எல்லாம் கடவுளாலே தான் டா…… நங்கநல்லூர் J K SIVAN
அடே , ஜெயராமா, சின்ன பையா, கடவுள் யார்? எங்கிருக்கிறார்? எப்படி இருப்பார்? எப்போ வருவார்? என்றெல்லாம் அடுக்கடுக்காக என்னிடம் கேள்விகள் கேட்டாயே, தெரிந்ததை, எனக்கு புரிந்ததை, நான் அனுபவித்ததை சொல்கிறேன் கேட்டுக்கொள்.
உனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் கிட்டே நீ பேசணும்னு ஆசைப்படறியே, அந்த பிடிச்ச ஆசாமி, நீ பேச விரும்பறியே .ஒருநாள் பேசினாயே.அதுக்கு காரணம் தான் அந்த கடவுள்.
ரொம்ப வருத்தம் தாங்காமல், சோகத்தில், துயரத்தில் சுக்கு நூறாக மனம் இதயம் உடைந்து போய் கண்ணீருடன் உன்னருகே ஒருவர் வந்து நிற்கிறார் என்ற போது அவரைத் தோளில் தாங்கி, முதுகை,தலையை தடவி, அவரது துயரத்தில் நீ கொஞ்சமாவது பங்கு கொண்டாயா, ஏற்றாயா? ஆமாம், என்றால் அந்த மனிதர், உன்னைத்தேடி வரும்படி செய்தது தான் கடவுள், நீ அவருக்கு ஆறுதலளித்ததும் அவரால் தான்.
நீ ரொம்ப காலமாக சந்திக்கவேண்டும், பார்த்து பேசவேண்டும், கை கோர்த்துக் கொள்ளவேண்டும் என்று யாரோ ஒருத்தரை மனதில் நினைத்துக் கொண்டிருந்தாய், அவரை ஒருநாள் உன்னெதிரே கொண்டு விட்டால் நீ எவ்வளவு சந்தோஷப்படுவாய், அப்படி கொண்டு விடுபவர், கொண்டு விட்டவர் பெயர் தான் கடவுள். ஒன்று தெரிந்து கொள். எதுவும் எதேச்சையாக தானாக நடப்பதில்லை.
வெளியே சொல்லாமலேயே வெகு காலமாக ஒரு விருப்பம் உன்மனதில் ரகசியமாக இருக்கிறது. அதை நீ அடையச் செய்தால் நீ எவ்வளவு சந்தோஷப் படுவாய்.அப்படி உன்மனதில் இருக்கும் ரஹஸ்யத்தை நீ சொல்லாமலேயே புரிந்துகொண்டு செயல்படுத்திய பொருளுக்கு தான் கடவுளென்று பெயர்.
டேய் ஜெயராமா, முட்டாளே, தெரிந்தோ,தெரியாமலோ ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டாய்.இரவும் பகலும் தூக்கமில்லாமல் எப்படி தப்பிப்பது, வெளியே வருவதுஎன்று தவிக்கிறாய். ஒரு உதவியுமில்லை. அந்த நேரத்தில் ஒரு நாள் காலையில் உனக்கு ஒரு ஐடியா மனதில் தோன்றுகிறது. அதன் படி செய்தால் உன் சிக்கல் கதிரவனைக் கண்ட பனிபோல் தானே ஓடிவிடும் என்று தெரிகிறது.செய்கிறாய். வெற்றியடைகிறாய். அப்படி உனக்கு அந்த சமயோசிதமாக எண்ணம் எப்படி யாரால் தோன்றியது?. நீ தானே வழி தெரியாமல் பல நாள் தூக்கமின்றி தவித்தவன்?. எப்படி அந்த ஐடியா உனக்குக் கிடைத்தது? உனது சிக்கலைத் தனதாக எடுத்துக் கொண்டு அதற்கு தக்க வழி சொல்லிக்கொடுத்தது வேறு யாருமில்லை நீ அறியாத அந்த கடவுள் தான் . புரிகிறதா? அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
உன் மனதில் என்னவென்றே புரியாமல் ஒரு சோகம், ஒரு துயரம் குடிகொண்டிருக்கிறது.உன்னால் நிம்மதியாக இருக்க முடியாமல் நெருப்பு பெருமூச்சு விடுகிறாய். இப்படி பலநாள் தவிக்கிறாய். ஒருநாள் உன்னை யறியாமல் மனம் நிம்மதி அடைகிறது.சந்தோஷம் நிலவுகிறது.உலகம் ஆனந்தமயமான காட்சி அளிக்கிறது.நீ குதூகலத்துடன் ஓடுகிறாய் ஆடுகிறாய் பாடுகிறாய். எப்படி இந்த திடீர் மாறுதல் உண்டானது? யாரால்? அது தான் கடவுள். அவனுக்கு தெரியும். எப்போது உன் சுமையை, துயரத்தை, தான் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று. நீ அவனைத் தேடாமலேயே, கேட்காமலேயே, உனக்கு ஆறுதல் அளிப்பவன் அவன்.
சே, என்ன வாழ்க்கை இது, பேசாமல் செத்துத் தொலையலாம் என்று விஷம் தேடும் அளவுக்கு நீ உடைந்து விட்டாய். அப்போது உனக்கு யார் மூலமோ எதன் மூலமோ எப்படியோ ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது, வாழ்க்கையில் நம்பிக்கை, தைர்யம்,புத்துணர்ச்சி,தெம்பு, உற்சாகம் உண்டானதே. அதற்கு காரணம் தான் அந்த கடவுள். உன் வாழ்க்கையில் எப்போதும் உன்னோடு கூடவே நீ அறியாமல் சேர்ந்து நடப்பவனுக்கு தெரியாதா உனக்கு எது, என்ன, எப்போது,எப்படி தேவை என்று?
கடவுள் கட்டாயம் இருக்கிறார் டா. இல்லை என்று சொல்பவன் கூட அவனைப் பற்றி நினைத்து தான் அவன் இல்லை என்கிறான். நான் இதை உனக்கு சொல்ல வைத்தவனும் கடவுள் தான், என்னை எழுத வைத்தவனும் அவன் தான். உன்னை இதை படிக்க வைத்ததும் அவன் தான். நீ பலருக்கு இதை அனுப்பி வைப்பதற்கும் காரணம் அவன் தான்.எல்லோருக்கும் நல்ல விஷயம் அவனைப்பற்றி சென்று சேரட்டுமே . அதுவும் அவன் ஏற்பாடு தான்…