சனிக்கிழமை வினோத விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
வேங்கடேசா, இன்று சனிக்கிழமை.
நைமிசாரண்யத்தில் ரிஷிகள் ஒரு பெரிய யாகம் வளர்த்த போது நாரதர் யார் பிரதான தெய்வம் இந்த யாகத்தில் ஹவிர் பாகம் பெற? என்று கேட்க, த்ரிமூர்த்திகளில் யார் பொருத்தமானவர் என்று அறிந்துவர ப்ருகு முனிவர் கைலாசம், பிரம்மலோகம், வைகுண்டம் எல்லாம் போய், விஷ்ணுவை மார்பில் உதைக்க, மஹா லக்ஷ்மி கோபம் கொண்டு பூமிக்குச் செல்ல, அவளைத் தேடி நாராயணன் வேங்கடேசனாக திருப்பதி வர, வகுளமாலிகா மூலம் ஆகாச ராஜன் மகள் பத்மாவதியுடன் கல்யாணம் நடக்க, அவள் கல்யாணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் இன்னும் அசலும் வட்டியும் செலுத்தமுடியாமல் கலியுகத்தில் வரதனாக ஸ்ரீனிவாசன் ஏழுமலையில் பக்தர்களிடமிருந்து கோடானு கோடி ரூபாய் அன்றாடம் காணிக்கை பெற்று அவர்களை அனுக்ரஹித்து சிலையாக நிற்கிறான்.
ஸ்ரீனிவாசனுக்கு திருப்பதி திருமலை எனும் வராஹ க்ஷேத்ரத்தில் இருக்க இடம் கொடுத்தது ஸ்ரீ வராஹமூர்த்தி. திருப்பதியில் அவர் சந்நிதி, கோயில் தனியாக இருக்கிறது.அங்கே போய் புஷ்கரணியில் ஸ்னானம் பண்ணிவிட்டு வரஹாஸ்வாமி தரிசனம் பெற்ற பின் தான் வெங்கடேசனை தரிசிக்க வேண்டும். முதல் நைவேத்தியம் வராஹமூர்த்திக்கு தான்.
கிருஷ்ணனை வளர்த்து மகிழ்ந்த பிருந்தாவன, தாய் யசோதைக்கு அவனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கும் பாக்யம் இல்லையே என்ற ஏக்கத்தை நிவர்த்தி செய்ய அவள் பூமியில் வகுளா தேவியாக பிறக்க அவள் மகனாக ஸ்ரீனிவாசன் அவளையே ஆகாச ராஜன் வீட்டுக்கு பத்மாவதி கல்யாணம் நிச்சயம் பண்ண அனுப்பினான். கிருஷ்ணன் சொன்ன சொல் தவறாதவன்.
மஹா லக்ஷ்மி வேதவதியாக காட்டில் தவம் செய்தபோது ராவணன் அவளை அபகரிக்க முயற்சிக்க அவளால் சாபம் பெறுகிறான். அவளே சீதையாக அவதரித்தபோது ராவணன் அவளை அபகரிக்க, அவள் மாய சீதையாக ராவணனால் லங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். பின்னர் அவளே ராமர் கிருபையால் திரௌபதியாக பிறக்கிறாள்.
அவளே ஆகாச ராஜன் மகளாக தாமரையில் தோன்றி, (பத்மம்= தாமரை). பத்மாவதியாக ஸ்ரீனிவாசனை மணக்கிறாள். புராணங்கள் எப்போதுமே நிறைய விஷயங்களை சுற்றி சுற்றி பெரிய கதைகளாக சொல்வதால் தான் புராணங்களை நாம் விரும்பி படிக்கிறோம். அது சுவாரஸ்யமாக விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு மட்டுமே. அவைகள் கட்டுக்கதை அல்ல. ஒரே விஷயம் பல புராணங்களில் சற்று வேறுபடுவது காலத்தின் கோலமே தவிர பொய் அல்ல. ஒரு விஷயத்தை பலர் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லும்போது சொல்வதில் உண்மை சற்று உருவம் மாறாதா? நேற்று நடந்ததையே இன்று யூட்யூப், செயதிகள், டிவி எல்லாம் மாற்றி மாற்றி சொல்கிறதே!
