பட்டினத்தார் – நங்கநல்லூர் J K SIVAN
எனக்கு பட்டினத்தாரை ரொம்ப ரொம்ப பிடிப்பதற்கு காரணம் அவருடைய எளிய தமிழும் அதில் புதைந்திருக்கும் அற்புத தத்துவங்களும் தான். பட்டினத்தாரை படித்தவர்கள் தமிழை ரசிக்கத் தெரிந்தவர்கள். அனுபவஸ்தர்கள். ஒருவர் இருவர் அல்ல, எத்தனையோ பேர் வாழ்க்கை நிலையாமை, மறையும் மானுட வாழ்க்கை பற்றி எல்லாம் பேசுகிறார்கள், பாடுகிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் அவற்றில் தனித்வமாகி நிற்பது பட்டினத்தாரின் தமிழும் தத்துவமும்.
இதோ ஒரே ஒரு பாட்டு சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ்சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே.
சதம் என்றால் நூறு என்று மட்டும் அர்த்தம் இல்லை . சாஸ்வதம் என்றும் ஒரு அர்த்தம். இந்த ஊர் என் சொந்த
பிறந்தவூர், நான் வாழ்ந்த வூர், இங்கு தான் படித்தேன், சம்பாதித்தேன், இந்த ஊர் பெண்ணை தான் நான் கல்யாணம் செய்து கொண்டேன், என்று ஊர்களோடு நம்மை பிணைத்துக் கொள்கிறோமே .அது தரும் சந்தோஷமோ, அந்த ஊரோ நிரந்தரம் இல்லை. ஒருநாள் காணாமல் போய்விடும். யாரோ ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி பேரை தாங்கி நிற்கும். ஊரார்களும், உற்றார்களுக்கும் சொந்தமாக நிலைத்திருக்கப் போவதில்லை, மாமா, அத்தை, மச்சான், பெரியப்பா, சித்தப்பா, எவருமே சாஸ்வதமல்ல. கொஞ்ச நாள் உறவு தானப்பா. அதையும் தாண்டி பெத்தப்பனே, அம்மாவே மறைந்து விடுவாள், கட்டினவள் காணாமல் போவாள், பெத்ததுவும் மறந்து போய்விடும். அமேரிக்கா போனால் அவ்வளவு தான் அப்புறம் இந்தியனே இல்லை. எப்படி நம் பிள்ளையாவான். சொத்து சுதந்திரம் எல்லாமே சம்பாதித்து, நல்லபடியாகவோ, கொள்ளையடித்தோ எப்படி இருந்தாலும் அதுவும் கைவிட்டு பறந்து போய்விடும். சொந்த வீடு நிலம் புலன் எல்லாமே சிலகாலம் தான் நம்முடையது. இதுவே பல யுகங்கள் நமக்கு முன் எத்தனையோ பேரிடம் இருந்தது தான் இப்போது பட்டாவில் நமது பேர் கருப்பு வெளுப்பாக ஜொலிக்கிறது. .இந்த பட்டா துப்பட்டா தான். ஒருவன் தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு தாவி விடும். பட்டாவில் கண்ட நம்முடைய பேர் ரிப்பேர் தான். சாஸ்வதமல்ல. இந்த பாரத தேசம் எவ்வளவு காலம் காலமாக இருக்கிறது. இதில் எத்தனை பேர் தோன்றியவர்கள், மறைந்தவர்கள். இனி தோன்றப் போகிறவர்கள். மறையப்போகிறவர்கள். காஞ்சி ஏகாம்பரநாதா, நீ ஒருத்தன் தான் சாஸ்வதன் . நிரந்தரன் . உன் காலைப் பிடித்துக் கொள்கிறேனப்பா என்கிறார் பட்டினத்தார். இப்போது சொல்லுங்கள் பட்டினத்தாரை எனக்கு பிடிப்பது ஞாயம் தானே. உங்களுக்கும் அவரைப் பிடிக்கிறது அல்லவா? அப்படியென்றால் அடிக்கடி அவரை எழுத்தில் சந்திப்போமா?