கோபியர் கொஞ்சும் ரமணா.. நங்கநல்லூர் J K SIVAN
கிருஷ்ணன் ஒரு வினோதமான தெய்வம். இப்படி ஒரு தெய்வம் மனிதர்களோடு சரி சமானமாக அவர்களில் ஒன்றாக பழகி வாழ்ந்ததாக வேறெங்கும் காண முடியவில்லை. அவன் பிரிந்தாவனத்தில் கோகுலத்தில் கோபியர்களின் அன்பில் ஆதரவில் வளர்ந்தவன். ஸூர்தாஸ் இதைப் பற்றி கூடை கூடையாக நிறைய பாடுகிறார். அவரைக் கேளுங்கள். . கோபியர்களின் கிருஷ்ண பக்தி ஈடற்றது. கிருஷ்ணனை நினைக்கும்போது கோபியரை நினைக்காமல் இருக்க முடியாது. அதுவும் அவர்களில் ஒருவளான ராதா ராணி கிருஷ்ணனின் நிழல். ராதை தான் கிருஷ்ணனுக்கு அற்புத மான உணவு வகைகளை விதம் விதமாக கோகுலத்தில் பண்ணிப் போடுபவள் . ஒருநாள் கோபியர்கள் சிலர் தங்கள் வீட்டில் இருந்து அவனுக்கு பிடித்த தின் பண்டங்களைப் பண்ணி அவன் சாப்பிட எடுத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்கு வந்தார்கள்.
அவர்கள் வந்த நேரம் நந்தகோபன் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஸ்ரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணன் முகத்தில் சந்தோஷம். நன்றாக பிடித்த உணவை அப்போது தான் சாப்பிட்டு முடித்திருக்கிறான் அல்லவா. வெளியிலிருந்து வந்த கோபியர்களுக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை. தாங்கள் கொண்டுவந்த உணவை கிருஷ்ணன் தொடவில்லையே, உண்ணவில்லையே என்ற ஏமாற்றம் எதுவும் மனதில் ஏற்படவே இல்லை. கொண்டு வந்ததெல் லாவற் றையும் அங்கேயே வைத்து விட்டு ஓடி கிருஷ்ணனிடம் வந்தார்கள். அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி தான் அவர்களுக்கு பிடித்திருந்தது. அவனும் அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு அங்கே வெகுநேரம் ஆடி ஓடினான்.
எதனால் கோபியர்கள் வருத்தமோ ஏமாற்றமோ அடையவில்லை தெரியுமா? ஒருவேளை அவர்கள் கொண்டு வந்த உணவை அவன் சாப்பிட்டிருந்தால் அதனால் அவன் இந்த அளவு சநதோஷமாக இருந்திருக்க முடியாதோ என்ற சந்தேகம் அவர்கள் மனதில் எழுந்து விட்டது. அவர்கள் விரும்பியது கண்ணன் முகத்தில் சந்தோஷத்தை தான். அதை அவர்கள் உணவால் அவன் அடைந்தால் என்ன வேறெவர் அளித்ததால் அடைந்தால் என்ன என்ற பரந்த மனது அவர்களுக்கு.இது தான் கோபியரின் பக்தி பாவம். இந்த ஒரு குணத்தையாவது நாம் கோபியரிடமிருந்து கற்றுக் கொள்வோமா?