ஸ்ரீமத் பாகவதம் – கிருஷ்ண சரித்திரம் நங்கநல்லூர் J K SIVAN
ஒரு ”பழ”ங் கதை
யாரைப் புகழ்வது என்பதே தெரியாமல் போகிறது. கிருஷ்ணன் சரித்திரத்தை ஸ்ரீமத் பாகவதத்தில் எழுதிய வேத வியாசரையா, அதை எப்படியோ நமக்கு எழுத்தில் ஆங்கிலத்தில், தமிழில் மற்ற மொழிகளில் தந்த மஹான்களையா, பரிக்ஷித்துக்கு எல்லா விவரமும் எடுத்துச் சொன்ன சுகப்பிரம்ம ரீஷையையா, அல்லது இந்த எழுதுக்கெல்லாம் நாயகனான ஸ்ரீ க்ரிஷ்ணனையா . எல்லோருக்கும் நமது நன்றி கலந்த நமஸ்காரங்கள் முதலில் சொல்லிவிட்டு கண்ணன் எப்படி கோகுலத்தில் வளர்ந்தான் என்று பார்ப்போம்.
விஷமம் தாங்கமுடியாமல் போக, அவனை சமாளிக்க முடியாமல் யசோதை கிருஷ்ணநாய் ஒரு மாற உரலோடு தம்புக் கயிற்றால் கட்டிப்போட்டபோது கட்டுண்ட மாயன் கிருஷ்ணன் அந்த சந்தர்ப்பத்தை மணிக்ரீவன், நள கூபன் எனும் இரு குபேர புத்திரர்களை சாப விமோச்சனம் பெற வைக்க உபயோகப்படுத்திக் கொண்டான். மரமாக நின்றவர்களை மீண்டும் விண்ணுலகம் செல்ல வைத்தாலும் மற்றவர்களுக்கு ஒரே பயம் ஆச்சர்யம். எப்படி குழந்தை கிருஷ்ணன் உயிர் தப்பினான். ரெண்டு பெரிய மருத மரங்கள் வேரோடு சாய்ந்து கிடைக்க நடுவே குழந்தை உரலில் கட்டுப்பட்டு நல்லவேளை உயிர் தப்பினான் என்று கடவுளை வேண்டினார்கள்.!\
இன்னொரு அதிசயத்தை சூட்டோடு சூடாக இப்போதே சொல்லிவிடுகிறேன்.
ஒருநாள் என்ன நடந்தது தெரியுமா?
பிருந்தாவனமும் கோகுலமும் அடுத்தடுத்த ஊர் என்பதால் பிருந்தாவனத்தில் வசித்த ஒரு குடு குடு கிழவி பழங்களை விற்பவள் இந்த ரெண்டு ஊர்களுக்கும் அடிக்கடி வருவாள். அவள் வீட்டிலும் அந்த ஊர் காட்டிலும் நிறைய பழ மரங்கள் உண்டு.அவற்றிலிருந்து தூக்க முடிந்த அளவுக்கு ஒரு கூடையில் பழங்களை நிரப்பிக்கொண்டுவந்து விற்பாள். அவள் பாடும் பாட்டுக்காகவே நிறைய பழங்கள் விற்றுப் போகும்.சில நேரம் குழந்தைகளின் விளையாட்டில் மெய்மறந்து நிறைய பழங்களை சும்மாவே கொடுத்துவிடுவது அவளுக்கு வழக்கம். குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை அந்த பழம் பாட்டிக்கு. கோகுலத்தில் கிருஷ்ணன் பலராமன் என்ற குழந்தைகளின் அதிசய விஷயங்களைக் கேட்ட அந்த பாட்டி ஒருநாள் கோகுலம் சென்றாள். நந்தகோபன் வீடு எது என்று கேட்டு தெரிந்து கொண்டு வாசலீல் வந்து உட்கார்ந்தாள். அரிஷ்டன், பூதகி சகடாசுரன், போன்ற மாறுவேஷ அரக்கர்கள் கிருஷ்ணனைக் கொல்ல வந்து கொண்டே இருப்பதால் தேவகியும் ரோஹிணியும் குழந்தைகளை வெளியே அனுப்புவதில்லை. வெளியாட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அனாவசியமாக யாருடனும் பேச்சு கூட கிடையாது. யாருமே கதவை திறக்கவோ வெளியே வந்து பேசவோ இல்லையா தலால் வெகுநேரம் காத்திருந்துவிட்டு கிழவி திரும்பிச் சென்றுவிட்டாள். மறுநாளும் வந்தாள். அன்றும் குழந்தைகளை பார்க்க முடியவில்லை. மற்ற குழந்தைகளுக் கெல்லாம் பழங்களை வாரி வழங்கினாள். இரண்டுநாள் அவள் வரவில்லை. மூன்றுநாள் கழித்து ஒருநாள் கோகுலம் வந்தாள் . அன்று நிறைய மாதுளை செக்க செவேலென்று பெரியதாக இருந்த வற்றை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
வழக்கம் போல் நந்தகோபன் வீடு கதவு தாள் போட்டிருந்தது. வாயிற் காப்போன் வாசலில் கூர் வேலோடு நின்றிருந்தான்.
