வாழ்வில் வெற்றி. நங்கநல்லூர் J K SIVAN
நாம் ஏன் கிருஷ்ணன், ராமன், சிவன், ஆதி சங்கரர், மஹா பெரியவா போன்றவர்களை அடிக்கடி நினைக்கிறோம்? ஏன் . அவர்களை மறக்கவே முடியவில்லை? நாம் அவர்கள் குணாதிசயங்களை அறிந்து அதிசயிக்கிறோம், நம்மாலும் இப்படி ஏதாவது, அவர்களது குணங்களில் ஏதேனும் கொஞ்சமாவது , கடைப்பிடிக்க முடியுமா என்று முயல்கிறோம்.
ராமனை எடுத்துக் கொண்டால் அவன் 7000 வருஷம் முன்பு இருந்தவன். நமக்கு நமது கொள்ளுத்தாத்தா பெயரோ அவர் உருவமோ, குணாதிசயமோ ஒன்றுமே தெரியாத நிலையில் 7000 வருஷம் முன்பு இருந்த ராமனைப் பற்றி ரொம்ப விஷயங்கள் தெரிகிறதே. ராமன் அவதாரம், தந்தை தாய் சொல் மதித்தவன், ராஜ்யத்தை துச்சமாக வெறுத்தவன். ஏக பத்னி விரதன். சொன்ன சொல் தவறாதவன். எல்லோருடனும் நட்பும் அன்பும் கொண்ட பண்பாளன். குருவை போற்றியவன். வீராதி வீரன். எதிரியிடமும் கருணை காட்டியவன் . இதெல்லாம் நம்மால் பண்ணமுடியாது என்பது நமக்கே தெரியும். எவரும் சொல்ல வேண்டாம்.ராமன் இருந்த காலம் வேறு நம் காலம் வேறு. 7000 வருஷங்கள் ஓடிவிட்டது. காலம் உலகம் எல்லாமே மாறிவிட்டது. இப்போது நாம் என்ன செய்யலாம்?. வாழ்க்கையில் வெற்றிபெற தலையாய காரணம் மனதில் தன்னம்பிக்கை. நம்மால் எதுவும் முடியும். சாதித்தவர்கள் ஏராளமானோர் நம் கண் முன் தெரிகிறார்கள். காற்றில் பஞ்சுபோல், பலூன் போல் அலைபாயாமல், ஒரு குறிக்கோளோடு லக்ஷியத்தோடு வாழ்க்கையை அணுகுவோம். எட்டாததற்கு கொட்டாவி விடாமல் எது நம்மால் முடியுமோ, முயற்சித்தால் முடியுமோ,எது பிறருக்கு முடிந்ததோ அது நம்மாலும் முடியும். முயற்சி தான் திருவினை ஆக்கும்.
மனமும் உடலும், சொல்லும் செயலும் நம் லக்ஷியத்திலேயே குறியாக இருக்கவேண்டும். வெற்றிப்பாதை குறுக்கு வழியோ சுறுக்கு வழியோ இல்லை. நீண்ட நெடிய கரடு முரடான பெரிய பாதை. எண்ணற்ற இடையூறுகள் வழியில் எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் நேர்ந்தாலும் தளரா நெஞ்சும் தைர்ய மனமும் வேண்டும். வெற்றி பெற்றால் நாம் அநேகருக்கு முன்னோடி, GUIDE. வழிகாட்டி. சந்தேகத்துக்கும் பயத்துக்கும் இடம் கொடுக்க வேண்டாம். வியர்வை சிந்தாமல் விளைச்சல் இல்லை. தோல்வி வெற்றி ரெண்டுமே நம்முடைய காரியத்தின் பலன். அதை இன்னொருவர் மேல் சுமத்தவேண்டாம். உண்மையோடு பொறுப் பேற்போம். எல்லாவற்றுக்கும் மேலே நமது கடவுள் பக்தி துணை நிற்கும்.