என்னவோ தோன்றியது எழுதிவிட்டேன் — – நங்கநல்லூர் J K SIVAN
எல்லாமே சுத்தமாக மாறிவிட்டது. ஏன்? எதனால்? ஒரே பதில் காலத்தின் கட்டாயம். ஒன்றாக வாழ்ந்த குடும்பங்கள் பெரிதாக ஒற்றுமையாக இருந்த காலம் போய் விட்டது. அப்போதெல்லாம் . பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. தாத்தாக்கள் பாட்டிகள் ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள். அவர்கள் சொல் எடுபட்டது. பாரம்பர்யம் தொடர்ந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. ஜாதி வித்யாசங்கள் அதிகமாகிவிட்டது. ப்ராமண குடும்பங்கள் சிதறி விட்டன. குழந்தைகள் வளர்ந்து படிப்பதே, வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க. அங்கேயே சாஸ்வதமாக தங்கிவிட.. வம்சம் அழிந்து போனால் கவலையில்லை என்ற நோக்கம் உருவாகி விட்டது. ப்ராமண சமுதாயம் அளவில் உருவில் சம்பிரதாயத்தில் மாறிக்கொண்டே வருகிறது என்று சொல்வதா அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்வதா? தனித்தனியாக வளர்ந்து, படித்து, சிந்தித்து பழைய நம்பிக்கைகள் தவிடுபொடியாகி பணம் பிரதானமாகி குடும்பத்தில் ஒருவரோடு ஒருவர் பரஸ்பர ஒற்றுமை என்பதே காணாமல் போய்விட்டது. வெளி நாடு சென்று இப்படிப்பட்ட ஹிந்து குடும்பங்கள் கலாச்சாரம் இழந்தது. மதம் மாறியது. பக்தி பாரம்பரிய பண்பாடு சிதைந்து விட்டது. நம்பிக்கைகள்பறிபோய்விட்டது. பணம், அது தரும் சுகம் மோஸ்தர் ஒன்றே முக்யமாகி விட்டது. தாய்நாட்டில் வாழும் குடும்பங்கள் உறவுகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மறக்கப்பட்டன. வாட்சாப், வீடியோ, யூட்யூப் கொஞ்சத்துக்கு கொஞ்சம் உறவுகளை இணைக்கிறது என நம்புகிறேன். நேரில் பார்க்கமுடியாத குறையை தீர்க்கிறது என்ற விஷயத்தில் சந்தோஷம்.
பாரத தேசத்தில் இன்னும் கொஞ்சம் பக்தி உணர்வு, ஆன்மீக சிந்தனைகள், சாஸ்த்ர சம்பிரதாயமும் கூட நிலைத்திருக்க காரணம், அநேக ஹிந்துக்கள் இன்னும் பழசை மறக்க வில்லை. நம்பிக்கை முழுதும் அழியவில்லை. . ஸ்வாமி விவேகானந்தர் புயல் போல் சுற்றி 1893ல் உலக ஆன்மீக மாநாட்டில் ஹிந்து சனாதன தர்மத்தை பறைசாற்றி மேற்கத்திய நாட்டு மக்கள் அதில் ஆர்வம் காட்டினர். சுவாமி ராம தீர்த்தர் 1902ல் சென்றார். ரெண்டு வருஷங்கள் வேதாந்தத்தை விளக்கி சென்ற இடமெல்லாம் சொன்னார்.
