ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN
பிருந்தாவன கிருஷ்ணன்
சுகப்பிரம்ம ரிஷி எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு தொண்டையை கனைத்துக்கொண்டு தொடர்கிறார்.
”பரீக்ஷித் மஹாராஜா, கிருஷ்ணன் கதையை கேட்பதற்கு உங்களுக்கு ஆனந்தமாக இருக்கிற தல்லவா? .சொல்பவன் எனக்கு இன்னும் எத்தனை மடங்கு அதிக ஆனந்தம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் .
கிருஷ்ணன் இப்போது வெண்ணெய் திருடும் சிறுவன் அல்ல. அவன் நண்பர்களும் அப்படித்தான். கொஞ்சம் வளர்ந்து விட்டார்கள். அவரவர் வீட்டில் அப்பாக்களுக்கு உதவியாக அவர்களும் இனிமேல் வயல்காட்டுக்கு பசுக்கள் கன்றுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போகும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
ஒரு பழைய நினைவு எல்லோரையும் இன்னும் எல்லோரையும் அதன் அதிர்ச்சியில் இருந்து முழுதும் நீக்க வில்லை.
எப்படி இந்த குட்டி கிருஷ்ணன், பாவம், மர உரலில் கட்டுண்டு ரெண்டு பெரிய மருதமரங்களின் இடையே மாட்டிக் கொண்டு உயிர் பிழைத்தான். எவ்வளவு பெரிய விருக்ஷங்கள் அவை!. ரெண்டுமே வேரோடு சாய்ந்து விழுந்திருக்கிறது. நல்லவேளை ஒன்றுமே கிருஷ்ணன் மேல் விழவில்லை, அவனை நசுக்கி விடவில்லை. தப்பித்தான். எல்லாம் நாம் வணங்கும் கடவுளின் அருள். நந்தகோபன் செய்த புண்யம் , யசோதையின் பாக்யம் என்று தான் சொன்னார்கள் .யாருக்குமே அவர்கள் வேண்டிய கடவுள் தான் கிருஷ்ணன் என்றோ அவன் சாய்த்த மருத மரங்கள் குபேரனின் இரு புதல்வர்கள், அவர்கள் சாப விமோ சனம் கிருஷ்ணனால் கிடைத்தது என்றோ தெரியாதே. தெரியக்கூடாதே!. அது தானே தேவ ரஹஸ்யம். கிருஷ்ணனின் அவதார மஹிமை!.
கிருஷ்ணனை ஆசையாக வாரி கொஞ்சினார்கள் கோபியர்கள். ”கண்ணா, ஆடுடா உனக்கு மிட்டாய் தருகிறேன்” என்று கை தட்டி பாடி ஆட வைத்தார்கள். அவனும் அவர்களை மகிழ்விக்க ஆடினானே .”கிருஷ்ணா, போய் அந்த மரப்பலகையை எடுத்துக் கொண்டுவா, இந்தா இந்த சட்டியை உடைக்காமல் உள்ளே கொண்டு வை” என்று வேலைகள் வேறு வாங்கினாள் யசோதை. எல்லாமே அவன் செய்தானே. ”உன்னால் தூக்க முடியாது இரு நானே வந்து எடுக்கிறேன்” என்று அவன் சக்தி அறியாமல் யசோதையே ஓடி வருவாளே.
சூரிய அஸ்தமன சமயத்தில் கிருஷ்ணனும் நண்பர்களும் கன்றுகளை அழைத்துக்கொண்டு வீடு திரும் புவார்கள். அவர்கள் மேல் எல்லாம் புழுதி, மண். வியர்வை. அப்பா அம்மாக்கள் ஆவலோடு காத்தி ருந்து அவர்களை அழைத்தது குளிப்பாட்டி, புது வஸ்திரம் தந்து, சுவையான சூடான ஆகாரங்களை அளிப்பார்கள். அவர்கள் சாப்பிடும் அழகில் தங்களை மறுப்பார்கள். கண்ணன் வீட்டில் நந்தகோபனும் யசோதையும் இப்படி தான் அவனை அணு அணுவாக ரசித்தார்கள்.
கோகுலத்தில் கம்சனின் ராக்ஷஸர்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எல்லா கோபர்களும் கூடி ஆலோசித்து கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்வது என்று முடிவெடுத்தார்கள். உபநந்தன் என்கிற வயதான கோபன் அழுத்தம் திருத்தமாக சொன்னான்:
”நந்த கோப மஹாராஜா, கண்டிப்பாக கிருஷ்ணன் பலராமன் இவருடைய பாதுகாப்புக்காகவும் இந்த இடத்தை விட்டு உடனே நாம் எல்லோரும் செல்லவேண்டும். பிருந்தாவனத்தில் நிறைய பேர் வாழ்கிறார்கள். அமைதியாக இருக்கிறதாம். அங்கே சென்று இனி வாழ்வோம். முக்கியமாக கிருஷ்ணனுக்கு திரும்ப திரும்ப பேராபத்துகள் சூழ்ந்து கொண்டே இருக்கிறது. எப்படியோ நாம் வணங்கும் தெய்வம் அவனைக் காப்பாற்றி வருகிறது. நாம் இங்கிருந்து உடனே செல்வோம் ”
” பிரிந்தாவனமா, அது எங்கேப்பா இருக்கிறது? என்று கேட்டான் ஒரு இளம் கோபன்.
”நந்தீஸ்வரத்துக்கும் மஹா வனத்துக்கும் இடையே தான் பிருந்தாவனம் என்கிற இடம் இருக்கிறது. நிறைய புல்வெளி, மேய்ச்சல் காடுகள், செடி கொடிகள் நிறைய இருக்கிறது. நம் பசுக்களின் தேவை தானே நம் தேவையும் ஆகும். என் அறிவுரை சரி என்று தோன்றினால் எல்லோரும் மூட்டை கட்டிக்கொள்ளுங்கள், வீடை காலி பண்ணி மாட்டுவண்டிகளில் சாமான்களை ஏற்றுங்கள் எல்லோரும் ஒன்றாக கூட்டமாக செல்வோம். பசுக்கள் கன்றுகள் பின்னால் நடந்துவரட்டும்.”
வீடு காலி இல்லை. ஊரே காலி ஆகிவிட்டது. கோகுலத்து கோப கோபியர் பிரிந்தவனத்துக்கு குடியேறி விட்டார்கள். கோகுல கிருஷ்ணன் இனி பிருந்தாவன கிருஷ்ணன். பிருந்தாவன சூழல், யமுனை ஆற்றங்கரை கிருஷ்ணன் பலராமன் இருவருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. நண்பர்களோடு கிருஷ்ணன் பலராமன் சந்தோஷமாக எங்கும் திரிந்து ஓடி ஆடி விளையாடினார்கள்.
ஒருநாள் ஒரு அசுரன் அங்கும் வந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை…..