மாமனும் மருகனும் – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரரின் திருமுருகாற்றுப்படை படித்துவிட்டு எழுதும்போது கந்தன் கண்முன் நிற்கிறான். அளவற்ற பக்தி கொண்ட நக்கீரரின் வர்ணனைகள் அற்புதமாக இருக்கிறது. அடடா இவ்வளவு வருஷங்கள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று தோன்றினாலும் ஒரு சமாதானம் மனதில் எழுகிறது… ஆமாம் படித்தால் மட்டும் என்ன புரியவா போகிறது? நக்கீரர் தமிழ் படிக்கும்போது ஏதோ ப்ரென்ச் french japanese படிப்பது போல் புரியவில்லையே. தேடிப்பிடித்து அர்த்தங்களை புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லும் போது தானே அருமை புரிகிறது. தமிழ் மணக்கிறது.
வீரவேல் சக்திவேல், வெற்றிவேல் என்றால் ஆறுமுகன் மயில்வாகனனாக தெரிகிறான். அவன் வேலாளி . அவன் மாமன் கோதண்ட ராமன் வில்லாளி. மாமன் மருகன் ரெண்டு பேரின் ஆயுதங்களும் அரக்கரை, அவுணரை, ராக்ஷஸர்களை அழித்த ஆயுதங்கள். தீமையைப் போக்குவன . நம்மைக் காப்பவை. ”வேலுண்டு வினையில்லை, வில்லுண்டு பயமில்லை” என்பது அதனால் தான். மருகன் சேயோன், மாமன் மாயோன். எங்கள் கன்னிகா காலனியில் என் வீட்டுக்கு அருகாமையிலேயே ஒரு முருகன் இருக்கிறான். திருமால் மருகன். அற்புதமானவன். அளவற்ற சக்தி கொண்டவன்.
கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
” கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலனென் நிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்தி லேன்யான்
மாலயன் தமக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி யன்றோ ‘*
திருச்செந்தூரில் சூர சம்ஹாரத்தின் பொது சூர பத்மன் ஆறுமுகனின் வீரத்தை மெச்சி என்ன சொல்கிறான் தெரியுமா? அடடா இவனைப் பார்த்து சிறுபயல் என்று நினைத்து ஏமாந்தேன். விளையாட்டுப் பயல் ஒரு மயில் மேல் உட்கார்ந்து என்னிடம் மோதுகிறானே என்று அவனை அற்பமாக நினைத்துவிட்டேன். பாலனல்ல இவன் ஜாலமிக செய்கிறான். அடேயப்பா, எவ்வளவு சர்வ சாதாரணமாக என் படைகளை அழித்து என்னையும் முடிக்க வந்த பரமேஸ்வரன் இவன், என்று அறியாமல் போய்விட்டேன். ப்ரம்மா விஷ்ணு சிவன் மூவரும் ஒன்றானவன் இந்த ஷண்முகன்….அவர்களுக்கு ஆதார மூல காரணன்.” என்று போற்றி முருகனின் வாகனமாகவும் சேவல்கொடியாகவும் ஆகி முருகன் கூடவே இருக்கிறான். முருகனை வணங்கும்போது சேவற்கொடியும் மயிலும் நம்மால் வணங்கப்படுகிறது பக்திக்கு நாம் கொடுக்கும் காணிக்கை இது.
ஷண்முகன் எனும் ஆறுமுகனின் ஆறு முகங்கள் எப்படிப்பட்டவை?ஒன்று மயில் மேல் ஏறி விளையாடும் முகம், இன்னொன்று ஈசனுக்கு ஞானம் புகட்டிய ஞானமொழி , ப்ரணவஸ்வரூபம். அடியார்கள் குறை எங்கிருந்து கேட்டாலும் உடனே தீர்க்கின்ற ஒரு முகம். வழி மறித்த மலையை ரெண்டாக பிளந்த வேலாயுதன் முகம் ஒன்று. உருமாறி தாக்கும் மாயாஜால சூரர்களை வாட்டி வதைத்த முகம் ஒன்று. எவ்வளவு கோபம் இருந்தாலும் வள்ளியைக் கண்ட நேரம் குளிர்ந்த நிலவாகும் முகம் ஒன்று. அடேயப்பா ஆறுமுகம் நாம் அஞ்சும் முகத்தை பார்த்து ஆறுதல் சொல்ல வரும் முகம் ஆயிற்றே., இதோ அற்புதமான அந்த பாடல்.
‘ஏறுமயி லேறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குழுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மான்பொருள் நீஅருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம்அ மர்ந்தபெரு மாளே ””
மாமனைப் போலவே மருமகனும் பக்ஷிவாகனன். மாலனுக்கு கருடன் போல வேலனுக்கு மயில். மாமன் ஸ்ரீ தேவி பூதேவி சமேதன். மருகன் வள்ளி தேவானை சமேதன். மாமன் மருகன் இருவருக்கும் சர்ப்பம் பிடிக்கும். மாமன் நாகசயனன் ஆதிசேஷன் மேல் படுக்கை. சுப்ரமணியன் என்றாலே நாகம். அங்கே பாற்கடல். இங்கே குன்று தோறும் வாசம். அங்கே ஆபரணதாரி, இங்கே கோவணாண்டி. பக்தர்களை காத்தருள்வதில் ரெண்டு பேருக்கும் ஈடு இணை இல்லை.