தோட்ட கோபிநாதன். – நங்கநல்லூர் J K SIVAN
பாரத தேசத்தில் எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு அதிசயம் ஆச்சர்யம் நமக்காக காத்திருக்கும் என்று சொல்லலாம். அவ்வளவு சிறந்த ஆன்மீக பூமி பாரதம். இதுபோல் வையத்தில் வேறெங்கும் இல்லை என்று பாடியவர்கள் அனுபவஸ்தர்கள். ஒரு கோவிலைப் பற்றி சொல்கிறேன். அதை அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தோட்டா என்று ஒரு ஊர் அங்கே ஒரு கிருஷ்ணன் கோவில். கோபிநாதன் என்று கிருஷ்ணனுக்கு பெயர். ரொம்ப அழகானவன். சரி இதில் என்ன ஆச்சர்யம் என்றால். இங்கே தான் கிருஷ்ணன் சப்பளிக்க கால்களை மடக்கிக்கொண்டு நாதஸ்வர வித்துவான் போல் உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் ஊதுகிறான். எங்கேயும் கால்களை பின்னிக்கொண்டு நின்று கொண்டு ஊதும் கிருஷ்ணனைத்தானே நமக்கு தெரியும். சைதன்ய மஹா பிரபு இங்கே வந்து கிருஷ்ணனைப் பார்த்து மயங்கி இருக்கிறார்.
தோட்டா எங்கே இருக்கிறது? ஒரிஸ்ஸா, ஜெகந்நாத பூரி யில். கௌர்பத் சதக் பர்பத் புருஷோத்தம கௌடியா மட ஆலயத்திலிருந்து பொடி நடையாக ஐந்து ஆறு நிமிஷம் நடந்தால் யாமேஸ்வர தோட்டா எனும் சிறிய ஊரில் இந்த கிருஷ்ணனை பார்க்கலாம். தோட்டா கோபிநாத் ஆலயம் என்று பலகை தெரியும். வாசலில் ரெண்டு கல் சிங்கங்கள் வரவேற்கும்.
அங்கே ஒரு சின்ன கச்சேரியே நடக்கிறது. கிருஷ்ணன் ஸார் புல்லாங்குழல். ராதிகா அம்மா கையில் கச்சபி வீணை. லலிதா சகி என்னும் தோழி பின்பாட்டு புல்லாங்குழல். கிருஷ்ணனுக்கு இடமும் வலமும் இந்த வித்வான்கள்.
கிருஷ்ணனுக்கு ஜோடியாக ராதிகாவும் லலிதாசகியும் கூட கருப்பு நிறத்தவர்கள். எல்லோருமே டான்ஸ் ஆடுபவர்கள் என்பதால் ஒரு நளினம்.
இன்னோரு பக்கம் பலராமன் மனைவி ரேவதியோடு வாருணியும் ரசிக்கிறாள். கௌர கதாதரர் அடுத்த பக்கம் ராதா மதன மோஹனனோடு நிற்கிறார். உலகத்தில் எவன் மிகச்சிறந்த நாஸ்திகனோ அவனை இங்கே கொண்டு வந்து கோபிநாதன் முன்பு நிறுத்தினால் அடுத்த கணமே அவன் பரம கிருஷ்ண பக்தனாகி விடுவான் என்று சொல்லும் அளவிற்கு கிருஷ்ணன் மனதை கவர்கிறான்.
இந்த அதிசயத்திற்கு மூல காரணம் கதாதர பண்டிதர் தான். அவர் தினமும் மத்தியானம் இங்கே வந்து கிருஷ்ணன் முன்னால் நின்றுகொண்டு ஸ்ரீமத் பாகவதத்தை பாராயணம் பண்ணுவார். சைதன்யரும் இங்கே வந்து ப்ரஹ்லாத துருவ சரித்திரங்களை நூறு தடவை சொல்லுவார்.
