தென்னாட்டு சிற்பங்கள், நங்கநல்லூர் J K SIVAN
எத்தனையோ தேசங்களில் எத்தனையோ கோவில்களை நேரிலும் படத்திலும் வீடியோவிலும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அவற்றின் தோற்றம், மாண்பு சரித்திரம் என்னை வாய் பிளந்து ஆச்சர்யப் பட வைத்திருக்கிறது.
அதென்னவோ தெரியவில்லை நமது தமிழக , ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால், பாரத தேசத்தில் முக்கியமாக தென்னாட்டுக் கோயில்கள் என்னை மிகவும் கவர்ந்தது போல் மற்ற ஆலயங்கள் நெஞ்சைத் தொடவில்லை.
என்ன அப்படிப்பட்ட ஒரு காந்த சக்தி நமது தென்னாட்டு ஆலயங்களுக்கு? முதலாவது அதில் மிளிரும் எங்கும் காண இயலாத அற்புத சிற்ப சித்ர கைத்திறன், வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலைத் திறமை சிற்பத்திறன் கோயில்களில் கல்லில் என்றும் அழியாமல் நமக்குப் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. நாம் தான் அடி முட்டாள்களாக சிலைகள் மேல் நமது பெயரை செதுக்குவது,, எழுதுவது, அவற்றை சிதைப்பது மூளியாக்குவது போன்று ஒளரங்க சீப் காரியங்களை செய்கிறோம்.
கோவில்கள் சிலை வடிவத்தில் எண்ணற்ற அறிவுரைகளை, தத்துவங்களை நமக்கு அளிப்பவை. புராண இதிகாச சம்பவங்கள் பாடங்களை எல்லாம் சித்திர சிற்ப வடிவில் கற்றுக் கொடுப்பவை. கெட்டுப்போன மதியோடு, அறிவீன, குதர்க்கக் கண்களோடு அவற்றை தவறாகப் பார்ப்பது, கீழ்த்தரமாக பரிகாசிப்பது, அவமதித்து பேசுவது, ஆபாசம் என்பது எதற்கு சமம் தெரியுமா?. மேலே பறக்கும் கழுகுக்கு கீழே பறந்து விரிந்த புண்ய நதியோ, அழகிய ஆலயமோ கலைத்திறனோ இயற்கை செல்வமோ, வனப்போ கண்ணுக்கு தெரியாது. எங்கோ செத்துப்போன நாய், ஆடு, மாடு எலி பெருச்சாளி ஆகியவற்றின் அழுகிய உடல் தான் கண்ணைக் கவர்ந்து இறங்கி வேகமாக அதை நோக்கி வர செய்யும். இழிவான அழுகிய மனம் படைத்த மனிதர்கள் அப்படிப்பட்டவர்கள்.
நமது சிற்பக்கலை அழகை, நுணுக்கங்களை அனுபவிக்க வெளிநாட்டவர்களுக்கு இருக்கும் ஆவல், ஆர்வம் இன்னும் நம்மவர்களுக்கு ஏன் உருவாக வில்லை? அவர்கள் எத்தனையோ பேர் கேமரா வீடியோ என்று பாய் பாயாக நிறைய படம் பிடித்துக் கொண்டு போகிறார்கள். விவரங்கள் கிடைக்கும் புத்தகங்களைத் தேடி அலைகிறார்கள். பலர் மணிக்கணக்கில் தரையில் அமர்ந்து கோபுரங்களை வெறிச்சிட்டு பார்த்து அதிசயிக்கிறார்கள். ஒவ்வொரு சிற்பம் சிலை அருகிலும் சென்று நுணுக்கங்களை அனுபவிக்கிறார்கள். எழுதிக் கொள்கிறார்கள்.ஹோட்டல்களில் தங்கி மாதக்கணக்கில் கோவில் தரையில் அமர்ந்து ரசிக்கிறார்களே .
கோவிலென்றால் பிரசாதம் சாப்பாடு இலவசமாக பெறும் இடம் என்ற நம்மவர் சிலரின் எண்ணம் முதலில் மாற வேண்டும். கோவில்களின் மண்டபங்கள் கடைகளாகி விட்டன. வியாபாரஸ்தலமாகி விட்டது. இது அகல வேண்டும்.
கோவில்களை பராமரிக்க யாராவது உண்மையிலேயே இருந்தால், பொறுப்பேற்றவர்கள் காணப்பட்டால், முதலில் வரும்படி, வருமானம் தேடும் இடமாக கோவிலை மாற்றி அமைக்கக் கூடாது. காசு பார்க்கும் இடமாக பார்ப்பவர்களை விட பொதுநல விரும்பிகளாக பக்தர்களே போதும் கோவிலைக் கண்காணித்து பராமரித்து கவனித்துக் கொள்வார்கள்.
பழைய கால ராஜாக்கள் கோவில்களை கல்விக்கூடங்களாக, கலைக்கண் காட்சி கூடங்களாக, தார்மீக ஆன்மீகக் கருவூலங்களாக வைத்திருந்தார்கள். நிவந்தங்கள் அளித்து காலம் காலமாக பராமரிப்புக்கு வழி செய்தவர்கள். கோவில்களுக்கு நிலம் மானியமாக விடப்பட்டிருந்தது. இன்னும் அவை இருக்கிறதா? யாருக்கு தெரியும். நிறைய குளங்கள் மாயமாக மறைந்து தனியார் சொந்தத்தில் மாடி வீடுகளாகி விட்டது என்றே ல்லாம் கேள்விப்படுகிறோமே .
தஞ்சாவூர் சிதம்பரம் திருவண்ணாமலை,கும்பகோணம் ராமேஸ்வரம் இன்னும் எத்தனையோ ஊர்களில் உள்ள ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சிறப்பு பெற்றவை. எத்தனையோ லக்ஷம் கோடி மக்களின் மனதில் பக்தியை பரம்பரை பரம்பரையாக உருவாக்கிய ஸ்தலங்கள். அந்த நிம்மதியை எழுத்தில் வடிக்க வார்த்தை கிடைத்தபோது சொல்கிறேன். தெய்வீக ஆன்மீக அலைகள், அதிர்வுகளை உண்டு பண்ணுபவை. அவற்றுக்கு ஈடு எங்கும் காணமுடியாது.