நான் தனியனல்ல – நங்கநல்லூர் J K SIVAN
அதுக்கு எல்லாம் தெரியும், தெரியாததே இல்லை என்று பெயர் பெற்ற சிலர். அதுக்கு ஒரு மண்ணும் தெரியாது. மண்டூகம் என்றவகையில் பலர். ஐயோ அதுவா? அதுக்கு தனக்காகவும் தெரியாது சொன்னாலும் கேட்காது என்ற வகையில் அநேகர். நான் அந்த மூன்றாம் வகையினன். நான் சொல்வதெல்லாம் மொத்தத்தில் ஒரு மனிதன் சொல்லி மற்றொரு மனிதன் கேட்பது பற்றியோ அல்லது கேளாதது பற்றியோ. ஆனால் தெய்வமே வந்து தன்னை காட்டி புரியவைத்தாலும்புரிந்துகொள்ளாமல் தவறை தப்பில்லாமல் செய்து தண்டனை பெற்ற ஒரு அபூர்வ பிறவி தான் துரியோதனன். உங்களுக்கு இது விஷயமாக ஒரு கதை சொன்னால் பிடிக்குமே.
ஹஸ்தினாபுரம் அரண்மனையில் கார சாரமான விவாதங்கள் ராவும் பகலுமாக நடக்கிறது. பாண்டவர்களுக்காக அவர்கள் உரிமையை கேட்க கிருஷ்ணன் இங்கே சமாதான தூதுனாக வரப்போகிறான். திருதராஷ்டிரன் விதுரர், பீஷ்மர் ஆகியோர் பேசப்போகிறான். அவன் ரொம்ப சாமர்த்தியக்காரன். வாக் சாதுர்யம் கொண்டவன். அவனை எப்படி சமாளிப்பது?
“இந்த கிருஷ்ணனால் தான் பெரிய இடைஞ்சல். எதாவது, என்னவாவது செய்து நம்மிடையே ஒற்றுமையை குலைத்து விடுகிறான். அவன் மட்டுமில்லாமல் இருந்தால் இந்த பாண்டவர்களை பஞ்சாக பிய்த்து ஊதிவிடலாம். மாமா, நீங்கள் ஒரு வழி சொல்லுங்களேன்” என்று கேட்டான் துரியோதனன் சகுனியிடம்.
சகுனி மாமா ஒன்றும் தோன்றாமல் விழிக்க துச்சாதனன் ஒரு ஐடியா சொன்னான். பேசாமல் அந்த கிருஷ்ணன் இங்கு வந்தவுடன் அவன் எதிர்பாராதவிதமாக அவனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்தோ அல்லது தீர்த்துக்கட்டி விட்டாலோ தொந்தரவு இருக்காதே” – இப்படி ஐடியா கொடுத்தவன் துச்சாதனன்.
துரியோதனனுக்கு தம்பியின் யோசனை, புத்தி கூர்மை பிடித்தது. கிருஷ்ணனை எப்படியாவது மடக்கி வரவழைத்து அவ்வாறே செய்யலாம் என்ற எண்ணமும் வந்துவிட்டது. இந்த விஷயம் வெளியே எப்படியோ கசிந்து கிருஷ்ணனின் நண்பனும் உறவினனுமான சாத்யகியின் காதுக்கு எட்ட அவன் கிருஷ்ணனிடம் சொன்னான்.
”கிருஷ்ணா, எனக்கு உன்னைப்பற்றி தான் கவலையாக இருக்கிறது. உன் உயிருக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது.கொடியவர்கள் ஏதேதோ திட்டமிடுரிகிறார்கள். நீ எப்படி தனி ஒருவனாக உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்? போகாமல் இருந்துவிடு’ என்றான் சாத்யகி .
கிருஷ்ணன் வாய் கொள்ளாமல் சிரிப்பதை கண்டு ஆச்சர்யம் கொண்டான் சாத்யகி. “கிருஷ்ணா, உன்னை பிடித்து சிறையிலடைத்தோ கொல்லவோ சதி நடக்கிறது என்கிறேன் சிரிக்கிறாயே”
“நான் துரியோதனாதிகளை நாளை சந்திக்க ஏற்பாடு இதற்குத்தானா என்று நினைத்தேன் சிரிப்பு வந்தது” என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் சென்று துரியோதனனனையும் திருதராஷ்ட்ரன் மற்றும் அவன் பிள்ளைகள் அனைவரையும் சந்தித்தான். பேச்சு சூடி பிடித்து நிறைய போர் வீரர்கள் தன்னைச் சூழ்ந்து நிற்பது கண்டு கிருஷ்ணன் துரியோதனனை கேட்டான். “துரியோதனா என்னை பிடித்து சிறையலடைக்கவோ கொல்லவோ திட்டமிட்டு தான் என்னை வரவழைத்தாயாம். நான்
உன்னிடம் சொல்வதெல்லாம் இதுதான். நான் தனியானவன் அல்ல நானும் நீங்கள் அனைவரும் ஏன் பாண்டவர்களும் அனைத்துலக ஜீவராசிகளும் கூட வேறல்ல என்று உனக்கு தெரியவேண்டாமா”. பாவம் வீண் மனக்கோட்டை கட்டி விட்டாய். என்னில் காணும் இவர்களைப் பார் பிறகு யோசி. கட்ட தேவையான கயிறு, சங்கிலிகள் உன்னிடம் இருக்கிறதா என்று. என்னைக் கொல்வதானால் எல்லாவற்றையும், எல்லோரையும், உன்னையும் சேர்த்து தான் கொல்வதாகிவிடுமே கொஞ்சம் யோசி” என்று கிருஷ்ணன் சிரித்தான்.
கண்ணன் சிரித்த கணமே எண்ணற்ற வ்ரிஷ்ணிகள், பாண்டவர்கள், கோடி கோடி இந்த்ராதி தேவர்கள், அசுரர்கள், ஏன் கௌரவாதி அரசர்கள், மக்கள், ரிஷிகள்,மலைகள், நதிகள், மின்னல் இடி காற்று என்று அண்ட பகிரண்ட மெல்லாம் கிருஷ்ணனிடமிருந்து தோன்றியதை அவன் முன் நின்று கொண்டிருந்த துரியோதனன் கண்ணால் கண்டான். மிரண்டான் ஐயோ போதும் போதும் என்று கதறினான். சிலையானான். திருதராஷ்டிரனுக்கும் கிருஷ்ணனின் விஸ்வரூப தர்சனம் கிடைத்து. கண்ணன் காலடியில் விழுந்து வணங்கினான். கிருஷ்ணன் மீண்டும் மானிட உருவில் அவர்கள் முன் அமர்ந்தான்.
இதனால் திருந்துபவனாக இருந்தால் அப்புறம் அவன் துரியோதனன் இல்லையே. நாய் வால் நிமிர்த்த முடியாதது என்பதற்கு உதாரணமாக மீண்டும் தானாகவே துரியோதனன் இருந்தான் அழிந்தான் என்பது தான் மஹாபாரதத்தில் படிக்கிறோமே . உங்களுக்கே தெரியுமே