1920ல் பரமஹம்ச யோகானந்தர் மேல்நாட்டில் சுற்றுப்பியாணம் செய்து ஆன்மீகத்தை பரப்பினார்.சுவாமி பிரபுபாதா அமேரிக்கா சென்று காட்டுத்தீயாக ISKCON இஸ்கான் கிருஷ்ண பக்தி எண்ணற்ற வெளி நாட்டினரை ஹிந்து சமயத்தை ஆர்வத்துடன் நாட செய்தது. இன்னும் சக்தியோடு பலத்தோடு உலகெங்கும் செயல்பட்டு வருகிறது. அச்சு இயந்திரம் பழக்கத்தில் வந்து இந்து சமய நூல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இன்னபிற மேலை நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு ஹிந்து கலாச்சாரம் மேலை நாடுகளில் அறியப்பட்டது. ஹிந்துக்களைப் போலவே மற்ற மதத்தினரும் மேலை நாட்டில் தத்தம் நம்பிக்கைகளை, பக்தியை ஊன்றினார்கள். டேப் வீடியோக்கள் பழசை நினைவூட்ட புதுப்பிக்க பெரிதும் உதவியதில் விஞ்ஞானமே உனக்கு என் மனமார்ந்த நன்றி. மேலைநாடுகளில் குடியேறியவர்களில் பாதிக்கு மேல் ஹிந்துக்கள் என்று சொல்லும்படியாக பெருகிவிட்டார்கள் என்பதால் இங்கே நாம் இழக்கும் ஆன்மிகம் அங்கே வளர்கிறது. இங்கே அழிந்தது அங்கே துளிர்க்கிறது என்பதில் சந்தோஷம் தான். இங்கே கோவில்கள் சீரழியும் நேரம் அங்கே அற்புதமான கலைச்சிற்பங்களோடு புனர்ஜன்மம் பெற்று பெருவாரியாக மதிக்கப்பட்டு ஆன்மீகத்தை நிலைநாட்டி மனதுக்கு நிம்மதி தருகிறது. 1957ல் கலிபோர்னியாவில் சிவ முருகன் ஆலயம், 1972ல் நியூயார்க்கில் மஹா வல்லப கணபதி தேவஸ்தானம், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரத்தில், ராதா மாதவ சுவாமி ஆலயம். 1981ல் மாலிபுவில் வெங்கடரமண சுவாமி ஆலயம். சிகரம் வைத்தது போல் பிட்ஸ்பர்க் நகரத்தில் வெங்கடேஸ்வரன் ஆலயம். ஸ்வாமிநாராயணன் ஆலயங்கள், 2011ல் வட கரோலினாவில் சோமேஸ்வரர் ஆலயம். அமெரிக்கர்கள் வேதங்கள், ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் சொல்வதில் என்ன ஆச்சர்யம் பக்திக்கு மொழியோ நிறமோ முக்கியமில்லை. மனம் ஒன்றே போதும். . நாம் இங்கே எல்லாவற்றதையும் மறப்பதிலும் என்ன ஆச்சர்யம்? அங்குள்ள ஹிந்துக்கள் கல்யாணம், உபநயனம், சீமந்தம், வளைகாப்பு, மார்கழி எல்லாம் கொண்டாடுகிறார்கள். இங்கே பூணலை ஆணியில் மாட்டிவிட்டு என்றோ ஒருநாள் போட்டுக்கொள்கிறோம். மங்கள் சூத்திரம் எனப்படும் தாலியை பேங்க் லாக்கரில் வைத்து விட்டு என்றாவது கல்யாணம் எதற்காவது போகும் அன்று எடுத்து மாட்டிக்கொள்ளும் பெண்கள் இங்கே அதிகரித்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. சந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் காகிதத்தோடு நின்றுவிட்டது. அதிக பக்ஷம் டேப் யூட்யூபில் கேட்பதோடு சரி.
சுற்று சூழ்நிலை தான் ஒருவன் குணத்தை மாற்றுகிறது. இனியாவது பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தா விட்டால் நாம் அழிவதோடல்லாமல் நமக்கு முன்பே நமது கலாச்சாரம் பண்பாடு மறையும் குற்றங்கள் பெருகும். இதைத்தான் பழையன கழிதல் புதியன புகுதல் என்று புரிந்து கொள்கிறோமோ?…. old order changeth yielding place to new …. இது தானா?