கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN
கருடபுராணம் ஏதோ ஒரு புருடா, கட்டுக்கதை என்று நினைக்கவேண்டாம். சஸ்பென்ஸ் நிறைந்தது என்று நான் எழுதியதன் காரணம் நமக்கு அது திகில், பயம், நடுக்கம், எல்லாம் உண்டாக்குவதால் தான். அதைத் தவிர அதன் முக்கிய உபயோகம் என்னவென்றால் ஜனங்கள் பாபம் செய்ய அஞ்சவேண்டும், எவருமே சுலபத்தில் ”நாம் தப்பு செய்து விட்டு சுகமாக இருக்கலாம்” என்று பகல் கனவு காணக்கூடாது என்பதற்காக. யாருக்குமே தெரியாமல் நாம் செய்த ரஹஸ்ய தப்புகளை, தீமைகளை எவருமே அறிய முடியாது” என்று அசட்டு தைர்யம் வேண்டாம். எப்போதும் எங்கும் கண்ணும் காதும் கொண்ட சித்ரகுப்தன் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் நோட் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு இருக்கிறான். பூட்டிய அறைக்குள் நாம் செய்வதும் அவன் கண்கள் காதுகள் துல்லியமாக அறியும். இந்த பிறப்பில் மட்டும் அல்ல இதற்கு முன் நாம் பல பிறவிகளில் செய்ததும் அவனுக்கு தெரியும். நமக்கு தெரியாது. அதற்குரிய பலனை அனுபவிக்கும் வரை எவரும் தப்ப வாய்ப்பில்லை.
ஒரு காரியம் செய்யும்போது நாம் நன்றாக யோசித்து விட்டு நமது மனது சொல்லியபடி நல்லதோ கெட்டதோ மனம் விரும்பியபடியே அதைச் செய்து உரிய பலனை அனுபவிக்கிறோம். மஹா விஷ்ணுவுக்கு தெரியாதா எதை எப்போது யார் மூலம் செய்விக்க வேண்டும் என்று? ஒருநாள் நாராயணன் கருடனை அழைத்து ” நீ இந்த புராணத்தை எடுத்துச் சொல் ‘ என கட்டளையிட்டு நமக்கு கிடைத்தது கருடபுராணம். அகஸ்திய சம்ஹிதையில் இடம் பெற்றது. இதை படிக்கலாமா வேண்டாமா என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லை. பயமாக இருப்பதால் படிக்க அஞ்சுகிறோம். மரணம் என்ற சொல்லே தீய சொல் என்று அதை பற்றியே பேசுவதில்லை.
நைமிசாரண்யத்தில் எல்லா ரிஷிகளும் சுதர் கருட புராணத்தை பற்றி குறிப்பிட்டதும்
”ஆஹா வேத வியாசரா தங்களிடம் இந்த புராணத்தை விவரித்தார் ? விஷ்ணு சம்பந்தமான இதை எங்களுக்கு தாங்கள் உபதேசிக்கவேண்டும்”
என்று கேட்டார்கள்.
”ஆமாம், நான் பதரியில் வேத வியாசர் சில முனிவர்களோடு சென்று அங்கே பகவானை தியானம் பண்ணிய போது கூடவே இருந்தேன்.
”வியாஸ மஹரிஷி, நீங்கள் பகவானோடு ஒன்றி தியானம் செய்பவர்.இந்த பிரபஞ்ச காரணன் ஹரியை பற்றி எங்களுக்கு காது குளிர சொல்லவேண்டும்” என்றேன்
”சுதா, எனக்கு நாரதர், தக்ஷன் இன்னும் பலர் முன்னிலையில் ப்ரம்மா தான் கருட புராணத்தை உபதேசித்தார்.’
ப்ரம்மலோகத்தில் நான், தக்ஷன், நாரதர், ப்ருகு, இன்னும் பலர் பிரம்மாவை நமஸ்கரித்து அவர் சொல்ல காத்திருந்தோம்.
ப்ரம்மா அப்போது என்ன சொன்னார் தெரியுமா?
”வியாஸா எனக்கும் ருத்ரன் சிவனுக்கும் இந்த கருட புராணத்தை சொன்னது மஹா விஷ்ணு தான். நான் கேட்டதை உங்களுக்கு சொல்கிறேன்”
”இந்திராதி தேவர்களுடன் நான் கைலாசம் சென்ற போது ருத்ரன் தியானத்தில் இருந்தார், அவரை வணங்கினோம் . எங்களுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டோம்.
