கண்டும் காணாத கிருஷ்ணன் நங்கநல்லூர் J K SIVAN
துவாரகையில் அரண்மனையில் எப்போதும் கிருஷ்ணனைச் சுற்றி அருகிலே யாராவது இருந்து கொண்டே ருப்பார்கள். அன்று கிருஷ்ணன் தனிமையில் வெகுநேரம் சிந்தனையில் ஈடுபட்டு அமர்ந்திருக்கிறான். கண்கள் எங்கோ தூரத்தில் எதன்மேலோ நிலைத்து நிற்கிறது. துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்துவிட்டது. எந்த காரணத்துக்காக தான் அவதரித்தானோ அது முடிந்துவிட்டதே. மதுராவில் கம்சன் அரண்மனையில் வசுதேவர் தேவகி சிறையில் அடைபட்டுக்கிடந்த போது தான் தோன்றியது முதல்… கோகுலம், பிருந்தாவனம், மீண்டும் மதுரை, துவாரகை…. 125 வருஷங்கள் ஓடிவிட்டதே.. இனி நடக்கவேண்டியது என்ன பாக்கி இருக்கிறது என்று கிருஷ்ணன் தீர்மானித்துவிட்டான். அதன் படி தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு நீண்ட பெருமூச்சு உஷ்ணமாக கண்ணனிடமிருந்து வெளிப்பட்டது…தூரத்தில் கண்ணன் தீர்மானித்தபடியே கடைசி நாடகம் ஆரம்பமாகி விட்டதே. நடக்கும் காட்சிகள் கண்முன் தோன்றுகிறது
கலியுகம் அனர்த்தங்களை கொண்டு வரப்போகிறது என்று உணர்ந்து அதன் தீவிர செயல்களை சற்று கட்டுப்படுத்த, பக்தி பெருக, சில யாகங்களை செய்ய கிருஷ்ணன் அறிவுறுத்தியவாறு துவாரகையில் கண்ணன் மாளிகையில் மஹரிஷிகள் விஸ்வாமித்ரர், அசிதர், கண்வர் ,துர்வாசர், பிருகு ,அங்கிரஸ், காஷ்யபர், வாமதேவர், அத்ரி, வசிஷ்டர், நாரதர் எல்லோரும் சேர்ந்து அவற்றை செயது முடித்து விட்டார்கள். எல்லோரும் தவம் செய்ய பிண்டாரகம் செல்லலாம் என கிருஷ்ணன் சொல்லியாகிவிட்டது. :
அங்கே யதுகுல இளைஞர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கிருஷ்ணன் அனுப்பிய ரிஷிகள் பட்டுவிட்டனர்.
”அடே எவ்வளவு கற்றுணர்ந்த ஞானிகள் இவர்கள்” என்று ஒருவன் சொல்ல, கிருஷ்ணன் மகன் சாம்பன் குறுக்கிட்டான்.
”என்னடா அப்படி உசத்தி இவர்கள்? எல்லாம் அறிந்த ஞானிகள் என்கிறாயே, இவர்களை நாம் எளிதில் ஏமாற்றமுடியுமே” என்கிறான் சாம்பன்.
” சாம்பா, எப்படி சொல்கிறாய் இதை நீ?
இப்போது பாருங்கள் ஒரு வேடிக்கையை என்று குசுகுசு என்று ஒரு திட்டம் தீட்டுகிறான் சாம்பன். அதன்படி,அவன் பெண்வேடம் பூண்டு, வயிற்றில் நிறைய வஸ்திரங்கள் சுருட்டி வைத்து மூடி, ஒரு கர்ப்பிணி போல அந்த ரிஷிகள் முன் அந்த இளைஞர்கள் வருகிறார்கள். ஒருவன் சாம்பனை நடக்கமுடியாமல் திண்டாடுபவள் போல் அணைத்து மெதுவாக அழைத்து வருகிறான். அனைவரும் ரிஷிகளை வணங்குகிறார்கள்.
இந்த சிறுவர்கள் வந்து வணங்கும்போதே அதில் பக்தி, மரியாதை இல்லை என்பதை ரிஷிகள் சுலபமாக அறிகிறார்கள்.