“என்ன பாட்டி தினமும் வரே? என்ன வேண்டும் உனக்கு” என்றான் வாயிற் காப்போன்
‘எனக்கென்னப்பா இனி வேண்டும். ரெண்டு அழகான குழந்தைங்க இந்த வீட்டிலே இருக்காமே அதுங்களை பார்க்க தான் வந்தேன்”
“குழந்தைகளை எல்லாம் பார்க்க முடியாதும்மா நீ போ.
“இந்த பழங்களையாவது அவங்களுக்கு குடுக்கிறாயா?”
“பழமெல்லாம் வேண்டாம் நீ முதல்லே இடத்தை காலி பண்ணு”
“கிருஷ்ணன் யாருப்பா, பெரியவனா, சின்னவனா”?
” யாரங்கே குழந்தைகளை பத்தியெல்லாம் பேசறது” என்று யசோதை கிருஷ்ணனைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்துவிட்டாள்.வயதான பழப் பாட்டியை யசோதைக்கு நன்றாக தெரியுமே வெகுகாலமாக பிருந்தாவனத்தில் வசிப்ப வளாயிற்றே அவளிடமிருந்து நிறைய பழங்கள் வாங்கியிருக் கிறாளே.
“அட, பழக்கார பாட்டியா. எங்கே ரொம்ப நாளுக்கப்புறம் இந்த பக்கம் என்று கேட்டாள் யசோதை.
“தினமும் தான் இங்கே வந்து காத்திருக்கிறேன். உன் பசங்களை பார்க்க. உன் பையனா இவன். குறு குறுன்னு அழகா இருக்கானே. இவனுக்கென்ன பேரு வச்சிருக்கே”
“கிருஷ்ணன்”
‘அட இவன் தான் கிருஷ்ணனா?” கிழவி குழந்தையிடம் கையை நீட்டி தாவினாள் .
“கிருஷ்ணா, கிருஷ்ணா, உன்னைத்தாண்டா பாக்க வந்தேன்”
இதற்குள் கிருஷ்ணன் யசோதையின் இடுப்பிலிருந்து நழுவி கீழே இறங்கி நின்றான். மெதுவாக தன் கையால் கிழவியின் பழக் கூடையிலிருந்து ஒரு சிகப்பான மாதுளம் பழத்தை எடுக்க முயற்சித்தான். “டேய் திருடா பழம் சும்மா கொடுப்பேனா. போடா, போய் ஏதாவது கொண்டு வந்து கொடு. பழம் தரேன்” என்று சொல்லி சிரித்தாள் பாட்டி.
பாட்டியும் யசோதையும் ஊர்க் கதை பேசிக்கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் உள்ளே மெதுவாக சென்றான். தன் சிறு கையால் அரிசி பானையிலிருந்து ஒரு பிடி அரிசி கொண்டு வந்தான். மெதுவாக தத்தி தத்தி அவன் நடந்து வருவதற்குள் வழியெல்லாம் அவன் கொண்டுவந்த சிறு கை பிடி அரிசி அவனுடைய சின்னக் கையிலிருந்து பாதிக்கு மேல் கீழே சிந்திவிட்டது. கிழவியிடம் வந்து கையை நீட்டும்போது ஒரு சில அரிசி மணிகளே இருந்தது. அவற்றை கூடையில் போட்டான்.
பொக்கை வாய் திறந்து கிழவி சிரித்து அவனை வாரி மடியில் இருத்திக் கொண்டாள். “உனக்கு வேண்டிய பழத்தை நீயே எடுத்துகோடா” என்றாள். கிருஷ்ணன் ஒரு பழத்தை எடுத்து கொண்டான். யசோதை குழந்தையோடு உள்ளே சென்று விட்டாள். கிழவி பாடிக்கொண்டே திரும்பி சென்றாள். போகும் வழியெல்லாம் அவள் நினைவு கிருஷ்ணன் மேலேயே இருந்ததால் கூடையின் கனம் தெரியவில்லை. வீ டு திரும்பியபோது தான் ஏன் கூடை கனமாக இருக்கிறது என்று இறக்கி வைத்து பார்த்தாள். கிருஷ்ணன் போட்டிருந்த அரிசி மணிகள் முத்து, பவழம், வைரம், வைடூர்யமாக கூடையில் நிரம்பி இருந்தன.
”கிருஷ்ணா” என்று உள்ளத்தின் உள்ளேயிருந்து கிழவியின் குரல் கேட்டதே தவிர அவளுக்கு பேச்சு வரவில்லை. எனக்கும் மேலே என்ன எழுதுவதென்று தோணவில்லை