நன்றி கிருஷ்ணா — நங்கநல்லூர் J K SIVAN
‘உனக்கு இந்த வினாடி வரை என்ன தேவையோ அதை நானே கொடுத்து விட்டேன். உன் பிரார்த்தனை, எண்ணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. ஏதாவது கேள் முடிந்தால் தருகிறேன்’
‘இப்படி யார், யாரிடம், எப்போது, எங்கே, சொன்னது?
சரித்திரமோ, புராணமோ,இதிகாசமோ எதிலும் தேடவேண்டாம் ஸார்,
இதோ என்னெதிரே சுவற்றில் தினமும், எப்போதும் என் கண் எதிரே என்னைப் பார்த்துக்கொண்டே .. நான் பார்த்துக்கொண்டே இருக்கும்.. அவன், அதோ அந்த கிருஷ்ணன் தான், வாயில் புல்லாங்குழல் இருந்தும் எடுக்காமலேயே என்னோடு அப்படியே பேசுகிறான். அவனை நான் தூக்கத்திலும் மறக்காதவன்.
‘நீயா பேசுகிறாய் கிருஷ்ணா?’
‘என்னடா உனக்கு சந்தேகம், அர்ஜுனனிடம் பேசியது போல் தான் உன்னிடமும் பேசுகிறேன், எல்லோரிடமும் பேசுகிறேன்’
‘நன்றி கிருஷ்ணா, என் மனதில் ரொம்ப நாளாக ஒரு எண்ணம், அதை உன்னிடம் கேட்கட்டுமா, நிறைவேற்றுகிறாயா?’
‘சொல் பார்க்கலாம்”
‘நீண்ட காலம் வாழ்ந்து விட்டேன், நிறைய தோல்விகளை சந்தித்தவன், நிறைய தப்புகள், தவறுகள் பண்ணினவன், பாபங்கள் மூட்டையாக சுமக்கிறவன்…எனக்கு இன்னொரு பிறவி கொடுத்து ஒரு சான்ஸ் அளிக்கிறாயா, ஒரு தப்பும் தவறும் பண்ணாமல் வெற்றிகரமாக உன்னையே பாடவேண்டும் என்று ஆசை’
‘முட்டாளே, இதற்கு எதற்கு இன்னொரு பிறவி? சுற்றி வளைத்து மூக்கை தொடுகிறாயே. அவ்வளவு காலம் எதற்கு? உனக்கு ஒரு இதயம் கொடுத்திருக்கிறேனே. மனதில் பரிசுத்தமாக செய்த தவறுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்டு, இனி செய்ய மாட்டேன் என்ற உறுதியோடு ஒரு கணம் மனம் திருத்தி வைராக்கியத்தோடு பழைய தவறுகளை செய்யாமல், யாரையும் வெறுக்காமல், புண்படுத்தாமல், செய்த தவறுகளின் பலனை என் மேல் போட்டுவிட்டு, நாளை முதலே புது மனிதனாக மாற வழி வைத்திருக்கிறேனே. உபயோகப்படுத்திக் கொள். இக்கணம் முதலே நீ புதிய மனிதனாக புது வாழ்க்கைப் புத்தக ஏட்டை திற. சொச்ச காலத்தை சுகமாக வாழலாம். இதையே திரும்ப திரும்ப எத்தனையோ ஸ்லோகங்களாக ஆயிரக்கணக்கான வருஷங்களாக சொல்கிறேன், யாரும் கேட்கமாட்டேன் என்கிறீர்களே’
‘கண்ணா, வெகு அருமையடா. இன்னும் கொஞ்சம் ஏதாவது சொல்லேன்.’
‘இளையவர்கள், குழந்தைகளிடம் மனம் நிறைந்த அன்போடு பழகு,
முதியவர்களிடம் மரியாதையோடு உதவு, கருணையோடு சேவை செய்.
இல்லாதவர்களுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு முடிந்த உதவி இரக்கத்தோடு அளி.
எளியவர்கள், பலஹீனமானவர்கள், பலமுள்ளவர்கள், யாராக இருந்தாலும் சமமாக பாவித்து நட்போடு இரு. ஏன் இதையெல்லாம் உனக்கு சொல்கிறேன் தெரியுமா?
ஒருநாள் உனக்கு இதெல்லாம் தேவைப்படும். அப்போது தானாகவே யாரோ வந்து நன்றியோடு உதவுவார்கள்..
‘டேய் , இதையும் மறக்காதே. கண்ணாடி முன் நின்று நீ யாருக்கு எப்போது, எந்த உதவி, சேவையை, கேட்காமலேயே செய்தாய், என்று நினைத்து உன் முகத்தைப் பார். அதில் எவ்வளவு திருப்தி, மன அமைதி தெரிகிறது பார். பிறர் உன் செயலை, சொல்லை, மெச்சி, புகழ்ந்து பேசுவதற்கு முன், போற்றுவதற்கு முன், நீயே உன் மனதை நன்றியுணர்வோடு வாழ்த்து. தொடர்ந்து இப்படி செயல்பட உதவும்.
இதைத் தான் எனக்காக நீங்களே செய்யுங்கள்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்’என்றான் கிருஷ்ணன்.
Namaskaram mama,
Superb post
Thanks