”ப்ரம்மதேவா, நானே சர்வ வியாபியான மஹா விஷ்ணுவை தான் த்யானம் பண்ணிக் கொண்டிரு ந்தேன். அவர் அணுவிலும் அணு. மஹத்திலும் மஹத். சஹஸ்ர (ஆயிரம்) சிரமுடையவர். ஆயிரம் கண்ணுடையவர். எதெல்லாம் சிறந்ததோ அது அவரே. மஹா புருஷன் என்று அழைக்கப் படுபவர். அவரே சங்கர்ஷணன் எனும் சம்ஹார மூர்த்தி. பிரபஞ்சமே உருவானவர், தன்னில் பிரபஞ்சத்தை உடையவர். ஸ்வேத திவீபம் எனும் வெண்ணிற ஜல பிரதேசத்தில் (பாற்கடல்) உறைபவர் ” என்றார் பரமேஸ்வரன் .
பரமசிவன் நாராயணனிடம் ”ஹரி, தேவாதி தேவா, , வணங்கப் படவேண்டிய ஈஸ்வரன் யார், அதற்கான முறை என்ன, விரதம், ப்ரீதி செய்யும் வழி பாடு யாவை, அவர் எது? எவரிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவானது ? யார் அதை காப்பது? அவர் அவதாரங்கள் என்ன? எவரில் சர்வமும் அடக்கம்? மன்வந்தரங்கள் உருவாகிறது? இவற்றை விளக்கவேண்டும்”” என்று கேட்கிறார்.
அப்போது தான் ஹரி, ருத்ரனுக்கும், பிரம்மா மற்றும் தேவாதி தேவர்களுக்கும் ஈஸ்வர மஹிமை, யோக சாஸ்திரம், பதினெட்டு ஞான மார்கங்கள் பற்றி உபதேசிக்கிறார்.
”உங்கள் கேள்விக்கு பதில் நானே. வேண்டுவோர்க்கு அருள்பவன், காப்பவன், பிரபஞ்சம் உருவாகும் வித்து. ரக்ஷிப்பவன், அழிப்பவன், தீயவர்களை ஒடுக்குபவன், மத்ஸ்ய (மீன்) முதலான அவதாரங்களை எல்லாம் கொண்டு பூமியை காப்பவன். .மண்ணும் விண்ணும் தோற்றுவித்தவன். சகல ஸாஸ்த்ரங்களும் , ஞானமும் நானே. தியானமும் நானே , தியான பலனும் நானே. சகல மண்டலங்களும், இதிகாசங்களும் நானே.
”ருத்ரா, நானே எல்லா தெய்வமும். சம்போ, ஞானத் தின் எந்த உருவமும் நான் தான். நானே ப்ரம்மா, சிவன் அம்சமாக உள்ளேன். சகல வர்ணமும் நானே. சூர்ய , சந்திர, கிரஹங்களும் நானே.” என்கிறார் மஹா விஷ்ணு பின்னர் ஒருநாள் மஹா விஷ்ணு பூமியில் தன்னை வேண்டி தவமிருந்த கருடனிடம் ‘
”கருடா,, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?” என்றார்.
கருடன்
”ஓ ஹரி, என் தாய் வினதை, நாகர்களிடம் அடிமையாக இருக்கிறாள். தேவர்களை வென்று அம்ருதத்தை பெறவேண்டும். என் தாயை நான் அடிமைத்தளை யிலிருந்து மீட்க வேண்டும். எல்லாவற்றிலும் மேலாக நான் தங்களின் வாகனமாக வேண்டும். சக்திமானாக, என்றும் எங்கும் தங்களை இணை பிரியாதவனாக, நாகர்களின் எமனாக புராண சம்ஹிதைகளை இயற்றும் ஆசிரியனாக இருக்க அருள் புரியவேண்டும்” என்றான். விஷ்ணு ” ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று கருடனுக்கு வரம் தந்தார்.
நாகர்களிடமிருந்து தனது அம்மா விநதையை கருடன் விடுவித்தான். தேவர்களை வென்று அம்ருத கலசத்தை கொண்டுவந்தான். வேகமான, கனமான, நிரந்தரமான வாகனமாக கருடன் விஷ்ணுவுக்கு சேவை செய்து வருகிறான். அவன் இயற்றியது தான் கருடபுராணம்.
நாம் கருடனை உபதெய்வமாக விஷ்ணு கோவில்களில் வணங்குகிறோம் . புராணங்களில் மேன்மை யான ஒன்று விஷ்ணுவின் அருளால் கிடைத்த கருடபுராணம். கருடன் அதை காஸ்யப மகரிஷியிடம் கூறி, அதை அவர் பிரயோகித்து கருகி எரிந்து போன ஒரு மரத்துக்கு புத்துயிர் அளித்தார்.