ஏதோ ஒரு பழைய ஞாபகம். – நங்கநல்லூர் J K சிவன்
அப்போது என் வயது 11ஐ தாண்டவில்லை.1949-50களில் நாடு சுதந்திரம் பெற்ற சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த போது அது பற்றி ஒன்றுமே தெரியாத சிறுவர்கள் நாங்கள். எங்கள் சந்தோஷம் வேறு தினுசு.
என் பள்ளிக்கூட நாட்களில் சில வஸ்துக்கள் என்னை கவர்ந்தவை. அவற்றில் ன்று கேம்லின் CAMLIN ஜாமின்ட்ரி போஸ். GEOMETRY போஸ். தகர டப்பா என்றாலும் தங்கத்தை விட உயர்ந்ததாக கருதின காலம். விலை குறைவான ZENITH என்கிற ஜாமின்ரி பாக்ஸ் என் அண்ணா ஜம்பு உபயோகப் படுத்தியது தான் எனக்கு வாய்த்தது. காம்பஸ் எனும் பென்சில் செருகி வட்டம் போடும் கருவி வளைந்து இருக்கும். ஸ்கேல் தகரம். வளைந்திருக்கும். நேர்கோடு போட்டால் வளைந்த கோடு கொடுக்கும்.
இன்னொரு அட்ராக்ஷன் ATTRACTION நுங்கம்பாக்கம் ஏரிக்கரை, கார்பொரேஷன் ஸ்கூல் வாசலில் புங்க மரத்தடியில் நிற்கும் நாலு சக்கர வண்டி. அதில் பொன்னையன் பல கலர் பாட்டில்கள் செருகி வைத்திருப்பான். வண்டியின் வயிற்றிற்கு அடியில் ஒரு பெரிய கட்டி ஐஸ் , மரச்சக்கை, மரத்தூள் போர்த்தி, ஈர சாக்கு கோணியில் சுற்றி வைத்திருப்பான். அதன் தலையில் ஐஸ் உடைக்க, பிளக்க, ஒரு இரும்பு கம்பி. வண்டியில் ஒரு சிப்ஸ் பண்ணும் மெஷின் மாதிரி ஒரு மரத்தில் ஆன கருவி. ஐஸ் கட்டியை பிளந்து ஒரு சின்ன கட்டியை எடுத்து தேய்ப்பான். பூப்பூவாக அடியில்விழும் ஐஸ் துருவலை கெட்டியாக ஒரு ஈர்க்குச்சி செருகி பிடித்துக் கொண்டு கலர் கலராக இருக்கும் சர்க்கரை தண்ணீர் ஊற்றி எங்களிடம் கொடுப்பான். ஓரணா கொடுத்தால் ஒரு ஐஸ் குச்சி. சுகாதாரம் தெரியாமல், லக்ஷியம் செய்யாமல் எவ்வளவோ நாள் ருசித்து சாப்பிட்டிருக்கிறேன்.
கன்னியம்மா காலையில் வள்ளலார் மடத்தின் அருகே பூவரச மரத்தடியில் இட்டிலி சட்னி கடை போட்டிருப்பாள். சுட சுட இட்லி பாதாம் இலையில் தருவாள். தேங்காய் சட்னி நீர்க்க தான் இருக்கும். இருந்தாலும் ஆவி பறக்கும் இட்லியும் சட்னியும் வெகு சீக்கிரம் காணாமல் போய்விடும். ஒரு அணா இட்லி.
மத்தியான வேளையில் பள்ளிக்கூடம் அருகே பொன்னையன் ஐஸ் கடை க்கு சற்று தூரத்தில்… (அருகில் எந்த வியாபாரியும் வந்து உட்கார்ந்தாலும் , ஆண் பெண் பாராமல் கெட்ட வார்த்தையில் திட்டுவானே) சுவற்றோரை நிழலில் தரையில் ஒரு பலசரக்கு கடை போடுவாள். ஹார்லிக்ஸ் பாட்டில்களில் சிவப்பு நீளம் பச்சை வெள்ளை மிட்டாய்கள், அவித்த வேர்க்கடலை கூறுகள். ஒரு கூறு ஓரணா . வேகவைத்த சக்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகள், மாங்காய் பத்தைகள், கமர்கட் விற்பாள். நல்ல வியாபாரம். எப்போதும் அவளைச் சுற்றி பையன்கள் கூட்டம் மொய்க்கும். இதைப் பார்த்து பொன்னையன் தூர இருந்தே அவளை திட்டுவான். அப்போதெல்லாம் எங்களுக்கு கம்பியூட்டர் கேம்ஸ், டிவி யூட்யூப்பில், வாட்ஸாப்ப், டெலிபோன் இதெல்லாம் தெரியாது. நிறைய இடம் இருக்கும், ஓடி விளையாடுவோம், விழுவோம், முழங்காலில் சிராய்த்து ரத்தம் வடியும் பையன்கள் தான் அதிகம். சைக்கிளில் குரங்கு பெடல் அடிப்போம். டென்னிஸ் பழைய பந்துகளில் கவர்பால் புட்பால் FOOTBALL விளையாடுவோம். கோல் போஸ்ட் கிடையாது, ரெண்டு செங்கல் இடைவெளி தான் கோல் போஸ்ட். கோலர் அங்கேயே நிற்கமாட்டான், உள்ளே ஓடிவந்து எங்களுடன் பந்தை உதைப்பான். ரூல்ஸ் எல்லாம் பார்க்க மாட்டோம்.குழாய் தண்ணீர் கிடையாது. கிணற்று தண்ணீர் மண் பானைகளில், சில தொட்டிகளில் ஊற்றி வைத்து தான் பள்ளிக்கூடங்களில் அந்த நீரை குடிப்போம். மற்றபடி அவரவர் வீட்டு கிணற்று தண்ணீர் வாங்கி குடிப்போம். சில கடுக்கும். சில தேனாக இனிக்கும். கிணற்றில் நெல்லிக்காய் கட்டைகள் போட்டு ருசியை இம்ப்ரூவ் பண்ணும் வழக்கம் உண்டு. கில்லி தண்டு என்று ஒரு விளையாட்டு, இருபக்கமும் கூறாக சீவிய முனைகளோடு ஒரு சிறு மரத்துண்டு அதை ஒரு குழி மேல் வைத்து ஒரு நீளமான கொம்பினால் தள்ள வேண்டும். எகிறி விழும்போது அந்த துண்டை கட்டையால் கிரிக்கெட் மாதிரி அடிக்க வேண்டும். அந்த இருமுனை துண்டை எவனாவது தூர இருந்து எறிவான் , அது அந்த குழி பக்கம் விழாமல் தடுத்து அடிக்க வேண்டும்.இதில் சான் பாஷா வல்லவன். குறி பார்த்து அடிப்பான். தோற்றவனை காஞ்சி காய்ச்சுவார்கள், அவன் தலைக்கு மேல் கட்டையை இருகைகளால் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும். மரத்துண்டு அடிக்கப்பட்ட இடங்களுக்கு ஓடவேண்டும். அங்கிருந்து வேறு ஒரு இடம் இப்படி ஓடவேண்டும்… ”கத்திக்காவடி நவாப்பு சாவடி….” என்று கத்திக்கொண்டு பல முறை தோற்று ஓடிய அனுபவம் நினைவுக்கு வருகிறது.