கிருஷ்ணனுடைய பிரிவை சைதன்யரால் தாங்க முடியவில்லை. எங்கே என் கிருஷ்ணன் மஹா பிரபு என்று தேடுவார். கத்துவார். பின்னால் தோட்டத்தில் பூமியை தோண்டி அங்கே இருக்கிறானா என்று பார்ப்பார். அப்படி தோண்டும்போது கிருஷ்ண விக்ரஹ சிலையின் தலை தெரிந்தது. சைதன்யருக்கு பரம சந்தோஷம்.
”கதாதாரா, இதோ பார் எனக்கு கிடைத்த ஒரு அதிசயத்தை.உனக்கு வேணுமா?”, என்று கிருஷ்ணன் சிர விக்ரஹத்தை காட்டினார் சைதன்யர். முழுதும் தோண்டினார்கள். முழு கோபிநாதன் கிடைத்தான். தோட்டத்தில் கிடைத்ததால் தோட்டா கோபிநாத். இங்கே இவனுக்கு சின்னதாக ஒரு கோவில் காட்டுவோம். இனிமேல் கதாதர பண்டிதா நீ தான் அர்ச்சகன்”
ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் இனிமேல் தான் வரவேண்டும். நின்றிருந்த கோபிநாதன் எப்படி காலை பத்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்?
47 வயதே ஆனாலும் கதாதர பண்டிதருக்கு வியாதியின் காரணமாக முதுகு கூன் விழுந்துவிட்டதே என்ன செய்வார்? கையைத் தூக்க முடியவில்லை. கோபிநாதனுக்கு அலங்காரம் பண்ணமுடியவில்லை. நின்றுகொண்டிருக்கும் கோபிநாதனுக்கு நெற்றியில் எப்படி சந்தனம் வைப்பது? எப்படி அவன் கழுத்தில் மாலை சாற்றுவது? கதாதர பண்டிதர் தீவிரமாக சிந்தித்தார். மன வருத்தத்தோடு வேறே யாராவது ஒரு அர்ச்சகரை நியமித்து அலங்காரம் மாலை எல்லாம் அழகாக கோபிநாதனுக்கு அணிவிக்கலாம் என்று தோன்றியது. தேட ஆரம்பிக்கும் முன்னாலேயே கனவில் கோபிநாதன் வந்துவிட்டான்.
”கதாதரா, என்ன யோசனை, வேறு யாரும் எனக்கு அர்ச்சனை பண்ணவேண்டும். நீயே பண்ணு . உனக்கு என்ன ப்ராப்ளம்.?
”கோபிநாத பிரபு, நான் என்ன செய்வேன். என்னால் நிற்க முடியவில்லை. கை எட்டவில்லையே?””இது தான் உன் பிரச்னையா? நாளை முதல் நான் உனக்கு கை எட்டும் அளவுக்கு என் உயரத்தை குறைத்துக் கொள்கிறேன். நீ அர்ச்சனை அலங்காரம் பண்ணிக்கொண்டே பாடினால் தான் எனக்கு பிடிக்கும்” என்றான் கோபிநாத்.
கனவு கலைந்து மறுநாள் கதாதர பண்டிதர் கோவிலுக்கு சென்றபோது அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. கோபிநாதன் சப்பளிக்க பத்மாசனம் போட்டு கைக்கு எட்டுமளவுக்கு உயரம் குறைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உலகத்திலேயே உட்கார்ந்துகொண்டு ஊதும் கிருஷ்ணன் இவன் தான். கதாதர பண்டிதர் தோட்ட கோபிநாதன் முழங்கால் வழியாக அவனோடு ஐக்கியமாகி விட்டார். அர்ச்சகர் இதற்கு அடையாளமாக கோபிநாதன் முழங்காலில் ஒரு தங்கமயமான வடுவை, கீரலை, அடையாளம் காட்டுகிறார்.
பூரி ஜெகந்நாதரை தரிசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. ஒருநாள் தோட்ட கோபி நாத னையும் தரிசிக்க வேண்டும். எல்லாம் அவன் அனுக்ரஹம் இருந்தால் தானே நடக்கும்.