PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J.K. SIVAN

சமுத்திரம் நல்ல  உதாரணம் 

மூன்று நாள் முன்பு, வழக்கமாக சந்திக்கும் மார்கபந்து  பை நிறைய பழங்களும்  புஷ்பங்களும், வாய் நிறைய பற்களுமாக சந்தோஷமாக  வாசலில் வந்து நின்றார். வணங்கினார்.”’வாங்கோ  மார்கபந்து, இன்னிக்கு என்ன ரொம்ப ஆனந்த மயமாக இருக்கிறீர்கள்?””சிவன் சார், எனக்கு பேரன் பிறந்து  இருக்கான். அனுஷம். அதனாலே சந்திரசேகரன் என்று பேர் வைக்கப் போறேன். எனக்கு பெரியவா மேலே இருக்கிற பக்தியும் மரியாதையும் அவா அனுகிரஹத்தாலே என் சந்ததி வளர என் பிரார்த்தனை இது”
”ஆஹா இது ரொம்பவே சந்தோஷமான விஷயம் தான். ”
”சார், இன்னிக்கு உங்களோடு உக்காந்து கொஞ்ச நேரம் பெரியவா பத்தி பேசணும்னு தான் வந்தேன். ராத்திரி வண்டி ஏறி மாயவரம் போகணும். ஊரிலே தான் பேராண்டி இருக்கான்”
”பெரியவா பத்தி எவ்வளவு வேணுமானாலும் பேசலாம் சார். நூறு வயசு வாழ்ந்த மஹான். ஒவ்வொரு வினாடியும் எத்தனையோ பேருக்கு மகிழ்ச்சி கொடுத்த தெய்வம்.அவர் ஒரு பரமாச்சாரியார். நமக்கு கிடைத்த பாக்யம்  இந்த  தமிழ் நாட்டில்  பிறந்தார்.  நான் ராத்ரி  படிச்ச பெரியவா விஷயத்தை சொல்றேன் கேளுங்கோ. என்னமா அறிவு பூர்வமாக  பேசறார் கேளுங்கோ, படியுங்கோ:
”சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாக கொப்புளம் கொப்புளமாக தோன்றுகின்றன. இன்னொரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன.    பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்ற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ்கள் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியனுடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம் மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத் தோடு ஜக்யமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம். நமக்கு வழிகாட்டி ஆச்சார்யர்கள். மஹா பெரியவா ஒரு சிறந்த குரு.ஆசார்ய புருஷன்.
சமுத்திர ஜலம் எப்போதும் அளவு குறையாமலேதான் இருக்கிறது. அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று மழையாகி, உலகத்தில் பலவிதங்களில் நதி, ஒடை வாய்க்கால், ஏரி, குளம், கிணறு என்று ஜலாசயங்களாக உரு மாறி தோன்றுகிறது. சமுத்திரம் வற்றுவதில்லை. அதில் புதிதாக வெள்ளம் வருவதுமில்லை. அதிலிருந்து வந்த ஆறு குளங்கள் வற்றலாம். அல்லது இவற்றில் வெள்ளம் வரலாம். வெயில் நாள்களில் வீட்டுக் குழாய் களில் ஜலம் இல்லை. ரெட்ஹில்சில், செம்பரம்பாக்கத்தில்,  ஜலம் இல்லை என்கிறோம்.  வெயில் காலம் சுள்ளுன்னு மார்ச் மாசம் காலை வேளையிலேயே அனல் பறக்கும் வழக்கம். தண்ணிக்கு என்ன செய்வது என்ற கவலை.
மழைக்காலத்தில் கோதாவரியில் வெள்ளம், காவேரியில் உடைப்பு என்று பேசுகிறோம். ஆனால் உலக சிருஷ்டி காலத்தில் இந்த உலகத்தில் எத்தனை ஜலம் இருந்ததோ அதில் ஒர் இம்மிகூட – grain கூட – இன்றுவரை குறைய வில்லை. கூடவும் இல்லை. பணக்காரர்கள் சிலர் நிலத்தை விற்று வீடு வாங்குவார்கள். வீடுகளை விற்று பாங்கில் போடுவார்கள். பாங்கில் உள்ள  பணத்தை ஷேர்களாக மாற்றுவார்கள். மொத்தச் சொத்து மாறாது. அவற்றின் ரூபம் தான் பல விதங்களில் மாறும். எல்லாவற்றையும் கூட்டினால் கணக்கு சரியாக இருக்கும். அப்படியேதான் லோகத்தில் உள்ள மொத்த ஜலம் சமுத்திரத்தில் இருக்க வேண்டும். இல்லா விட்டால் மேகத்தில் இருக்க வேண்டும். அல்லது நதியாக, ஏரி, குளங்களாக இருக்க வேண்டும். யோசித்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.

சமுத்திர ஜலம் போல  தான் பரமாத்மாவும் பல ரூபங்களாக   தோன்றுகிறார்.  தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாகிறதாக மனதில்   தோன்று கிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால், எங்குமே கூடுதலும் இல்லை. குறைவும் இல்லை. இது பெரியவா சித்தாந்தம்.

ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம ஜீவாத்ம ஸம்பந்தத்தைச் சொல்லும்போது நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும். சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், அதிலிருந்து குளமும், குட்டையும், கிணறும் உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை. ஆனால், எல்லா நதிகளும் சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன. வடக்கே ஒரு நதிக்கு ஸோன் என்று பெயர். சோணம் என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஒடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ண’  என்றால் கருப்பு.   இந்த நதி கருப்பு மண் மீது ஒடுகிறது. கங்கை என்றால் வெளுப்பு. இதுவும் அது ஒடுகிற பிரதேசத்தைப் பொருத்து அமைந்த பெயர்தான். மூன்றும் ஒரே கடலில்தான் கலக் கின்றன. சிகப்பு ரஜோ குணம், கருப்பு தமோ குணம். வெள்ளை ஸத்வ குணம்.
மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி  மனிதனின்,  அதாவது, ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான்  எல்லாமே கலந்தாக வேண்டும்.

water finds its level என்கிறோமே. தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்க முயலும் என்பார்கள். மலை உச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கன வேகமாக,  பெரிய இரைச்சலோடு நதியாக  பாய்கிறது.  உயரத்திலிருந்து கீழே விழும்போது அதன் பெயர் நீர் வீழ்ச்சி.   ஹோ வென்று சப்தமி டுகிறது. பார்க்கவே ஒரே மலைப்பாக இருக்கிறது.   நீர் கீழே விழுந்து பூமியில் ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமே இல்லை. அப்போதுதான் நதி தன் லெவலுக்கு வருகிறது. அதாவது லெவலுக்கு வந்தவுடன் பரம சாந்தமாகிறது.

எதிலுமே சரி, லெவல் – அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால்தான் சாந்தம் உண்டாகும். நம்முடைய   லெவலுக்கு மீறிச் செய்கிற தாட்பூட் காரியங்கள் பிறருக்குப் பிரமிப் பூட்டலாம். ஆனால் இதனால் நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வது தான் பலன். உருட்டல், புருட்டல், மிரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர் கொண்டு சென்று பின்வாங்கிச் செல்கிறது. இதனால்தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே உப்புக் கரிக்கிறது.

நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரமும் நம்மை எதிர் கொண்டு அழைத்துப் போய் தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *