தவர்கள். பாண்டவர்கள் வெற்றிச் செருக்கில் தங்களது தனிப்பட்ட வீரத்தால் வெற்றி எளிதில் கிட்டியது என்ற எண்ணத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர். அர்ஜுனன் தனது சாகசத்தால் ஜெயம் கிட்டியதாகவும் பீமன் தனது கதாயுதத்தால் துரியோதனன் முதலாக அவர்கள் 100 பேரின் உயிரை குடித்ததால் தான் வெற்றி என்றும் பெருமிதம்..
“அர்ஜுனா, உன் வில் வித்தை பீமனின் கதாயுதத்தின் சாகசத்துக்கு இளைத்ததில்லை/ உங்கள் இருவரின் பலத்தால் கிடைத்த பரிசு தான் இந்த யுத்தத்தில் வெற்றி என்று கருதுகிறீர்கள்.. இந்த யுத்தத்தை நன்றாக அலசி இரு பக்க சாகசங்களையும் நன்றாக உணர்ந்தவர்களே இந்த யுத்தத்தின் வெற்றியை பற்றி கருத்து கூற முடியும்” என்றான் கிருஷ்ணன்.
“அப்படி யார் இருக்கிறார்கள் சொல்வதற்கு. ?. எல்லோருமே போயாச்சே” என்றான் பீமன்
“பீஷ்மர் இருந்தால், துரோணர் இருந்தால், விதுரன் பார்த்திருந்தால் சரியான கருத்து கூறக் கூடியவர்கள். அவர்களை எங்கே போய் தேடுவது” என்று சிரித்தான் அர்ஜுனன்
சிறிது நேரம் மௌனம் குடிகொண்டது.
“அடேடே!, நாம் எல்லாம் மறந்துவிட்டோமே இந்த யுத்தத்தை ஆரம்ப முதல் கடைசி வரை பார்த்துக் கொண்டே இருக்கிறவன், இன்னும் அங்கே இருக்கிறானே அவனை நீங்கள் யாருமே நினைத்து பார்க்கவே இல்லையே” என்றான் கிருஷ்ணன்
“கிருஷ்ணா, நீ யாரை சொல்கிறாய் என்றான் பீமன்”
அர்ஜுனனுக்கு புரிந்து விட்டது. ”ஆமாம் கிருஷ்ணா அரவான் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறானே. உடனே போய் அவனை விடுவிக்க வேண்டும்.” அரவான் தலை இன்னும் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது .
“அரவான், உனது விருப்பம் நிறைவேறி விட்டதல்லவா? என்று கேட்ட கிருஷ்ணனிடம் “ஆம். பிரபு, பாரத யுத்தம் பதினெட்டு நாளும் நடந்ததை எல்லாம் கண்ணார கண்டேன். பாண்டவர் வெற்றியில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.”
“எல்லாம் உன்னால் அஸ்திவாரம் போடப்பட்டதால் தானே அரவான்” என்றான் கிருஷ்ணன்
“கிருஷ்ண ப்ரபோ, துரியோதனனுக்கு என்னை களபலிக்கு கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தும் தக்க சமயத்தில் களபலி நாளை மாற்றி என்னை பாண்டவர் வெற்றிக்காக களபலி கொடுக்க வைத்தது உங்கள் கிருபையால் தானே “
“அதெல்லாம் சரி அரவான். நாங்கள் இப்போது உன்னை ஒன்று கேட்கப்போகிறோம். நீ தான் சரியாக தீர்மானித்துச் சொல்லக் கூடியவன்.
“பீமா, இதோ அரவான் தான் சரியானவன். முழு யுத்தத்தையும் இருபக்க சாகசங்களையும் போரில் பங்கேற்காது சமநோக்குடன் பார்த்தவன். அவனைக் கேள் உங்கள் இருவரில் யார் திறமையால் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்று ?”என கிருஷ்ணன் சொன்னான்.
“அரவான் நீயே சொல் எங்கள் இருவரில் யாருடைய சாகசத்தால் அதி தீரத்தால் கௌரவ சேனையை அழிக்கமுடிந்தது. துரியோதனாதிகளை பூண்டோடு ஒழிக்க இயன்றது . எது காரணம் என் கதாயுதமா? அர்ஜுனனின் காண்டீபமா?
அரவான் சிரித்தான். “இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
“பெரியப்பா, காண்டீவத்தையோ உங்கள் கதா யுதத்தையோ இந்த யுத்தத்தில் நான் ஒரு போதும் பார்க்கவில்லையே. உங்கள் ஒவ்வொருவரின் ஆயுதத்திலும் பள பள வென்று மின்னும் சுதர்சன சக்ரமே தெரிந்தது. அதை எதிர்க்க முடியாமல் கௌ ரவர்கள் மடிவதை தான் பார்த்தேன். பாஞ்சஜன்யம் என்ற சங்காயுதம் கௌரவ சேனையின் ரத்தத்தை எல்லாம் தன்னுள் சேகரித்துக் கொள்வதை மட்டுமே பார்த்தேன். போரில் பங்கேற்காத கிருஷ்ணன் பங்கு வெற்றியில் உண்டு என்று தெரிந்தாலும் உலகமே புகழும் தனது சக்தியை பற்றி ஒன்றுமே சொல்லாத அரவானின் மேல் பீமனுக்கு அசாத்ய கோபம் வந்தது. தனது பலத்தையோ வீரத்தை குறித்தோ யார் சொன்னாலும் விட மாட்டானே பீமன். உடனே உடைவாளை உருவி அரவானின் தலையை சிதைக்க கிளம்பினான். கிருஷ்ணன் அவனைத் தடுத்தான். அரவானின் தலை மரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கிருஷ்ணன் சொன்னபடியே அருகிலிருந்த சரபரிகா என்று நதியில் விடப்பட்டது. அந்த நதியின் ஒரு கரையில் சந்திரகிரி என்ற ஊர். அதன் அரசன் ஒருநாள் காலை “குவா குவா” என்று ஒரு குழந்தை நதியில் கத்திக்கொண்டு மிதந்து வருவதைக் கண்டு அதை எடுத்து வளர்த்தான்.
“குவா குவா” என்று கத்திக்கொண்டு குழந்தை சரபரிகா நதியிலிருந்து மீட்கப்பட்ட இடமே கூவாகம் என்ற கிராமம். சரபரிகா நதியில் கண்டெடுக்கப்பட்டதால் அரவானின் அடுத்த பிறவியில் அவன் பெயர் சரபாலன். சந்திரகிரி அரசனின் வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்து பின்னால் சந்திரகிரி அரசனைக் கொன்ற கூத்தாசுரன் என்ற ராக்ஷசனை பழி வாங்கி வென்றதால் கூத்தாண்டவன் என்ற பேரும் அரவானுக்கு கிடைத்தது என்று கூட ஒரு குட்டிக்கதை உண்டு.
அரவானுக்கு உடல் இல்லை, கதைக்கு காலும் கையும் இல்லை எனவே இது நடந்ததா என்று ஆராய வேண்டாம். கதையை கதையாக பார்த்து அதில் தெரிந்து கொள்ள வேண்டியதை மட்டும் அறிந்துகொள்வது தான் விவேகம்.