அது சரி, மஹாவிஷ்ணுவின் தேவி ஸ்ரீ மஹா லட்சுமி வேதவதியானாள் , சீதையானாள் , அலர்மேல் பத்மாவதி ஆனாள் என்றெல்லாம் படித்தோம், தெரிந்து கொண்டோமே, அவள் பீபி நாச்சியார் ஆன கதை தெரியுமா?
ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல் பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம் உடையில் லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க
நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் நடந்து வருகிறது. துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை பெறுகிறார்.
இது மாதிரியே கர்நாடகாவில், மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் செல்லப் பிள்ளைப் பெருமாள் மேல் அளவற்ற காதல் கொண்ட இஸ்லாமிய பக்தையான பீபி நாச்சியார் எனப்படும் துலுக்க நாச்சியார் பெருமாளோடு இரண்டறக் கலந்ததாகவும் சரித்திரம். சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் தீர்த்தவாரி கொண்டாடப்படும் இரண்டு தினங்களில் முஸ்லீம்கள் திருப்பாவை பாடி பரவசத்துடன் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியும் வைணவத்தில் சமய வேறுபாடின்மையும் பரம்பொருள் ஒருவனே என்பதையும், சரணாகதியே ஆத்மவிமோசனம் என்பதையும் காட்டவில்லையா?.
மேலக்கோட்டையில் தங்கியிருந்த போது ராமானுஜர் கனவில் வந்த பெருமாள், தமது உற்சவர் சிலை இசுலாமிய அரசனால் கொள்ளையடிக்கப்பட்டு, தில்லியில் இருப்பதாகத் தெரிவித்தார். அதனை மீட்க ராமானுசஜர் தில்லி சென்று, இளவரசியின் அரண்மனையிலிருந்த விக்ரகத்தினை மீட்டுக் கொண்டுவந்தார். செல்வ நாராயணரை பிரிந்திருக்க இயலாமல் மொகலாய இளவரசியும் ராமானுஜரைப் பின் தொடர்ந்தார். முஸ்லீம் பெண் என்பதால் கோவிலினுள் அனுமதி மறுத்தவர்கள், ராமானுஜரின் வேண்டுகோளை ஏற்று அனுமதித்தனர். கோவிலுள் நுழைந்த பீபி நாச்சியார் செல்வா பெருமாளோடு கலந்துவிட்டார்.
நமக்கு ஏற்கனவே ஸ்ரீ ரங்கம் பெருமாளை விரும்பி காதலால் அவரோடே இணைந்துவிட்ட ஆண்டாள் கதை தெரியும். இதோ மார்கழி வந்தால் முப்பதுனாலும் தினமும் ஆண்டாள் கதை எழுதும் வழக்கம் உண்டே.
ஸ்ரீ ரங்கம் அரங்கனுக்கு காலையில், அவர்கள் உணவாக ரொட்டி-வெண்ணெய் அமுது செய்யப்படுகிறது!அதேபோல், இரவிலும் அரங்கனுக்கு அரவணையும், கீரையும் அமுது செய்யப்படுகிறது! மேலும் நம்பெருமாள் திருமஞ்சன காலங்களிலும் வஸ்திரத்துக்குப்பதில், லுங்கி சாற்றுகிறார்கள். எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத, இங்கு மட்டும் அரங்கனுக்கு வெந்நீரில் திருமஞ்சனம்! இடையில் 4-5 தடவை லுங்கி மாற்றி வேறு லுங்கி சாற்றுவார்கள். பிறகு அதைப் பிழிந்து சாதிக்கும் அந்த தீர்த்தம் *ஈரவாடை தீர்த்தம்* என்ற விசேஷமானதாகும். மார்கழி மாதம், பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும், துலுக்க நாச்சியார் சந்நிதியின் வழியாக நம்பெருமாள் துலுக்க நாச்சியார் படியேற்ற சேவையுடன் அர்ஜுன மண்டபம் செல்வார்