– கிருஷ்ணனின் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பாரதம் என்பது ஒரு உணர்ச்சிக் கடல். எத்தனையோ கஷ்டங்கள், துயரங்கள், வீரம், பலம், கொடுமை, சுயநலம், தான தர்மம், நேர்மை பராக்ரமம், சாபம்,அநீதி, கோபம் துரோகம் போன்ற பல வடிகால்கள். அவற்றில் பாண்டவர்கள் துயரத்தை அனுபவித்தது தான் அதிக பக்ஷமாக காணப்படுகிறது. அவர்களது தெய்வ பக்தி, கிருஷ்ணனின் அருள் நம்மை பிரமிக்க வைக்கிறது. அதை அதிர்ஷ்டம் என்று சொல்வதா, இல்லை, தெய்வச்செயல் என்று புரிந்து கொள்வதா? சிலர் கூடி நின்று பேசுவது அந்த பக்கமாக வந்த அர்ஜுனன் காதில் விழுந்தது. பாண்டவர்கள் வசித்த இந்த மாளிகையில் நாளை துரியோதனனின் ஆட்கள் தீ வைக்கப் போகிறார்கள். அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு.
விரைவில் இந்த சேதியை மற்ற பாண்டவர்களுக்கும் அர்ஜுனன் அறிவிக்க உடனே அவர்கள் செயல் பட்டனர். நேரம் நழுவுகிறதே. ஒரே நாளில், ஒரே இரவில் இங்கிருந்து எப்படி உயிரோடு தப்புவது?. உடனே வெளியே செல்ல ஏதாவது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கு பீமன் பொறுப் பேற்றான். நம்பகமான சிலர் உதவியை நாடி மாளிகை யிலிருந்து வெளியே ஆற்றங் கரை வரை சுரங்க பாதை வெகு விரைவாக சில மணி நேரங்களில் அமைத்தாக வேண்டும். ஒரே நாளில்! அதை துரியோதனனின் ஒற்றர்களுக்கு தெரியாமல் வேறு செய்ய வேண்டும். வேலையை ஆரம்பித்தனர் பாண்டவர்கள். சோர்ந்து விட்டனர். பீமன் மனம் கண்ணனை வேண்டியது. “கண்ணா, நீயே எனக்கு உதவ வேண்டும்” என்று வேண்டி சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான் பீமன். அன்ன ஆகாரமின்றி செயல் பட்டான். குந்தி “இந்தா, எதாவது கொஞ்சம் ஆகாரம் சாப்பிடு” என்று வற்புறுத்தியும் “எனக்கு நேரமில்லை. விரைவில் இது முடிந்தாக வேண்டும்” என்று சுரங்கப் பாதை அமைப்பதில் துடியாக இருந்தான் பீமன்.
“கிருஷ்ணா நீ ஏன் ஏதோ யோசனையில் இருக்கிறாய்?. இலையில் வைத்த உணவு தொடப்பட வில்லையே” என்றாள் ருக்மணி த்வாரகையில்.
“என் நண்பன் பீமன் என்னை நினைத்து ஆகாரமின்றி செயல் படுகிறான். அவன் வெற்றிகரமாக வேலையை முடிக்கும் வரை எனக்கும் ஆகாரம் இல்லை” என்றான் கிருஷ்ணன் .
மறுநாள் துரியோதனனின் ஆட்கள் திட்டமிட்டபடியே அந்த புதிய அரக்கு மாளிகை தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது. அதற்குள் ஆறு உருத் தெரியாத கருகிய உடல்கள் கிடந்ததை அறிந்து துரியோதனன் மகிழ்ந்தான்.
அந்த நேரத்தில் ஆற்றின் மறு கரையில் பாண்டவர்களும் குந்தியும் ஏதோ ஒரு கிராமத்தில் கிருஷ்ணனை நன்றியுடன் நினைத்து கொண்டு உணவைத் தொட்டனர்.
“பீமா, உன் பலத்தாலும் அசுர வேகத்தாலும் தான் ஒரே நாளில் இரவில் நாம் அனைவரும் உயிர் தப்பினோம். இதை எப்படிச் சொல்வது” என்றாள் குந்தி.
“தாயே, அந்த சக்தி என்னுடையது இல்லை, கிருஷ்ணனிடம் இருந்து வந்ததால் அவனுக்கே நமது நன்றி உரித்தாகும்” என்றான் பீமன்