ஒருவன் நாரதரிடம் சென்றான். ”மகரிஷி இந்த கரிய விழி பெண்ணுக்கு உங்களை ஒரு கேள்வி கேட்க விருப்பமாக இருக்கிறதாம்? தயவு செய்து அருளவேண்டும்” என்று நடிக்கிறான்.
”என்ன கேட்கவேண்டுமோ கேட்கட்டும்”
”மஹரிஷி முக்காலமும் உணர்ந்த மஹரிஷிகள் நீங்கள். ஞானிகள், உங்களிடம் பேச வெட்கமும் பயமுமாக இருக்கிறதாம் இந்த பெண்ணுக்கு, நானே கேட்கலாமா அவள் சார்பில்”
” கேள் ”
”இவளுக்கு வயிற்றில் கருவுற்றிருக்கும் சிசு ஆணாக இருக்க வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுமா?”
ரிஷிகளுக்கு எதிரில் நிற்பது பெண் அல்ல, ஆண் . வயிற்றில் இருப்பது சிசுவும் அல்ல, கர்ப்ப வேஷம் என்று துல்லியமாக தெரிந்தது. தம்மை ஏமாற்ற, அவமதிக்க திட்டம் என்றும் புரிந்தது. ஆகவே நிதானமாக பதில் அளிக்கிறார்.
”அடாடா, இந்த பெண் வயிற்றில் ஒரு இரும்பு உலக்கை அல்லவோ பிறக்கப்போகிறது. அதால் தான் உங்கள் யதுகுலமே முற்றிலும் அழியப்போகிறது” என்று சாபமிடுகிறார் ரிஷி.
பயந்து போன இளைஞர்கள் அவசர அவசரமாக வேஷம் கலைக்கும்போது சாம்பன் வயிற்றோடு ஒரு பெரிய இரும்பு தடி இணைந்திருக்கிறதை கண்டதும் நடுங்குகிறார்கள்.
”ஐயோ இப்படி செய்த்துவிட்டோமே இனி என்ன ஆகுமோ, என்று ஓடி அந்த இரும்பு உலக்கையை ராஜா உக்ரசேனன் அரசவைக்கு கொண்டு சென்று அழுதுகொண்டே நடந்ததை சொல்கிறார்கள். நடந்ததை கேட்டு அனைத்து யாதவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
உக்கிரசேனன் மந்திரிகளை கலந்தாலோசித்து இந்த இரும்பு தடியை உடைத்து பொடி செய்து அந்த பொடியை கடலில் கரைத்து விடுவிங்கள்”என்கிறான்.
இரும்பு தடியை முழுதும் பொடியாக்க முடியாமல், சிறு தூள்களாக, துண்டுகளாக்கி கடலில் எரிந்து விட்டார்கள்.கடலில் ஒரு மீன் ஒரு பெரிய துண்டை விழுங்கி விட்டது. கடலின் அலைகள் பொடிகளையும் துகள்களையும் கரையெல்லாம் கொண்டு சென்று ஒதுக்கி விட்டன.அந்த துகள்கள் கடற்கரை பிரதேசம் முழுதும் கூறிய இரும்பு ஈட்டிகளாக,அம்புகளாக வளர்ந்து விட்டன.
ஒருநாள் ஜரா என்கிற வேடுவன் செம்படவன் ஒருவனிடம் இருந்து அவன் கடலில் பிடித்த ஒரு மீனைப் பெறுகிறான். அதன் வயிற்றில் சற்று நீண்ட அம்பு, ஈட்டி முனைக்கு பொருத்தமான இரும்பு துண்டு இருப்பதை பார்த்து, அதிசயித்து, அதை கூறாக்கி ஒரு கம்பின் முனையில் செருகி அம்போ, கையில் இருந்து எறியும் ஈட்டி முனையாகவோ மாற்றிவிட்டான். நடந்தது அனைத்தும் நன்றாகவே கிருஷ்ணனுக்கு தெரிந்தும், நடக்கப்போகும் எந்த ஒரு செயலும் எண்ணமும் தடைபடாமல் நடக்கும்படி விட்டு விட்டான். இனி தனது முடிவு ஒன்றே தான் பாக்கி என்று தெரிந்து அதற்கும் தயாராகி விட்டான் கிருஷ்ணன்.